ஹம்மிங்

எப்போதும்
எதையும் பாடியிராதவள்
யாரும் சமீபத்திலில்லை
என்பதான சூழல்வேகத்தில்
அந்தப் பாடலின்
இடைவரியொன்றைத்
தன்னையறியாது
பாடுகிறாள்
அந்தவரி
அடுத்த கணமே
ஒரேயொரு ஒருவரிப்பாடலாக
அனிச்சைகளின் பேரேட்டில்
தன்னையெழுதிக் கொள்கிறது.
இனிமேல்
அந்தப் பாடல்
என்னைக் கடக்கையிலெல்லாமும்
அந்தவொரு வரி
இவள் குரலில்
தானே கேட்கும்