அந்தாதி

1
இரு
புறங்களிலும்
கரமூன்றிச் சற்றுநேரம்
சும்மா அமர்ந்துவிட்டுப்
புறப்பட ஏதுவாய்
ஒரு கல் இருக்கை
யாருமற்று

2
யாருமற்று
படபடக்கிற
நேரங்கெட்ட தூறலின்
துளிகளைத் தானியமென்றெண்ணி
அமர்ந்தவிடத்திலிருந்து
எழுந்தெழுந்து
வேறிடத்தில் அமர்கிறது
சாம்பல் வெண்
பறவை.

3
பறவையின் ப்ரேதவுடல்
குதறியது போதுமெனக்
கிளம்பியோடும்
புழுதிவண்ண நாயின்
மேனிப்புண்ணிலிருந்து
எழுந்து பறக்கும்
ஈக்களிலொன்று
மீண்டும் வந்தமர்வதற்கு
இடம் நல்கும்
ஒரு சிறகு

4
ஒரு சிறகு
காற்றில்
எழுதப்பார்க்கிறது
தன் பறவைகால
உதிர்கணம்

5
உதிர் கணம்
வரும்.
வரும் வரை
இரு