இன்னொரு நந்தினி
பெருமழைக்காலத்தின் ஆரம்ப கணங்களைப் பெரிய கண்ணாடிச்சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ்.”பாக்கணும்டா” ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காஃபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக் கொண்டு மறுபடி மழை பார்க்க வந்தேன்.இன்னும் ஆரம்பிக்கவில்லை.மழைக்கு முந்தைய காற்றும் லேசாய்த் தெறிக்கும் தூறலும் மட்டுப்பட்டாற் போல் தோன்றியது.அடுத்த வினாடி மீதான அறியாமை தான் எத்தனை அழகு.?நகரத்தின் முக்கிய சாலையில் அவ்வளவாகப் பரபரப்பில்லை.இன்று ஏதோ லோகல் விடுமுறை.இல்லாவிட்டால் சாலையை இன்னேரம் விழுங்கி இருக்கும் பள்ளிக்கூடக் கூட்டம்.காது பக்கத்தில் “இன்னிக்கு மழை வரக்கூடாது” என்றான் அருண்,
திரும்பி முறைத்து “ஏன் பிசாசு மழையை வெறுக்கிறே..?”
“முறைக்காதேக்கா…
“போன மாசம் இதே மாதிரி மீட்டிங்குக்குக் கெளம்பினியே அருண்..ஏரோப்ளேன்ல மீட் பண்ணதா சொன்னியே..?” என் கேள்வியை அவன் காதில் வாங்காத போல நடித்தான் சடாரெனத் திரும்பி முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு “அவளுக்கு அத்தை பய்யன் இருக்கானாம்.மின்னசோட்டா போறவழில பேச்சு துணைக்கு என்னை அணுகியிருக்கா.எங்கிருந்தாலும் ஒழிகன்னு துப்பி அம்ச்சிட்டேன்..” கொஞ்சம் சப்தமாக சிரித்துவிட்டு “ஆல் தி பெஸ்ட்” என்றேன்.
“வர்றேங்க்கா” என்றவாறே காணாமற் போனான்.
அன்றைய வேலையை முடித்து விட்டு ஸ்கூட்டியில் நந்தனம் சிக்னல் தாண்டி ‘சேமியர்ஸ்’ என்று வெள்ளைக்காரத் தனமான கட்டிடத்தின் உள்ளே சென்று வண்டியை நிறுத்தி ஹெல்மெட்டை லாக்கிட்டு உள்ளே சென்று படியேறினேன்.மேலோட்டமாய்ப் பார்த்தால் சென்னையின் அராஜகங்களில் ஒன்றாகவே தெரியும் அந்த டீஷாப் இரண்டு பேர் ஆளுக்கொரு கேக் காஃபி சாப்பிட்டால் ஆயிரத்துக்கு அருகாமையில் பில் வரும்.வேற எடத்துக்குப் போகலாம்ல என்றால் நந்தினி ஒத்துக் கொள்ள மாட்டாள்.
“நோ பப்பு…ப்ரைவஸின்றது எவ்ளோ பெரிய விஷயம் தெரியும்ல..?அதுக்கும் சேர்த்துத் தான் இந்த விலை..விடு பப்பு..” என்பாள்.
நந்தினியோடு அடிக்கடி வந்து எனக்கும் அந்த இடம் பிடித்துத் தான் போயிருந்தது.ஒரு சுவர் முழுவதும் பழங்கால கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கும்.அழகுக்காக எதையாவது பெயர்த்துத் தருபவர்களுக்கு மத்தியில் அத்தனை புகைப்படங்களும் நூற்று இருபது வருடங்களுக்கு முந்தைய ரத்தமும் சதையுமாக வாழ்ந்து இல்லாமற் போன மனிதர்களின் புகைப்படங்கள்.முதல் முறை அங்கே போய்வந்த அன்று இரவு எனக்கு நெடு நேரம் உறக்கமே இல்லை.”நாம் இன்னும் நூறு வருஷம் கழிச்சி என்னவாயிருப்போம் நந்து..?” என்று ஃபோனில் கேட்டேன்.”.ஃபன்னி யார்..” என்றவள் சற்று நேரம் கழித்து “ஆமாம்ல…?நம்ம சந்ததியில யாராச்சும் நம்மளை நினைச்சிப் பார்ப்பாங்களா..?நீயும் நானும் முன்னோரை எவ்ளோ நினைக்கிறோம்..?அவ்ளோ தான்.எதைப் பார்க்கிறோமோ எதில் இருக்கிறோமோ அது மட்டுந்தான் நிஜம்.எவ்ளோ இருக்கோம்.அவ்ளோவும் இல்லாமப் போயிருவோம்” என்றாள்.
எப்போதோ படித்த நகுலனின் கவிதை ஞாபகம் வந்து கனத்தது.டீஷாப்பின் டிஸ்ப்ளே பகுதி பழங்காலப் பொருட்களின் கூடுகையாக அட்டகாசமாய் இருந்தது.இன்னும் நந்தினி வரவில்லை.அவள் வரும் வரை பழைய கால ரேடியோ துவங்கி ஃபோன் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.தூரத்திலிருந்
நந்தினி சொல்வாள் “பணம் பணமா இருந்தா பத்தாது.எனக்குப் பணம் ஒரு நாய்க்குட்டி மாதிரி வேணும். அப்பிடி இல்லாட்டி லைஃப் அலுத்துடும்.” முன் நெற்றியில் வந்து விழுந்த கற்றை முடியை ஒதுக்கியபடியே
“ரொம்ப நேரமா காத்திருக்கியா பப்பு..?” என்றாள்.
“இல்லடா..ஒரு பத்து நிமிஷம் இருக்கும்..” என்றேன்.
நந்தினியை முதன்முதலில் ஒரு பார்லரில் சந்தித்தேன்.பிரபு என்னை ரொம்ப இம்சித்ததாலும் சொந்தக்காரர்களின் கலியாணத்துக்கு மதுரைக்கு செல்லவேண்டியிருந்ததாலும் ப்யூட்டி பார்லர் போனேன்.எதிர் நாற்காலியில் இருந்தவள் தான் நந்தினி.முதலில் அவள் தான் ப்யூட்டிஷியனோ எனக் குழப்பமானேன்.இன்னும் என்ன பாக்கி என்று இங்கே வந்திருக்கிறாள் எனத் தெரியவில்லையே என நினைக்குமளவு மேக் அப் உடன் இருந்தாள்.பெப்பர்மிண்ட் வாசனையோடு.எனக்கு ஃபேஷியல் நடந்த போது எனக்கு எதிர்த்தாற்போல் அவள் அமர்ந்து கொண்டாள்.அவளது பாதங்களை சீரமைக்கும் வேலையை ஒருத்தி பார்த்தாள்.முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது.எல்லாம் பணத்திமிர் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் இன்னொருத்தியின் கால்களை எந்த அசூசையும் இல்லாமல் தன் கரங்களால் கழுவித் தேய்த்து அலம்பி நகம் வெட்டிவிட்டு எல்லாம் செய்துகொண்டிருந்த அந்தப் பார்லர் பெண் மீது எனக்குப் பெரும் மரியாதை வந்தது.
முடித்துவிட்டு வாசலுக்கு வந்தேன்.ரிசப்ஷனில் பில் செட்டில் செய்துவிட்டு கிளம்பிய போது பெப்பர்மிண்டாள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.இருவரும் வெளியே வரும் போது அவள் தன் கையை நீட்டி ‘நந்தினி’ என்றாள்.எதிர்பாராததால் ஒரு கணம் திணறி “நான் பவித்ரா.” என்று கைகுடுத்தேன்.”உங்களை கவனிச்சுக்கிட்டே இருந்தேன்.இதுக்கு மின்னாடி பார்லர் வந்ததில்லையா நீங்க..?நான் பெடிக்யூர் செய்துகிட்டப்போ உங்க முகத்தில சின்னதா ஒரு ஆத்திரத்தைப் பார்த்தேன்”
எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை நான் ஏன் மறைக்க வேண்டும்.ஆமாம் என்றாற்போல் தலையாட்டினேன்.”இதுல என்ன தவறுது..?ஸீ பணம் இடம்மாறுதில்லையா.?இதை ஒரு வேலையா யோசிங்க..ஒரு தொழிலா புரிஞ்சுக்கங்க..கோபம் வராது..” என்றவள் டக் டக்கென்று நடந்து காரில் ஏறிக் காணாமல் போனாள்.
நந்தினி பதற்றத்தில் இருக்கிறாள் என்பது அவளது முகத்தில் தெரிந்தது.அவளாகப் பேசட்டும் என நான் காத்திருந்தேன்அவள் தவித்தாள்.பேரரைக் கூப்பிட்டு எதெதையோ ஆர்டர் செய்தாள்.அவளது துடிக்கும் உதடுகளின் மத்தியில் லேசான புன்னகை பொருத்தமற்ற மேலாடையைப் போல் துருத்திக் கொண்டிருந்தது.செந்தமிழ்த் தேன் மொழியாள் பாடலில் வருமல்லவா..?பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்…அந்த ஃப்ளா ஃப்ளா அழகி நந்தினி தான்.
“என்னப்பா..?”என்றேன்.அதற்காகவே காத்திருந்தாற் போல் என் முகத்தருகே வந்து “ஒரு முக்கியமான விஷயம்..” என்றாள்.நான் என்னவோ சொல்லப் போகிறாள் எனப் பார்த்தால் “ஐம் இன் லவ் பப்பூ..” என்றாள்.எனக்குப் புரியவில்லை.”மீன்ஸ் வாட்..?”
“டோண்ட் யூ நோ ஸ்டுப்பிட்..நான் ஒருத்தனைக் காதலிக்கிறேன்..” என்றாள்.
நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.”எதாச்சும் சொல்டா…திட்டவாவது செய்யி..ஒண்ணும் பேசாம உம்னு இருக்கே..அழுத்துது பப்பு” என்றாள்.உச்சபட்சப் பதற்றத்தில் லேசாய் நடுங்கும் தன் கரங்களை சமாளித்தபடி சொல்லேன் “பப்பு…..எதாச்சும் சொல்டா..” மறுபடி கெஞ்சினாள்.
“இரு…இரு..” என்று தண்ணீரை எனக்குள் சரித்துக் கொண்டு “நீ சொன்னதுமே நான் ரியாக்ட் செய்யமுடியுமா நந்தினி..?உள்வாங்கிக்க வேண்டாமா..?எனக்கு கொஞ்சம் டயம் ஆவாதா..?நீ பதற்றமா சொல்றதைப் பார்த்தா நீ லவ்னு அர்த்தப்படுத்துறது சங்கீத்தை இல்லைனு புரியுது”.சங்கீத் அவளது கணவகோடீஸ்வரன்.
அவள் முகம் உர்ரென்று விளக்குகள் அணைக்கப்பட்ட கொண்டாட்டக் கூடம் மாதிரி ஆனது.இன்னும் வேகமாய் இருளை வரவழைத்துக் கொண்ட அவளது விழிகளின் ஓரத்தில் லேசாய்த் துளிர்த்தது.நான் எதும் பேசாமல் அவளது வலக்கரத்தைப் பற்றிக் கொண்டேன்.அப்படியே இறுக்கமாய்ப் பற்றினபடி இருந்தேன்.இரண்டு முழு நிமிடங்களுக்குப் பிற்பாடு “நந்தினி…சொல்லு..யார் உன் ஹீரோ..?”.
மூக்கை உறிஞ்சினபடி “உனக்குத் தெரியும்ல பப்பு….சங்கீத் என்னை ஒரு அதிருஷ்ட பொம்மை மாதிரி வெச்சிருக்கான்.அவனுக்கு நான் சிம்பல் ஆஃப் லக்.அவன் பணத்தைத் துரத்திட்டே இருக்கான்.என்னைத் திரும்பிப் பார்க்குற நேரமெல்லாம் என்னை மிஸ் பண்றதா எங்கிட்டே ஸாரி கேட்டுட்டே இருக்கான்.கல்யாணம் ஆகி முதல் ரெண்டு வருஷம் தித்திச்சது.ரிஸ்வா பொறந்தா.நவ் அவ மட்டுந்தான் எனக்கு சந்தோஷம்.எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாம இருக்கிறது கொடுமை.எதுக்கு இவ்ளோ பணம்.நான் சிரிச்சாலும் அழுதாலும் கேட்க ஆளில்லை.இந்த நிமிஷம் சங்கீத் எந்த நாட்டுல இருக்கான்னு அவனுக்கு மட்டுந்தான் தெரியும்.”என்று லேசாய்க் கண் கலங்கினாள்.
அவளே மறுபடி “நந்தினி நீ என் மனசாட்சி மாதிரி.நான் உடம்பு பத்தி மீன் பண்ணலை.அதுக்கு நிறைய்ய வழிகள் இருக்கு.எனக்கு மனசுன்ற ஒண்ணு படுத்துது.நான் காதலிக்கப் படணும்.கொண்டாடப் படணும்.எனக்கு வெளில எனக்கான ஒரு மனசு துடிக்கணும்.ஆயிரந்தான் நீ இருந்தாலும் நட்பைத் தாண்டி காதலை என் மனசு தேடிட்டே இருக்கு.இது பாவம்னா நான் நூறு சதவீதம் இந்தப் பாவத்தை செய்ய விரும்புறேன்.ஐ நீட் எ சின்..” என்றாள்.
நான் அதிர்ந்தேன்;நந்தினியின் கண்களையே பார்த்தேன்.
“பப்பு இப்ப அவனை வரச்சொல்லி இருக்கேன்.எதிர்பாராத நேரத்துல நம்ம வாழ்க்கையை கிராஸ் பண்ற ஒரு நறுமண வாசனை மாதிரி அவன் வந்தான்.அவனை என்ன செய்து தக்கவெச்சிக்கிறதுன்னு எனக்கே தெரியலை.நான் எத்தனையோ விதமான ஆண்களைப் பார்த்திருக்கேன்.பட் இவன் வேற ஒருத்தன்.ஏலியன்.மகா திமிர் பிடிச்சவன்.ரொம்ப நல்லவன்.முன்னாள் பொறுக்கி.என்னை ரொம்ப விரும்புறான்.ஆனா சொல்ல மாட்றான்.என் வாழ்க்கையில எனக்கு தேவைப் படுற வெளிச்சத்தை இவனால ஏற்படுத்த முடியும்னு நம்புறேன்.எனக்காக அவன் கிட்டே பேசு.வரச்சொல்றேன் என்றவள் என் பதிலுக்குக் காத்திராமல் ஃபோனை எடுத்து “பாரி…வர்றியா..?ம்…..ம்..”
சற்று நேரத்தில் I DONT WAKE UP EVERY DAY TO IMPRESS YOU என்று எழுதப்பட்ட மெரூன் நிற டீஷர்ட்டுடன் வந்து ஹாய் என்றவாறே அமர்ந்தான்.
“ஹீ இஸ் பாரி.பாரி..இது பப்பூ அலைஸ் பவித்ரா..மை ஹார்ட் பீட்..” என்றாள் நந்தினி.
“THEN WHO AM I.?அப்டின்னா நான் கெளம்புறேன்..இவங்க தான் உன் ஹார்ட் பீட்டா..?என்று பொய்க்கோபம் காட்டி எழப்போனவனை ஆயிரத்து ஒரு ஸாரி சொல்லி அமர வைத்தாள் நந்தினி.
பாரி பவித்ராவை விட நாலைந்து வயதாவது குறைவானவனாய் இருப்பான் எனத் தோன்றியது.சிக்கனமான மீசை தாடி எப்போதும் எதையாவது கவனித்துக் கொண்டே இருக்கும் சிறு பூனையினுடைய கண்கள் நேராய் கூராய் இறங்கும் மூக்கு ஒல்லியான தேகம் என தனித்தனியாகவும் மொத்தமாகவும் இன்றைய இளைஞனின் ஒரு பிரதி மாதிரி இருந்தாண். நந்தினி இப்படி கிறங்கிப் போக அவனிடம் என்ன இருக்கிறது என சத்தியமாய்ப் புரியவே இல்லை.
நான் அங்கே இல்லாதது போலவே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அடிக்கடி சிரித்துக் கொண்டு விரல்களைப் பற்றிக் கொண்டு எனக்கு ஏனோ ஆத்திரமாய் வந்தது.ஆனாலும் அடக்கிக் கொண்டு “எக்ஸ்யூஸ் மீ நந்தினி..நான் வேணா கெளம்பவா..?”என்றேன்.அதன் பின் ஸாரி சொல்லிவிட்டுப் பாரியும் அவளும் எப்படி சந்தித்தார்கள் எங்கே தீ பற்றிக்கொண்டது என்றெல்லாம் பேசினோம்.நேரம் போனதே தெரியவில்லை.பாரியின் குரல் அலாதியாய் இருந்ததை அடிக்கடி கவனித்தேன்.அப்படி ஒரு ஆண்மையான குரலை சமீபத்தில் எங்கேயும் கேட்டதேயில்லை.அவன் விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசியது இன்னும் ஸ்டைலாக இருந்தது.பய்யன் கிராதகன் தான் .நந்தினி இவனிடம் விழுந்ததில் ஆச்சர்யமில்லை.
அவன் பேசியதிலிருந்து ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது.நேராக என் கண்களைப் பார்த்து சொன்னான்.”பவித்ரா…நந்தினி குழந்தை மாதிரி.அவளோட மெண்டல் ஏஜ் பதினாலுக்குள்ளே தான் இருக்கும்னு நம்புறேன்.அவளுக்கு என்ன தேவைன்னு அவளுக்கே தெரியலை.ஆரம்பத்ல நான் கடுமையா மறுத்தேன்.அவ தனக்குள்ளே சுருங்கினா.அவளுக்குத் தேவை பிரத்யேகமா சில வார்த்தைகள்.அதை திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கிற ஒரு ஜீவன்.அது நான் தான்னு நம்புறா.அவளோட உலகம் ரொம்ப சின்னது.இருக்கிறதை உடைச்சி இன்னொண்ணை ஏற்படுத்த முடியாது.இதுக்கு மேல எங்கேயும் எங்க ரெண்டு பேராலயும் போகமுடியாது.அதுல நான் ஷ்யூரா இருக்கேன்.நந்தினி சந்தோஷமா இருக்கணும்.தட்ஸ் ஆல்.எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை..இந்த ரிலேஷன் ஷிப்புக்கு என்ன பேரு…இது நல்லதா கெட்டதா அப்டின்னெல்லாம் நான் யோசிக்கலை.தட்ஸ் ஆல்”
நான் கேட்காமலேயே என் வினாக்களுக்கு அல்மோஸ்ட் விடை தெரிந்தாற்போல உணர்ந்தேன்.இவன் ஆபத்தானவன் அல்ல.புதியவன்.ஆனால் நல்லவன் அன்றைக்கு அவன் புறப்பட்டுப் போன பிற்பாடும் நிறைய நேரம் நந்தினியும் நானும் பேசிக்கொண்டே இருந்தோம்.பிரபு நாலு முறை கூப்பிட்ட பிற்பாடே வீட்டுக்குக் கிளம்பினேன்.
இரவு பனிரெண்டு மணிக்கு குட்நைட் என்று மெசேஜ் போட்டேன் நந்தினிக்கு.அவள் உடனே கால் செய்தாள்.எடுத்ததும்
“ஒரு கவிதை சொல்றேன்யா…என் ஆளு எனக்கு அனுப்பிச்சான்..சூடா உனக்கு சொல்றேன்..” என்றவள் வாசித்தாள்.
என்னது பெரும்பசித்தேடல்.
உன்னது சிறுதுளிக்காதல்
எப்போதும்
போதுவதில்லை.
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னும்
காஆஆஆஆஆஆதல்
வேண்டுமடி.
“மை லக்கி ச்சார்ம்…மை டியர் சோல்..மை டியர் இடியட்…மை லவ்….மை ஒன்லி பாரி..என்று ஃபோனில் கசிந்துருகினாள்..ஏய்..நைட்டு காஜி பண்ணாதே..தூங்கு ஒழுங்கா..” என்று சிரித்துக் கொண்டே அதட்டி விட்டுத் தூங்கினேன்.இது தப்பா இருந்தா இருந்துட்டு போகட்டும்.நந்தினி சந்தோஷமா இருக்கா அது போதும் என்று என் கனவில் பாரி சிரித்துக் கொண்டே சொன்னான்.
அப்ரிவியேஷன் ட்ரெய்னிங் என்று லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.”ஆறுமாசமா” என்று பொய்யாய் மூர்ச்சையாவது போல் நடித்தாலும் “உனக்குத் தான் பாரி இருக்கான்ல” என்று சொன்னதும் வெட்கப்பட்டு சிரித்தாள் நந்தினி.சென்னை ஏர்போர்ட்டில் என்னை வழியனுப்ப பாரியையும் அழைத்து வந்திருந்தாள்.அவனை என்ன சொல்லி பிரபுவுக்கு அறிமுகம் செய்துவைப்பது எனக் குழம்பினேன்.நந்தினி வெகு இயல்பாக “என் கஸின்” என்றாள்.பாரியிடம் “நந்தினியைப் பார்த்துக்கோங்க நல்லா” என்றபோது நான் தான் லேசாய்க் கலங்கினேன்.
“இங்க பார்…உனக்கு என்ன தேவைன்னு உன் மனசை நாலு தரம் கேளு.எதையும் இழக்காம எதை அடைஞ்சாலும் அது தான் புத்திசாலித் தனம்.சில விஷயங்களை மாற்றி அமைக்க முடியாதுன்னு சொல்றதை விட மாற்றி அமைக்கக் கூடாதுன்னு சொல்றது தான் உண்மை.டோண்ட் பீ ஸில்லி..” என்று ஃபோனை வைத்தேன்.
அதன் பின் பதினைந்து நாட்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.ஒரே ஒருமுறை மறந்து போய் நந்தினியின் நம்பரை டயல் ஸ்க்ரீனில் தொட்டதும் கால் சென்றது.பார்த்தால் ஸ்விட்ச்ட் ஆஃப் என்று கேட்டது.அவளாகவே வரட்டும் என்று என் வேலையில் மூழ்கினேன்.
ஒரு வெள்ளிக்கிழமை நீளமாய் ஒரு மெயில் நந்தினியிடமிருந்து வந்தது.என் பழைய கேள்விகளின் நியாயம் தற்போது புரிவதாகவும் பாரியுடனான பந்தம் அடிக்கடி சண்டை வருவதாகவும் பிரிந்து விடலாமா என்று எண்ணுவதாகவும் மெயில் சொன்னது.அதற்கு நான் வாட்ஸ் அப்பில் எது செய்தாலும் யோசித்து செய் என்று மட்டும் அனுப்பினேன்.
எனது ப்ராஜெக்ட் பெரிய சக்ஸஸ் ஆகி அதிக சம்பளத்தோடு என்னை இந்தியா அனுப்பியது ப்ரிடிஷ் கம்பெனி.பிரபுவிடம் “இனிம நாம மிடில் க்ளாஸ் இல்லேல்ல” என்றேன்.”எடம் பார்த்து அடிச்சிட்டே” என்று வாழ்த்திய பிரபு “ஏண்டா கஞ்சத்தனம் வேணாம்டா..நமக்கிருக்கிற ஒரே ஒரு பொண்ணுக்கு தேவையானதை செய்வம்.போதாது..?”என்றார்.பி
அடுத்தடுத்து வேலை கழுத்தை நெறித்தது.இந்தியா திரும்பி இரண்டு மாசங்கள் நந்தினியைப் பார்க்க முடியவில்லை. நந்தினியுடன் போனில் பேசுகையில் ப்ரமோஷன் குறித்து சொன்ன போது கூட அஸ்வாரசியமாகக் கேட்டுக்கொண்டாள்.இரண்டொரு தரம் அவள் அழைக்கும் போது என்னால் பேசமுடியவில்லை.நான் அவளை அழைத்த போது “அப்பறம் கூப்பிடறேன்” என்று மெசேஜ் வந்தது.விட்டாயிற்று.லேசான இடைவெளி ஏற்பட்டிருப்பது நிசம் தான்.
விடாமல் இரண்டு மூன்று முறை அழைத்தேன்.எடுத்தவள் “ஹாய் மை ஸ்வீட் ஹார்ட் எப்டி இருக்கே..?” என்றாள்.ரொம்ப நாளாச்சு உன்ன பார்த்து.நாளைக்கு பார்க்கலாமா எனக் கேட்டேன்.ஷ்யூர் என்றவள் ச்சேமியர்ஸ்ல பார்க்கலாம் என்றாள்.
மறுநாள் சனிக்கிழமை.சாயந்திரம் அதே சேமியர்ஸில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்துவிட்டுக் கிட்டத் தட்ட எழுந்து போய்விடலாம் என்று நினைத்த போது ஹல்லோ பப்பு என்றவாறே வந்தாள் நந்தினி.உடன் எதிர்பாராத சர்ப்ரைஸாக சங்கீத்.அவள் கணவன்.பரஸ்பரம் அறிமுகமானோம்.என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தேன்.கால் மணி நேரம் கழித்து ஒரு ஃபோன் காலை பேசுவதற்காக விலகி நடந்தான் சங்கீத். “என்ன பப்பு என் ஆளை சைட் அடிக்கிறியா?” என்றாள் நந்தினி.”உளறாதே” என்று கோபித்தேன். “கூல்.. கூல்” என்றாள்.
“பாரி எப்பிடி இருக்கான்..” என்றேன்.என் கேள்வி காதில் விழாதவளைப் போல இருந்தவளிடம் மறுபடி ஒரு தடவை கேட்ட பின் “எங்க இருக்கான்னு கேளு பப்பு.நான் அவனைப் பார்க்கறதோ பேசுறதோ இல்லை பப்பு.கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன்னு தோணுது.ஒரு நாள் ரெண்டு பேருக்கும் சரியான சண்டை.நான் என்ன சொன்னாலும் என்னைப் புரிஞ்சுக்கவே மாட்றான்.,இனிமே என்னைப் பார்க்கவோ என் கூடப் பேசவோ முயற்சி பண்ணாதேன்னு கோபமா சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.அதுக்கப்புறம் அவன் நம்பர் மாத்திட்டான்னு நினைக்கிறென்.மனசு கேட்காம எத்தினி தடவை அந்த நம்பரை கால் பண்ணேன் தெரியுமா..?..நாட் இன் யூஸ்னு வந்துது.விட்டுட்டேன்.”
எனக்குள் எத்தனையோ கேள்விகள் முண்டியடித்தன.ஆர்ப்பரித்த மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு “என்னய்யா இது உன் வாழ்க்கையோட ஒளின்னெல்லாம் உருகினே…இப்ப இவ்ளோ ஈஸியா சொல்றே..?”என்றேன்.அவள் நான் தொடர்ந்து இதுபற்றிப் பேசுவதை விரும்பவில்லை எனத் தெரிந்தது.”தெருவில பார்த்தவனைத் தூக்கி தலையில இடம் கொடுத்தது தப்புன்னு உணர்றேன்.அவனைத் தெருத்தெருவா தேடணும்னு சொல்றியா..?ரப்பிஷ்..எனக்கும் சங்கீத்துக்கும் இப்ப எந்த கேப்புமில்ல.ஹீ லவ்ஸ் மீ லைக் எ குயின்.நா பண்ண முட்டாள்தனம் பாரி.ஐ பெக் யூ பப்பு.ப்ளீஸ் இனிமே அவனை ஞாபகப் படுத்தாதே.என்றாள்.
எனக்குள் என்னவோ விட்டுப் போனாற்போல் இருந்தது.என்ன சொல்வது எதை கேட்பது என்றெல்லாம் தெரியாமல் அவளுக்கு டாடா காண்பித்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.பிரபுவிடம் அன்றைய இரவு நெடு நேரம் புலம்பியபடியே இருந்தேன்.
அவர் என்னிடம் “பாரின்ற ஒருத்தன் வந்தது தப்பான வழில பவித்ரா.அவனோட அடுத்த நியாயங்கள் எல்லாமும் அடிபட்டுருதுல்ல.?நந்தினி முதல்ல பண்ணது தான் தப்பு.இப்ப பண்றது ரொம்ப சரின்னு தானே அர்த்தம்..?நீ ஏன் மாத்தி யோசிக்கணும்.விடு..உனக்கென்ன?” என்றார்.அது தானே..?எனக்கென்ன என்று போகமுடியவில்லை.பாவம் பாரி என்று தோன்றியது.நந்தினி செய்தவற்றை விடவும் அவற்றை நிகழ்த்திய வழிகளின் மீது எனக்குப் பெரும் அதிருப்தி இருந்தது.
அடுத்த வெகேஷனுக்கு பெங்களூர் சென்றோம் பிரபுவின் அக்கா வீட்டுக்கு.இடையிலொரு நாள் மதியம்ஃப்ரோஸென் படத்துக்கு போயே தீரவேண்டும் என்று என் மகள் அனத்தினாள்.சரி என நானும் அவளுமாய் ஒரு மாலுக்குள் நுழைந்தோம்சினிமாவுக்குப் போகலாம் என்று நானும் என் மகளும் கிளம்பினோம். அந்த மகாஸ்தலத்தின் அர்த்தமற்ற கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே திரிந்தோம்.எதிரே பஞ்சடைந்த கண்களும் கலைந்த தலையுமாய்…மை காட்…பாரி…கெந்திக் கெந்தி நடந்து வந்துகொண்டிருந்தான்.
“பவித்ரா…நல்லா இருக்கீங்களா..?என்று சிரித்தான்.அவனது முன் பற்கள் உடைந்திருந்தன.”என்ன பாரி..எங்கே போனீங்க..?என்னாச்சு?” என்றேன்.சோகையாய் சிரித்தவன். “நந்தினி நல்லா இருக்காங்களா?” என்றான்.தலையசைத்தேன்.”உங்களைக் காண்டாக்ட் செய்யவே முடியலைன்னாளே நீங்க ஏன் நம்பர் மாத்திட்டீங்களா..?”என்றென்.அவன் அதற்கும் சிரித்து விட்டு “நீங்க தான் அப்ராட் போனதுல நம்பர் மாத்திட்டீங்க.நான் அதே நம்பர்ல தான் இருக்கேன்”.என்றான்.
அவனது கண் ஓரங்கள் நீர்த்துளித்தன.சமாளித்துக் கொண்டு மறுபடி சிரித்தான்.
“ஒண்ணுமில்லைங்க.. பவித்ரா…நந்தினி எதுக்கு என்னைத் தேடினா..ஏன் என்னை அவ்ளோ கொண்டாடினா இதுக்கெல்லாம் எப்படி அர்த்தமே இல்லையோ என்னை விட்டு விலகுனதுக்கும் காரணமே இல்லைங்க..மலையுச்சிக்கு ஏறுறதுக்கும் இறங்குறதுக்கும் வெவ்வேற பாதைகள் இருக்கிறாப்ல தான்.வந்தா..போயிட்டா.ஹூம்…
கெந்திக் கெந்திச் சென்று மறைந்தான்.
டிக்கட்களை பன்ச் செய்து விட்டு உள்ளே நுழைந்து ஒதுக்கப்பட்ட ஸீட்களில் அமர்ந்தோம்.படத்தில் மனம் லயிக்கவில்லை.
இன்னும்
இன்னும்
இன்னும்
இன்னும்
காஆஆஆஆஆஆதல்
வேண்டுமடி.
பாரியின் கவிதை எனக்குள் சப்தமாக ஒலித்தது.
{ஆனந்த விகடன்}