எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது?


எனக்குள் எண்ணங்கள் 19

ஏன் பேசக் கூடாது?


மூன்றாவது பிறந்தநாள் வரை சரளமாக பேச்சு வராத ஒரு குழந்தை. ஒவ்வொரு சொல்லையும் பிறவற்றோடு வேறுபடுத்தி பேச்சு திறன் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பத்தோடு அது வரையிலான காலத்தை பெற்றோரும் பாட்டியும் கவலை தேய்ந்த முகங்களோடு கழித்து வந்திருக்கின்றனர். சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்துக்கு மாடியில் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் பெயர் சௌந்தர்ராஜன் என்பது போல ஞாபகம். அவரிடம் அழைத்துச் சென்று குழந்தையை காட்டி கேட்டதில் பேச்சு வரும் நிச்சயம் பேசுவான் ஆனால்  தேக்கி வைத்திருந்த மொத்த வெள்ளமும் அணை திறக்கிற கணம் பொங்கிப் பெருகி வருமே அப்படி வேகம் எடுத்துப் பேச முனைகையில் திக்கு வாயாக மாறிவிடும் அபாயம் உண்டு. அதில் கவனம் செலுத்துங்கள் போதும் என்று அனுப்பி இருக்கிறார்.

முதல் படத்தை எடுத்து முடித்த தயாரிப்பாளரும் இயக்குனரும் ஏன் அதில் நாயகனாக நடித்தவரும் படம் வெளியாகிற தினத்தையும் திசையையும் ஒன்றே என்று கருதி காத்திருப்பார்களே, அப்படி காத்திருந்து பேசத் தொடங்கியதும் பெருமகிழ்வு எய்தினர் பெற்றோர்

யார் அந்த பையன்? நான் தான் அந்தப் பையன்.  செல்லதுரை மாமா கணேச மாமா ஐயா சித்தப்பா வெங்கட்டு சித்தப்பா நால்வரில் யார் தேடி வந்தாலும் அவர்களோடு சேர்ந்து அப்பா என்னை பார்த்து வைக்கிற முதல் குற்றச்சாட்டு அதுதான். ” பேசுவானா? என்று இருந்தோம். இப்ப பாரு பேசியே கொல்றான்”

என்று அவுட்டு சிரிப்பை அவிழ்ப்பார்.

பேச்சு என்பது மனித குலம் கண்டடைந்த பண்படுதலில் ஒரு மகா  நிகழ்வு. அதற்கு முன்னும் பின்னுமாய் இந்த உலகம் இரு வேறு. பேசாத உலகம் சப்தங்களாலும் ஆரவாரத்தாலும் அமைதியாலும் அச்சப்பட்டு கொண்டே இருந்தது என்பதை யூகிக்க முடிகிறது. பேசும் உலகம் அதன் பின்னதான அத்துணை உன்னதங்களையும் பேச்சினூடே சாத்தியப்படுத்திக் கொண்டது. மொழியின் மாபெரும் வித்தை பேச்சு. மொழியின் மகுடம் எழுத்து. எழுத்தின் சிகரம் கவிதை.

மௌனம் என்பது மிக சன்னமான உரையாடல் என்றுதான் தோன்றுகிறது. மௌனத்தை புரிந்து கொள்கையில் வாழ்க்கை மிகவும் அழகானதாக மாறிவிடுகிறது. தனிமை என்பது அவரவர் மௌனத்துடனான உரையாடல் பொழுது என்று சொல்லலாம் தானே? துறவு தவம் போன்ற சொற்களோடு மௌனத்துக்கும் தனிமைக்கும் இருக்கக்கூடிய காலகால பரியந்தம் மிகுந்த அர்த்தம் வாய்ந்தது.

எதையும்
நிரூபிக்காமல்
சற்று
சும்மா இருங்கள்

என்கிற ஆத்மநாமின் கவிதா வரிகள் ஒவ்வொரு முறை நுழைந்து திரும்பும் போதும் அர்த்தங்களை அள்ளித் தருகிறது. எண்ணங்களை மேலாண்மை செய்து பழகிவிட்ட பிறகு மௌனம் என்பது ஒரு சுகமான ஆறுதல். வாத்தியம் ஒன்றை கற்றுத் தேர்ந்தவன் அதை கையாளுவது போல மிகச் சுலபமாக எண்ணங்களை மௌனத்தின் ஊடாக கையாண்டு விட முடிகிறது. சிறுவயதில் முதன்முதலாக வகுப்பில் பேசியதற்காக கையை திருப்பி ஸ்கேலால் அடி வாங்கிய போது மௌனம் என்பது ஒரு வாதையாகவே மாறிப்போனது. தழும்பை வருடும் போது இறந்தகால வலியை அது திறந்து தருவது போல ஒரு அடி ஸ்கேல் என்று சொல்லும்போது எல்லாம் வாங்கிய ஒவ்வொரு அடியும் வயிற்றை கலக்கத்தான் செய்தது. ஆசிரியத்தை வெறுப்பதற்கான முதற் புள்ளியாகவே பேசியதற்காக இரண்டு புறங்கைகளிலும் மாறி மாறி வாங்கிய அடிகள் திகழ்ந்தன.

ஆறாம் வகுப்புக்கு பின்னால் பள்ளி மாறிய பிறகு ஆசிரியர் வரும் முன்பு இரண்டு புறங்களிலும் அமர்ந்திருக்கும் யாரிடம் பேசினாலும் பேசுகிறவர் பெயரை கரும்பலகையில் வரிசை கட்டி எழுதி வைப்பது கிளாஸ் லீடர் இன் கடமை. நான் ஒருபோதும் கிளாஸ் லீடராக இருந்ததே இல்லை. மதிப்பெண் வாங்குவதன் அடிப்படையில் முதல் மாணாக்கர்களின் வரிசையிலும் என் பெயர் இடம் பெற்றதே இல்லை. பேசுகிற மாணவர்களின் கரும்பலகை பட்டியலில் நான் வருகை புரிந்த அத்தனை தினங்களிலும் எனது பெயர் அனேகமாக முதலாவதாக இடம் பெற்று இருக்கிறது. இஃதொன்றும் தற்செயல் இல்லை. ஒரு விதமான எதிர்ப்பின் வழியாகவே வகுப்பில் அருகமர்ந்து இருப்பவர்களிடம் பேசுவதை தொடர்ச்சியாக கை கொண்டு இருந்திருக்கிறேன். அடிப்பார்கள் என்று நன்றாக தெரிந்தும் ஒரு விஷயத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபட வைப்பது எது? குற்றம் சார் உளவியலில் இது ஒரு முக்கிய புள்ளி. செய்யாதே என்று அடிக்கடி தண்டிப்பதன் மூலமாக அந்த செயலின் எதிர்ப்புறம் செல்ல வேண்டிய ஒருவனை அதன் உட்புறமாக தள்ளுவது நடந்து விடுகிறது. எதையும் நியாயப்படுத்த அல்ல நான் இதனை சொல்லுவது. இன்றைய கல்விமுறையில் எதற்காகவும் மாணாக்கர்களை அடிக்கவே முடியாது. அடிப்பது தீமை என்பதை உணராத ஒரு தலைமுறை தான் எங்களை தயாரித்து தந்தது. இன்று அடிப்பது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. தர்மம் சன்னமாகச் சொல்லுவதை ஏற்காத போது சட்டம் அதையே ஓங்கி சொல்லும் என்பது இன்னொரு முறை மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.

ரஜினி காந்த் பாடல்களிலேயே எப்போது கேட்டாலும் ஒன்றே போல் மனசை மயக்கிக் கொள்கிற வல்லமை மிகுந்த பாடல்களில் பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் என்ற பாடலும் ஒன்று. அந்தப் பாடலின் தொடக்கம் இன்னும் வசீகரிக்கிறது. ஏன் பேசக் கூடாது..? என்று எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றுகிறது. நான் மழையின் உக்கிரத்தில் சப்தமாகப் பேச விரும்புகிறவன். மழையின் காதுகளில் எதைச் சொன்னாலும் அது மந்திரம் போல் மாறிவிடும் என்று பலகாலமாக நம்புகிறவன். நட்சத்திரங்களைப் பார்த்து உரையாடினால் அவற்றுக்குக் கேட்கும் என்பது எனது இன்னொரு நம்பிக்கை. பைத்தியத்தின் மீது கூடப் பொறாமைப் படுவதற்கு ஒரு காரணம் உண்டு தானே..? நினைவிலிருந்து பேச வேண்டிய நிர்ப்பந்தம் குழந்தைகளுக்கும் பைத்தியங்களுக்கும் இல்லை அல்லவா..? எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதும் நினைவழித்துப் பேசலாம் என்பதும் எத்தனை பெரிய கொடை?

மேல்நிலைப்பள்ளி படிப்பு என்பது திருநகரில் உள்ள எம் எம் ஸ்கூலில் தொடர நேர்ந்தது. அந்தப் பள்ளியில் முந்தைய காலத்தில் வழக்கத்தில் இல்லாத பலவற்றையும் சந்திக்க நேர்ந்தது. பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் மாலை நான்கில் இருந்து 9 வரை சிறப்பு ஸ்டடி நடக்கும். மாணவர்கள் வரிசையாக அமர்ந்து பாடங்களை படிக்க வேண்டும் 10 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளும் கலந்து கலந்த அமர்ந்து மௌனமாக படிக்க வேண்டும். மாபெரும் கம்பை கையில் ஏந்திய படி கணேசன் எனும் ஆசிரியர் அனேகமாக அதை மேற்பார்வை செய்வார். யாராவது பேசினார்கள் என்றால் பல அடி தூரம் பின்னால் இருந்தாலும் மிகச்சரியாக வந்து பேசியவர்களை எழுப்பி கன்னத்தில் அறைவார்

பேச்சு என்பது எப்போதுமே ஒரு ஆயுதத்துக்கு நிகரான கூர்மையோடு தான் கையாளப்பட்டு வந்திருக்கிறது. பேச்சின் எல்லை வீடு தொடங்கி நாடு கடந்து உலகளாவிய சாகசங்களை நிகழ்த்தி வந்திருப்பது வரலாறு. நட்பும் காதலும் பேச்சை அடித்தளாகக் கட்டியெழுப்பப் படுகிற கண்ணாடிக் கோபுரங்களாகவே பல சமயங்களில் நிகழ்ந்து விடுகின்றன. சரித்திரம் அப்படியான லட்சோப லட்சம் காதைகளைக் கண்ணுற்று வந்திருக்கிறது.

இரண்டு பேருக்கிடையில் பேச்சு இல்லை என்பது பல வருங்கால  முறிவுகளுக்கான அச்சாரமாகவே கருதப்படக் கூடியது. நண்பர்-காதலர்-சகோதரர்-தம்பதியர்- அண்டை வீட்டார்-உற்றார்-உறவினர் எனப் பலரும் தங்களுக்கு இடையிலான பேச்சைக் கைவிடுவது என்பது வாழ்வில் நடக்கக் கூடிய எளிய சகஜ நிகழ்வு போலத் தோன்றினாலும் அஃதொரு துன்பியல் நிகழ்வு. உடனே சரி செய்யத் தவறும் பட்சத்தில் மாபெரும் சுவரொன்றை மனங்களுக்கு நடுவில் கட்டியெழுப்பி விடக் கூடியது. அப்படிக் கட்டப் பட்ட பல சுவர்களை எனக்குத் தெரியும்.

அடுத்த வீட்டு சண்முகமும் எதிர் வரிசை பங்களா வீட்டு ரமேஷூம் எனக்குத் தெரிய இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்களை ஒன்றாக்கியதும் ரெண்டாக்கியதும் கிரிக்கெட் ஆட்டம் தான். ரமேஷ் என் சம வயதுக்காரன். சண்முகம் இரண்டு வருடம் சீனியர். எல்லாருமே பள்ளிப் பருவத்தில் ஒரே தெருவில் வசித்தோம். தெருவில் ஒருபுறம் சாக்கடை ஓடும். அதற்குச் சிமெண்டால் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு அவரவர் வீட்டு வாசல்களில் பெரிய சிமெண்ட் ஸ்லாப்கள் இட்டு அதை மறைத்து வைத்திருப்போம். வீட்டு எல்லைக்கப்பால் அடுத்த வீட்டு ஆரம்பம் வரை ஆங்காங்கே திறந்து கிடக்கும்.

கருப்பு நிறத்தில் கசடும் மண்ணும் மண்டிக்கிடக்கும் சாக்கடையின் மேற்புறம் நீர் போக்கு ஓடிக் கொண்டிருக்கும். அடித்த பந்தை பேட்ஸ்மேன் தான் சாக்கடையில் கைவிட்டு எடுக்க வேண்டும் என்பது எங்கள் தெரு கிரிக்கெட்டின் முதல் விதி. இரண்டு பக்கமும் இரண்டு பிளாஸ்டிக் வாளிகளில் தண்ணீர் இருக்கும். எடுத்த பந்தை மற்றும் கையை அந்த தண்ணீரை சரித்து கழுவிக்கொண்டு விளையாட்டை தொடருவோம். ரமேஷ் மட்டும் விதிவிலக்கு அவன் அடித்து சாக்கடையில் பந்து விழுந்தால் இடது கையால் எடுத்துவிட்டு பந்தை வாளி தண்ணீரில் கழுவி விட்டு நேரே தன் வீட்டுக்கு ஓடி போவான். அங்கே சென்று முழுவதும் கையை கழுவி விட்டு தான் மீண்டும் விளையாட வருவான். இதை ஆரம்பத்தில் சகஜமாக எடுத்துக் கொண்ட மற்றவர்கள் ஆட்டம் அவனுக்காக நிற்பதை பொறுத்துக் கொள்ள மாட்டாமல் ஒன்று எல்லோரைப் போலவும் இங்கேயே கை கழுவு. அல்லது வீட்டுக்கு தான் போவேன் என்றால் அதோடு ஆட்டத்துக்கு வராதே. என்று நறநறத்த சண்முகம் எளிதாக கூடுதலாக ஒரு விதியை ஏற்றினான். சாக்கடையில் பந்து அடித்தால் அவுட். என்பதுதான் அந்த விதி.

அதுவரை சண்முகத்தை அவனுடைய ஆட்டத்திறமையை பலமுறை பாராட்டி இருந்த ரமேஷ் அதற்குப் பிறகு எடுத்ததற்கெல்லாம் சண்முகத்தை குறை சொல்ல ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் இருவரும் கைகலக்கவே அத்தோடு இரண்டு பேருக்கும் இடையில் பேச்சு முடிவடைந்தது. அதன் பிறகும் சண்முகமும் ரமேஷும் எல்லோரையும் போல கிரிக்கெட் விளையாட்டில் ஒன்றாக இடம்பெற்றாலும் கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு வேறு வீடு மாறி வந்த பிற்பாடு ரேஷன் கார்டை மாற்றுவதற்காக அம்மாவும் நானும் ஒரு முறை பழைய வீட்டு பக்கம் வந்தோம். ஞாபகமாக சண்முகத்தை பார்த்தவுடன் நலம் விசாரித்துவிட்டு ” இப்பவாச்சும் ரமேஷ் கூட பேசுனியா?” என கேட்டதற்கு “ம்ப்ச்… எங்க ரமேஷ் ஃபேமிலியும் வீடு மாத்தி போய்ட்டாங்க இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியல” என்று பதில் சொன்னான் சண்முகம்.

திருநகர் வீட்டுக்கு வந்த பிறகு சிற்றப்பா பையன் பாலாவின் வகுப்பு தோழனும் எங்கள் வீட்டுக்கு பின்னால் வசித்தவனுமான சேரன் ஒரு மனஸ்தாபத்தில் என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். ஒரு முறை அல்ல பலமுறை நான் பேச முயற்சித்த போதும் முகம் கொடுக்காமல் நகர்ந்து போய்விடுவான். இதெல்லாம் நடந்து 15 வருடங்களுக்கு பிறகு என் மகன் படிக்கச் சேர்ந்த பள்ளியில் ஆண்டு விழாவின் போது குழு நடனத்தில் பங்கு பெற்றான். நான் என் மனைவி மகளுடன் அவனது ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது எதார்த்தமாக திரும்பிப் பார்த்தால் பக்கவாட்டில் சேரன் தன் மனைவியுடன் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அவனுடைய மகளும் அதே பள்ளியில் வேறொரு வகுப்பில் படிக்கிறாள் போலும். ஆண்டு கணக்கில் பார்க்காமல் இருந்துவிட்டு மறுபடியும் பார்த்த தருணத்தில் பழைய மனஸ்தாபங்கள் எல்லாம் ஒரு நொடியில் அற்று போய் என்னை நலம் விசாரித்து தன் இணையாளுக்கு அறிமுகப்படுத்தி எனது இணையரிடம் வணக்கம் சொல்லி எல்லாம் பேசிய சேரனிடம் ” இப்ப என்ன மனஸ்தாபம் என்று ஞாபகம் இல்லை இருந்தாலும் சாரி என்று மட்டும் கிசுகிசுப்பாக சொன்னேன். அட என்னண்ணே அதெல்லாம் சின்ன வயசுல ஏதோ இப்ப போய் அதை பேசிக்கிட்டு என்று எளிதில் அதை கடந்தான் சேரன். அந்தக் கோபமும் பிறகு அதை கையாண்ட பக்குவமும் இரண்டுமே மிகுந்த மரியாதைக்குரிய விஷயங்களாகவே என் மனதில் தங்கி இருக்கின்றன.

விசு எடுத்த ஒரு திரைப்படத்தில் கிஷ்மு தன் மனைவி மனோரமாவிடம் வருட கணக்கில் பேசமாட்டார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கூட அழகம்பெருமாள் சரண்யா விடம் வருடக் கணக்கில் பேச மாட்டார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படி திரைப்படத்தில் வேண்டுமானால் வரலாம் நிஜத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மைதான் பல சமயங்களில் திரைக்கு வருகிறது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அண்ணனொருவர் என்னிடம் சொன்ன கதை ஒன்று நினைவிலாடுகிறது.

எப்போதும் திருநகரின் எதாவதொரு டீக்கடையில் வழக்கமாகக் கூடி வாடிக்கையாகக் கொட்டமடித்து நேரம் கழித்துக் கலைவோம். இளவயதில் இதை விட வேறென்ன வேலை இருந்துவிடப் போகிறது.? சித்தப்பா கேலியாகக் கேட்பார் “என்னப்பா தெருவைக் காத்திட்டு வந்தாச்சா..? யாரும் தெருவைக் களவான்டுறாம பாத்துக்கிறது தானே உங்க ஜோலி..?” இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கிய புதுமுகம் போல் மலர்ந்து சிரிப்போம்.

திருநகர் எட்டாவது ஸ்டாப்பில் முருகன் டீக்கடையில் எங்களுக்கென்று மரத்தடியில் நாலைந்து இரும்பு ஸ்டூல்கள் கிடக்கும். அதில் அமர்ந்தால் எம்.எல்.ஏ பதவி எப்படி ஐந்து வருடமோ அப்படி காலையோ மாலையோ ஐந்து மணி நேரமாவது குத்துக்கல் போல் எழாமல் இருந்தால் தான் ஆன்ம நிம்மதி அடைவோம். அங்கே அடிக்கடி  வந்து சென்ற வகையில் எங்களுக்குப் பழக்கமானவர் தான் ஆறுமுகம் அண்ணன். கப்பலூர் தொழிற்பேட்டையில் ஒரு கம்பெனியில் பெயிண்டராக வேலை. அயராத உழைப்பாளி. வாரம் ஒரு நாள் விடுப்பு. அன்றைய தினம் முழுவதும் கேளிக்கை தான். முருகன் கடைக்கு காலை ஏழு மணி சுமாருக்கு வந்தார் என்றால் பதினோரு மணி வரை அங்கேயே வசிப்பார். இடையில் டிஃபன் கூட பொடி நடையாகப் போய் சண்முகம் இட்லிக் கடையில் சாப்பிட்டு விட்டு மறுபடி ஒரு டீக்காக முருகன் கடைக்கே வந்து விடுவார். டீ பித்தர். புகை எங்களை ஒன்றுபடுத்தியது.

அவர் தான் சொன்னார். ,முனீஸ் ஒருமுறை பன்னீரைப் பார்த்து கத்தினான். “ எலே பன்னீரு…இனி என் மூஞ்சிலயே முழிக்காதடா…செத்தாலும் உண்ட்ட பேசமாட்டேன் போடா!”

சொல்லி விட்டு முகத்தை ரப்பாக்கிக் கொண்டு தன் சைக்கிளையே புலி போல் எண்ணிப் புறப்பட்டுப் பறந்தான் முனீஸ். அவன் முதுகைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடியே ஆறுமுகம் அண்ணன் சொன்னார் “யாரும் யார்ட்டயும் பேசாம இருந்தாக் கூடத் தப்பில்லை. அதை முகத்துக்கு நேரா சொல்றது தான் பெரிய பாவம். இப்பிடித் தான் என் பங்காளி ஒருத்தன் கிட்ட இனி உன் முகத்திலயே முளிக்க மாட்டேன்னு  வீறாப்பா பேசித் தொரத்திட்டேன். உப்புப் பெறாத பிரச்சினைதான். அவன் ரெண்டு மூணு தடவை என்னைத் தேடி வந்து பேச முயற்சி செய்தும் முகத்தைத் திருப்பிட்டேன். அவனும் நொந்து போயி கெளம்பிட்டான். பம்பாய்க்கு வேலைன்னு கெளம்பிப் போனவன் அந்த ஊர்ல ஒரு ரயில் விபத்துல இறந்திட்டான்னு செய்தி தான் வந்திச்சி. நாலு நாள் ஊரே காத்திட்டிருந்து அவன் உடம்பு வந்து சேர்ந்ததும் இறுதி மரியாதை செய்தாங்க. அந்த நாட்கள்ல நான் பட்ட அவஸ்தை எனக்கு மட்டுந்தான் தெரியும். அவன் போயிட்டான். இனி வரவே மாட்டான்ற துக்கத்தை பலமடங்கு அதிகரிச்சி காட்டுனது என்னோட வீம்பு தான் தம்பி. அவன் என்னையத் தேடி வந்தப்ப ஒரு வார்த்தை பேசிருக்கலாம்னு அப்பறம் ஆயிரம் வாட்டி தோணுச்சி. என்ன பயன்..? மனுசப்பய வாழ்க்கை அற்பமானது. இதுல சந்தோசத்தை அதிகரிச்சிப் பார்க்கணுமே தவிர வருத்தத்துக்குக் கொஞ்சம் கூட காரணப்பட்டுறக் கூடாது. அடுத்த சென்மத்துல கொழந்தையாப் பொறந்து வந்து என்னைய மன்னிச்சிட்டேன்னு என் பங்காளி ஒரு வார்த்தை சொல்லிற மாட்டானான்னு எத்தினியோ ஏங்கிட்டிருக்கேன் தெரியுமா..?” என்றவர் அப்படியே சரிந்து கலைந்து அழுதார்.

யார் யாருடன் எல்லாம் உன் கூடப் பேசமாட்டேன் என்று துரத்தியிருக்கிறேன் என்று தேடித் தேடிப் போய் புன்னகையுடன் மறுசொற்களை மலர்த்தத் தொடங்கினேன். எல்லாம் ஆறுமுகம் அண்ணனின் அனுபவம் சுட்டிய ஞானத்துக்கப்பால் தான்.

சந்தோசத்தை மட்டுந்தானே அதிகரிச்சிப் பார்க்கணும்..?

*