சாலச்சுகம் 2

___________________________________________________________________

1.
நான் கேட்கவேயில்லை
ஆனாலும்
இரண்டு மனம் வாய்த்திருக்கிறது.
ஒன்று நினைத்து வாடுகிறது
மற்றது அதற்காக நொந்து கொள்கிறது.
2
எந்தப் பாவியோ
நான் அருந்துவதற்காக
வைத்திருந்த விஷத்தில்
தண்ணீரைக்
கலந்துவிட்டிருக்கிறான்
3
நீங்கள் அடைந்துவிட்டதாய்
இறுமாந்து கொள்கிற
அதே அந்த
அன்புதான்
நானெனும் தேரைத் தெருவில்
விட்டுச்சென்றதும்
4
இழந்தவனுக்கொரு
கர்வம் தலைதூக்கும்
அதொரு அலாதி சுகம்
போங்கள்
5
பார்வையற்றவன்
பற்றுக்கோலின்
நீளம்
ஞானக்குளத்தின்
தரைதட்டுகிற ஆழம்
போல அது
சாலச்சுகம்