சொல் வழி யாகம்
முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதியிருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூலை முன்வைத்து
வாழ்வின் மறக்கவியலாத கணத்தில் உறைந்து நிற்கையில், ‘எப்படிக் கடப்பது’ என்று திகைக்கிற போழ்து எதாவதொரு நம்பிக்கைத் தெறல் பேருருக் கொண்டு புதியதோர் மின்னலாய்க் கிளம்பி மனம் மாற்றும். அப்படித் தான் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களது நெடுங்கால உழைப்பில் உருவாகி இருக்கிற “என்ன பேசுவது எப்படிப் பேசுவது” என்கிற இந்த நூலை ஒரு அரிதான தருணத்தில் வாசிக்கத் தொடங்கினேன். கையில் எடுத்தது மட்டும் தான் நினைவில் இருக்கிறது, நெடுந்தூர நீர்வழிப்பயணம் ஒரு கண் சிமிட்டலுக்குள் நிறைந்தாற் போலவும் நிறையுமல்லவா, அப்படித் தான் இதனை வாசித்து முடித்த நொடியில் உணர்ந்தேன்.
பேசுகிறவர்களுக்கான வேதமாக இந்த நூலை முன்வைக்க விரும்புகிறேன். ஒரு சிட்டிகை கூடப் பொய்யில்லை குண்டூசி நுனி அளவுகூடப் புகழுரைப்பதற்காகச் சுட்டவுமில்லை தெளிந்தும் தேறியும் இந்த நூல் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிற இடம் அது. பேச்சுக்கலையின் முழுமுதல் நூலாக முன்வைக்க இதனுள் நிறைந்தொழுகும் தகுதிப்பாடுகளே காரணம். சமூகத்தின் மீதான வாஞ்சையை மையாக்கி இளைய தலைமுறையினருக்குத் தருவதற்காகப் பார்த்துப் பார்த்துக் கோர்த்திருக்கும் ‘சொல்வழி யாகம்’ இந்த நூல். இதன் அத்தியாயங்கள் அறிவுத் திரையில் விரித்துத் தருகிற மன வரைபடம் முக்கியமானது. தொழில் முறைப் பேச்சாளர்களுக்கும் பேசுவதைத் தங்களது முழுமுதல் நோக்கமாய்க் கொண்டு செயல்படுவோர்க்கும் மட்டுமின்றி இந்த நூல் பேச்சுக்கலையைச் சார்ந்து நோக்கும் யாவர்க்குமான வழிகாட்டியாக விளங்குகிறது. உலகின் நியமங்களுக்குள் நாளும் புகுந்து திரும்புகிற எந்த ஒருவருக்கும் திசையொளியாகி எல்லோருக்குமேயான ஒற்றைப் பொதுவழியாகவே விளங்குகிறது. இதன் நல்லிடைக் கணங்கள் நேர்த்தித் தருகிற அறிதல் கவனம் தெளிதல் ஞானம் என எல்லாமுமே பேச்சுக் கலையைப் பெருங்கோலமாக்கிப் பூர்த்தி செய்து தருகிற புள்ளிகளே!
காலம் கடந்து நிலைபெறக் கூடியது இந்தப் புத்தகம்.காலத்தின் துலாத் தட்டில் மிக அரிய, கனமிகுந்த, பெருங்காலம் செல்லத் தக்க, நற்பலன்கள் பலவற்றைக் கொண்ட, ஒப்பிடுவதற்கு நிகர் சமன் ஏதுமில்லாத, ஒற்றைப் பெருவைரமென்று மிளிர்கிறது. ஒளிர்கிறது. பல புதிய சொற்களைக் கையாண்டதை முதலில் தனியே எடுத்தோதி விடுவது சிறப்பு. வாசனை வேலி, நுண்சில், மிடுக்குப்பேசி, நாவின் நர்த்தனம், வளாக நேர்காணல், பணிப் பட்டறை, காணொலிப்பாதை என இறையன்பு அவர்கள் இந்த நூலின் வழி தானம் செய்திருக்கிற சொற்கள் சுவைமழை பொழிகிறவை.
ஒரு சிறந்த நூலானது தன் மையக்கருத்திலிருந்து விலகாமல் கடைசி வரை பயணிக்க வேண்டும் என்பது நியதி. இரயில் எங்ஙனம் இருப்புப் பாதையை விட்டு விலகாமல் இறுதி வரை பயணிக்கிறதோ அவ்வண்ணமே மேற்சொன்னதும். அதற்காக நூலாசிரியர் இறுக்கமாகவும் ஒரே தொனியிலும் தொடர்ந்து நூலைப் படைக்கவும் முடியாது. துரித இரயிலின் பயணத்திடையே காற்று வருடும் கணங்களைப் போல் ஆங்காங்கே இலகுவான மொழியுடன் லேசாய்ப் புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை எதிர்பாராத சொற்கூட்டுக்களின் அபாரம் மற்றும் சிந்தித்து மனதில் பொதிந்து வைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் வாசிக்கிறவனுக்காக எழுதுபவர் படைத்திடுதல் அவசியம்.
இந்த நூல் மேற்சொன்ன எல்லாவற்றையும் சிறப்பாகப் பூர்த்தி செய்கிறது.
‘பதார்த்தங்களில் கூட மீசையைக் காண்கிறது அந்த மொழி’ என இந்தி மொழியைப் பற்றிப் பேசுவதாகட்டும், ‘தவறிப்போய் தன்னுடைய பெயரையும் வாசித்து நன்றி கூறிப் பின்னர் உதட்டைக் கடித்தவர்களும் உண்டு’ என்று இடித்துக் காட்டுவதாகட்டும் ‘பொத்தென்று கழன்று விழுவதால்தான் அதற்குப் பெயர் பொத்தான்’ என்று புதிய பொருளை ஒளிர்வதிலாகட்டும், ‘பட்டிமன்ற வாதத்தில் எதிரணியை வென்ற ஆண் வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவியிடம் தோற்றுப்போகிறான்’ என்று சுட்டுவதிலாகட்டும் தன்னை வெறுப்பேற்றிய பத்திரிகை நிருபரை அலெக்ஸாண்டர் டூமாஸ் “உங்கள் தலைமுறை முடிகிற இடத்தில் எங்கள் தலைமுறை தொடங்கியது” என்று சொன்னதை எடுத்தியம்பிதிலாகட்டும், ‘அநாமதேயக் கடிதங்களில் கூட அனுப்புவோர் பெயர் இருப்பதில்லையே தவிர, அனுப்புகிறவர் அதில் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறார்’ என்கிற பருந்துப்பார்வைப் பகிர்தலாகட்டும் தொகுப்பாளர் ஏற்படுத்தக்கூடிய சிரமங்களைப் பற்றி விவரித்த இடமாகட்டும் நூலெங்கும் பல இடங்களில் மெலிதான நகைச்சுவை உணர்வு மழைக்கு முந்தைய குளிர்பனிக் காற்றைப் போல வாசகமனங்களைத் தழுவுகிறது.
‘தீயின் நாவுகளுக்குக் கண்கள் இருக்கின்றனவா என்ன..?’ என்று எரிந்த நூலகத்திற்கான சொல்வழி அஞ்சலியை நிகழ்த்தும் போதும், ‘காதலர் தினத்தன்று காப்புரிமையை பெற்று அதனாலோ என்னவோ தொலைபேசி காதலர்களை உருவாக்கும் சாதனமாக இன்றும் திகழ்கிறது’ என்று விவரிக்கையிலும் ஆழ்ந்து லயிப்பதற்கான ஆயிரம் வாசல்களைத் திறந்து தருவது ‘என்ன பேசுவது எப்படிப் பேசுவது’ நூலின் பிரதான சிறப்பம்சமாகிறது.
அறியாப் பொருளை அறியத் தருவதில் துல்லியமும் நுட்பமும் பொங்கிப் பெருக்கெடுக்கின்றன. சிக்கனத்தின் பெருவள்ளலாகவே இறையன்பு இந்த நூலெல்லாம் தென்படுகிறார். இதை விடச் சுருக்கமுடியாது என்பதாகத் தனதொரு சொலல் முறையினை உருவாக்கியிருக்கிறார். தானும் தன் சொற்களுமாக நிகழ்த்திக் கொள்கிற தொடர்ந்த “அக உரை விள்ளல்”களாகவே இந்த நூலெங்கும் பல அமுதமொழிகள் ஆழப் பதிகின்றன. அக்கினிக் குஞ்சை எடுத்து ஆங்கோர் காட்டின் பொந்திடை வைத்த அதே வெம்மையும் உண்மையுமான சொற்பெருந்தழல் சாத்தியமாகிறது. உதாரணத்துக்கு அப்படி என்னை மிகவும் கவர்ந்தவற்றில் சில அமுதமொழிகளை மட்டும் இங்கே தர விழைகிறேன்.
A தாய்மொழியைக் கற்க மறுப்பவர்களுக்கு கடன் வாங்கிய தோற்றங்களே ஏற்படும்
B வெளிப்படுத்தாத அன்பும் கறக்காத பாலும் பரிமாறாத உறவும் பறிக்காத பழமும் வீணாகி விடுபவை
C நாம் எதை அதிகம் பயன்படுத்துகிறோமோ அதைத்தான் வேறுபடுத்தி சொற்களை உருவாக்குவோம்
D இழுத்துக்கொண்டு போனால் தூது நீர்த்துப்போகும்
E உரக்கப் பேசுவதெல்லாம் உரத்த சிந்தனையாகிவிடாது
F மௌனத்தைப் பயின்றவர்கள் சின்னச் சின்ன ஒலிகளைக் கூட நன்றாகக் கவனிக்க முடியும்
G முகமூடி அணிந்துகொள்ளுகிற மனிதர்கள் போலியான முகபாவங்களைச் செய்வார்கள்
H நூலகத்தின் அமைப்பு அங்கு சென்றதும் நம்மை மௌனமாக்கிவிடுகிறது
சர்வதேசத்தின் வாழ்வியல் வகைமைகளில் சிந்தனையால் நீந்திப் பெருநெடுங்காலத்தின் அனுபவக் குவியலிலிருந்து எடுத்துக் கோர்க்கிற உதாரண மலர்கள் வாடாமொழி மாலையாகவே மனம் பறிக்கின்றன. தமிழின் தோரணவாயிலாக மட்டும் இருந்துவிடாமல் உலக மொழிகளிலிருந்தெல்லாம் பொருத்தமும் நுட்பமும் நிரம்பிய பல விஷயங்கள் வாசிப்பவர்களுக்கு விஷயதானத்தை நல்கித் தெளிவுறுதலைச் சாத்தியப்படுத்துகின்றன. இந்த நூலுக்கு முன்பின்னாய் ஒருவரது ரசனையும் தேடலும் மேம்படுவதற்கான பல சாளரங்களைத் திறப்பித்துத் தருவது மேன்மை. ‘எப்படி வாசிக்க வேண்டும் எப்படிக் குறிப்பெடுக்க வேண்டும்’ என்பதெல்லாம் தொடங்கி முழுமையான தயாரிப்பின் பல்வேறு படி நிலைகளைக் காட்சிப்படுத்திய வகையிலும் ரசிக்க வைக்கிறது. இந்த நூலெங்கும் பார்வையினூடாகப் பயணமேற்கொண்டு என் மனம் புகுந்தவற்றில் பத்தே பத்து
“மரகத இழைகளை” மட்டும் இங்கே கற்றையாக்க விழைகிறேன்
1 ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடைய இறுதிச்சொற்கள் என்ன என்பது யாருக்கும் தெரியாது. அவர் ஜெர்மன் மொழியில் பேசினார். அவருக்குப் அவருக்கு பணிவிடை செய்த செவிலிப்
பெண்ணுக்கு ஜெர்மன் மொழி தெரியாது அதனால் அந்த மகத்தான மனிதர் இறுதியில் என்ன சொல்ல வந்தார் என்பது தெரியாமல் போய்விட்டது
2 ரகசியமான மொழியைப் பயன்படுத்துவது அந்தக் காலத்திலிருந்தே புழக்கத்தில் இருக்கிறது பாரசீகத்தினுடைய ஹிஸ்டியேஸ் என்பவன் ஒரு தகவலை அரிஸ்டோகரஸ் என்ற மன்னனுக்கு அனுப்புகிறான் அவன் ஓர் அடிமை மொட்டைத் தலையில் பச்சை குத்தி முடி முளைக்கும் வரை காத்திருந்து அவனை அரிஸ்டோகிரஸிடம் அனுப்பி வைக்கிறான் அரிஸ்டோகிரஸ் அவருடைய தலையை மழித்து செய்திகளை வாசித்துக் கொள்ள வேண்டும்
3 ஜான் அடேருடைய தலைமைப் பண்புகள் குறித்த சிறு பயிற்சி வகுப்பு பிரமிக்க வைக்கிறது. ‘நாம்’ என்கிற சொல்லை முக்கியமானதாகவும், ‘நான்’ என்கிற சொல்லை அபத்தமானதாகவும் அவர் குறிப்பிடுவது அழகு.
4 காதலர் தினத்தன்று காப்புரிமையை பெற்றதனாலோ என்னவோ தொலைபேசி காதலர்களை உருவாக்கும் சாதனமாக இன்றும் திகழ்கிறது
5 ஜோசப் ஹேய்டன் அவரது மனைவி இருவரும் கொள்ளும் கடிதங்கள் சுவாரசியமானவை போலவே கபில்தேவ் தன் ப்ரியத்துக்குரியவரிடம் காதலை வெளிப்படுத்திய விதமும் பேரழகு
6 சாவியிடம் கல்கி “நல்ல விஷயங்களென்றால் அது எப்படி மறந்து போகும்?” எனக் கேட்டது அற்புதம்.
7 எம்மா பாம்பெக் கூறிய ‘நகைச்சுவை அழியும்போது நாகரிகமும் அழிந்துவிடும்’ எனும் மொழிப்பொன்
8 வள்ளுவர் கூட பத்து குறட்பாக்களில் ஒரு செய்தியைச் சொல்ல முற்படுகிறபோது அதில் ஒரு குறட்பாவிலாவது கன்னத்தில் அறைந்ததைப் போலக் கூறுவதைப் பார்க்கிறோம்
9 ஜீனட் விண்டர்சனின் ‘புத்தகமும் கதவும் ஒன்று, எதைத் திறந்தாலும் நீங்கள் வேறு உலகத்துக்குள் நுழைவீர்கள்’ என்கிற பொன்மொழிதான் எத்தனை அழகானது
10 எழுதுவதற்குக் கதையை ஆசிரியர் தேர்ந்தெடுப்பதில்லை, கதைதான் அவரைத் தேர்ந்தெடுக்கிறது – ரிச்சர்ட் பி டென்னி
இந்த நூல் ‘என்ன பேசுவது என்பதை மட்டும் சொல்கிறதா, எப்படிப் பேசுவது என்பதை மட்டும் விவரிக்கிறதா’ என்றால் இல்லை, மாறாக பேச்சென்னும் பெருங்கலையின் ‘அ முதல் ஃ’ வரையிலான சகலத்தையும் அலசுகிறது. பேச்சுக்கலையின் எட்டுத் திக்குகளையும் அலசி, பேச்சாற்றலின் நீள அகல ஆழ உயரங்கள் யாவற்றையும் பொறுமையாகவும் பொறுப்புடனும் அறியத் தருகிறது. பேச்சு என்பது வெறும் கலை அல்ல அது ஒரு பொறுப்பு. அதற்குத் தேவை பொறுமை. இந்த இரண்டையும் ஆழத் திருத்தமாய் ஒருவரது மனத்தில் பதிவதற்கான அகவொளிப் பாய்ச்சலே இந்த நூல். காலத்தைத் வாளாக்கி மொழியைக் கேடயமாக்கி உலகத்தைக் கால்கள் பாவுகிற நிலமாக்கி அனுபவத்தைக் குதிரையாக்கிச் சிந்தனையெனும் லகானைக் கையில் பற்றி மனத்தைக் கொண்டு நிகழ்த்திப் பார்க்கிற உன்னதமான சஞ்சாரத்தின் அடைதல் என்றே சொல்ல முடிகிறது.
நூல் முழுவதும் வரலாறு,அறிவியல்,உளவியல் இந்த மூன்று அம்சங்களாலும் நிரம்பியிருப்பது இன்னுமோர் அழகு. தகவல்கள் நம்மைக் கரம் பற்றி அழைத்துச் செல்வது பாங்கு.ஒரு நூலகத்தின் உள்ளிருக்கும் கணம் போல் உணரச்செய்திருப்பது சிறப்பு. அனுபவங்களை வரிசைப்படுத்தி விவரித்து அறியத் தந்த ஆதுரம் போற்றுதலுக்குரியது. இந்த நூலின் நோக்கம் என்னவெல்லாம் செய்தால் ஒருவன் சிறந்த பேச்சாளனாக உருவாகலாம் என்பதைத் தயாரித்துத் தருவது மட்டுமல்ல. எவற்றை எல்லாம் ஒருவன் முற்றிலும் அறவே நீக்க வேண்டும் கைக்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும் என்பதையும் பல படி நிலைகளில் பட்டியலிட்டுத் தந்திருப்பது தான் இதற்கொரு முழுநிலவுப் பூரணத்தை நல்குகிறது.
இந்த நூலில் மிக அதிகமாக இடம்பெற்றிருக்கக் கூடிய சொல் எது தெரியுமா..? என் வாசிப்பினைப் பொருத்த அளவில் அது ‘வேண்டும்’ என்ற சொல் தான்.
“வேண்டும்” எத்தனை அற்புதமான சொல்..! இந்த நூல் வேண்டும். இது காட்டுகிற வழிகள் வேண்டும். வாசிக்கிறவர்கள் இதன் உட்பொருளை முழுமையாக கிரகித்திட வேண்டும். பின் வாழ்காலமெல்லாம் பலவேறு சந்தர்ப்பங்களில் அவற்றைப் பயன் படுத்த வேண்டும். உலகம் சிறந்து உய்ய வேண்டும் அதற்கு இன்னும் இது போன்ற பற்பல தலைப்புக்களில் பல நூறு நூல்கள் பிறந்திட வேண்டும். அவற்றுள் பலவற்றை நம் முன்னோடி எழுத்தாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிட வேண்டும். நமக்கெல்லாம் ஈந்திட வேண்டும். பெரிய கடவுள் காக்க வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் என்று பாரதியின் விழிவிரிந்த கனவொன்றின் அதே தொனியில் இந்தச் சொற்களும் ஒலிக்கின்றன.
அட…இதனை இவ்வண்ணம் கண்டால் இப்படியானதாக இருக்கிறதே என்ற வியப்பை இந்த நூலின் பல இடங்களைக் கடக்கும் போதும் ஏற்படுத்துகிறார் ஆசிரியர் இறையன்பு. வாழ்வில் எளிய தோன்றல்களாகவே தென்பட்ட போதிலும் எத்தனை நுண்ணிய விலக்கங்கள் அவை என்பதை அறிகையில் வியக்காமல் இருப்பதற்கில்லை. அப்படியான அரும்பெரும் தோன்றல்களில் சிலவற்றை இங்கே பட்டியல் செய்கிறேன்.
1 உரையாடலில் வடிவம் முக்கியம், அது வெள்ளித் தட்டாகவும் உள்ளடக்கம் அறுசுவை உணவாகவும் இருக்கவேண்டும். ஒரு உரையில் இனிப்பு பாராட்டாகவும், சொந்தச் சிந்தனைகள் சோறு போலவும், உவமைகள் உப்பாகவும், சம்பவங்கள் சாம்பாராகவும், அரிய கருத்துகள் ரசமாகவும், மேற்கோள்கள் மோராகவும், அனுபவங்கள் துவர்க்கும் துவையலாகவும், பழமொழிகள் பச்சடியாகவும், அறிவுரைகள் கசப்புப் பொரியலைப் போலவும், அடுக்குமொழிகள் அப்பளம் போலவும், மாற்றுக் கருத்துக்கள் ஊறுகாய் போலவும், முடிவுரை தாம்பூலம் போலவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அது செவிக்கு விருந்தாக அமையும்.
2 பலருக்கு வரவேற்புரையும் வரவேற்பறையைப் போன்றது என்பது தெரிவதில்லை. வரவேற்புரை என்பது வாசலில் நின்று எல்லோரையும் வரவேற்க முடியாத காரணத்தாலும், தனித்தனியே வணங்கி மரியாதை செய்யமுடியாத காரணத்தாலும் மேடையில் நிகழ்த்தப்படுகின்ற கவுரவம்.
3 உள்ளாடையைப் போல இருக்கவேண்டியது தொகுப்புரை. எவ்வளவு அழகாக இருந்தாலும் அது சட்டையை மீறிய பனியனாக இருக்கக் கூடாது.
4 வெறுப்பு அரசியலை வேரோடு அறுப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவை
5 வெளிநாடு போய்வருவதெல்லாம் சாதனையாகாது. அப்புறம் விமானத்தை ஓட்டுகிறவர்களுக்கு தினமும் பாராட்டுவிழா நடத்தவேண்டி வரும். ஒருவர் செய்த சாதனை சமூகரீதியாக இருக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் பலனடைவதைச் சாதனையாகக் கருத முடியாது.
6 தேர்தலைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் தாங்கள் வெற்றிபெறப் போவதாக மிகவும் உறுதியாகப் பரப்புரை செய்வதற்குக் காரணம் ஒன்று உண்டு. மக்கள் தோற்றுப்போகிற கட்சிக்கு ஓட்டுப்போட விரும்புவதில்லை என்பதுதான் அது. தாங்கள் வாக்களிக்கிற கட்சிதான் வெற்றிபெற வேண்டுமென மக்கள் நினைப்பதில் ஒரு உளவியல் பார்வையும் உண்டு. நான் தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்ற எண்ணமும் அதில் ஏற்படுகிறது.
7 தமிழ்நாட்டில் பலர் பெயருக்கு முன்னால் அடைமொழிகள் இருப்பதைப் பார்க்கலாம். கொடுப்பவர்கள் அதை விளையாட்டாகச் செய்தாலும், வாங்கிக் கொள்பவர்கள் அதைப் பெருமையாக எடுத்துக்கொள்வதையும், பெயருக்கு முன்னால் போட்டு மகிழ்வதையும் நான் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
8 பொலிவு வேறு, அழகு வேறு. நாம் அனைவருமே அழகானவர்கள்தாம். நம்முடைய சில செயல்களால் நம்மை அசிங்கமாக்கிக் கொள்கிறோம். பொலிவான தோற்றம் என்பது சரியாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடி, தூய்மை துலங்கும் முகம், செம்மைப்படுத்தப்பட்ட உடல் ஆகியவற்றையே குறிக்கும்.
9 வரலாறு நம்மை எச்சரிப்பதற்கும் பல பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும், மேன்மையான நிர்வாக முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பெரிய வாய்ப்பாக அமைகிறது.
10 நாம் சரித்திரத்தைச் சுவையாகச் சொல்லித்தருவதில்லை. அவை சண்டைகளின் தொகுப்பாகவும், ஆண்டுகளின் அணிவகுப்பாகவும் இருக்கின்றன.
உளவியல் பூர்வமாக பேச்சுக்கலையினை அணுகியிருப்பது பல இடங்களில் ஈர்க்கிறது. முற்றுப் பெற்ற வாக்கியங்களின் முடிவுறா அர்த்தங்களாய் வாசித்து முடித்த பிறகும் சில தருணங்களும் அவற்றோடு இயைந்து ஒழுகக் கூடிய மொழிதல்களும் மீண்டும் மீண்டும் அகத்தின் ஆழத்தில் அதிர்கின்றன. ரூப அரூபங்களின் சாதாரண வரிசையில் தான் நாம் அற்புதங்கள் பலவற்றைத் தொலைத்துவிடுகிறோம் என்று சொல்லத் தோன்றுகிறது. நூறுமுறை நூறு பயணங்களில் பார்க்க வாய்த்தும் கவனிக்க மறந்த உயர இடுக்கொன்றில் குறிஞ்சிப் பூ பூத்திருப்பதை யதார்த்தமாய்க் காண வாய்த்தால் என்னவிதமான பிரமிப்பும் ஆனந்தமும் நம்பவியலாத அதிர்வும் தோன்றுமோ அப்படியான உணர்தல்களை இந்த நூலின் சில அபூர்வ நிரடல்கள் சாத்தியம் செய்திருப்பது பேரழகு.
‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்பதை நெற்றி நடுவே திலகமிடுகிறாற் போல் சுட்டியிருப்பது சிறப்பு.
இதனைப் பாருங்கள்
“ஒரு சிறந்த பேச்சாளன் முதலில் ஒருவரை சம்மதிக்க வைப்பான் பிறகு அவரை சீர் திருத்துவான். பிறகு அவரை தன் பக்கம் இழுத்துக் கொள்வான் நல்ல பேச்சாற்றல் உள்ளவன் சோர்வடைய மாட்டான். பூரணத்துவத்தை அடைய வேண்டுமென்றால் பல பொருண்மைகளில் தெளிவு உடையவராக இருக்க வேண்டும். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் ஞானத்துடனும் சரளமாகவும் கண்ணியமான முறையில் கட்டுக்கோப்பாக உரையாற்றுபவன் தான் சிறந்த சொற்பொழிவாளனாக முடியும்” கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டிய உபதேசம் அல்லவா..?
நட்சத்திரப் பேச்சாளர்களைப் பற்றி ஆசிரியர் சொல்வது வெறும் கூற்றல்ல.ஒருவர் பேச்சின் வழி அடைவதற்கும் மிளிர்வதற்கும் தேவையான இலக்கணம்.
“நட்சத்திரப் பேச்சாளர்கள் வசீகரிக்கும் எடுப்பு, வாளிப்பான தொடுப்பு, வளப்படுத்தும் முடிப்பு எனத் தங்கள் உரையை வடிவமைப்பார்கள். எடுத்துக்கொண்ட பொருண்மையிலிருந்து சிறிதும் விலகாத அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடிப்பவர்கள். தக்கையான சம்பவங்களையும், தட்டையான கதைகளையும் கூறிப் பேச்சை நிரப்பும் பிரயத்தனத்தில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.நல்ல பேச்சாளர்கள் சுயபுராணத்தைத் தவிர்ப்பார்கள். தேவையானால், அனுபவத்தைக் கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் அவற்றைத் தெரிவிப்பார்கள். அது தம்பட்டம் அடிப்பதாக இல்லாமல் யதார்த்தமான சித்தரிப்பாக இருக்கும்.வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் இடைவெளி இல்லாத பேச்சாளர்களே வரலாற்றில் வாழ்கிறார்கள்”
“நல்ல உரையாடல் நடக்க வேண்டுமென்றால் தன்முனைப்பு குறைவாக இருக்க வேண்டும்” என்பது கற்றுத் தருவதில் ஒரு கண்டிப்பான ஆசிரியரைப் போல் தொனிக்கிறது. “மரியாதை செலுத்துவதற்கும் பாராட்டுவதற்குமான வேறுபாடு மயிரிழை அளவுதான் என்றாலும் பாராட்டுவது முக்கியம்” என்ற வரி அதே ஆசிரியரின் கருணையோடு சொல்லித் தருகிறது. “நம்முடைய இயல்பான பாரபட்சங்களை நாம் அறிவதும் அவசியம்” என்பதை டைரியில் குறித்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல மனவழி பின்பற்றுவதும் அவசியம். “நமக்குள் நிகழ்கிற வாக்குவாதத்தையும் நாம் நிறுத்துவது அவசியம். இதைப் பேசுகிறவர்கள் கவனிக்காவிட்டாலும் உடல்மொழியின் மூலம் அவை வெளிப்பட்டே தீரும். நம் உச்சரிப்பு சொல்லாததை உடல்மொழி சொல்லிவிடும். சலிப்பையோ சந்தேகத்தையோ கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்” என்பதில் தாய்மையின் பேரன்பும் வழிகாட்டியின் கண்டிப்பும் ஒருங்கே மொழிகிறதல்லவா..?
“தகவல் பரிமாற்றத்தை விளங்கிக்கொள்ள முயற்சி செய்யவேண்டுமே தவிர, நாமாக அவற்றுக்கு விளக்கம் சொல்லக் கூடாது” என்பது வெறும் வாசகமல்ல திருப்பெரு வாசகம். “கல்லூரி மாணவர்களிடம் பேசுகிறபோது அவர்களில் ஒருவராக நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளுவது அவசியம்” என்பது கோடிப் பொன் பெறும் யோசனை.”பார்வையாளர்கள் தாங்களும் மதிக்கப்பட வேண்டும்” என்கிற மென்மையான உணர்வை ஆழ்மனத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை மந்திரம் போல் உச்சரிக்க வேண்டுமல்லவா? “எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்களிடம் விவாதிக்கக் கூடாது” என்பது வணிகமாமொழி தான் இல்லையா..? “ஊசி நுழைவதைப் போல முதலில் பாராட்டு நுழைந்தால் அறிவுரை என்கிற நூலையும் அதற்குப் பின்னால் சாமர்த்தியமாக உள்ளே நுழைத்துவிட முடியும்” என்பது அப்படியே பின்பற்றுவதற்கான அதிசிறந்த மொழி. “எதிரே இருப்பவர் பேசாமல் அமர்ந்திருந்தால் அவர் திமிர்பிடித்தவர் என்பது பொருளல்ல, கூச்ச சுபாவம் உள்ளவராக இருக்கலாம்” என்பதைப் படிக்கிற போது வியந்துகொண்டேன். இப்படிப் பார்க்கச் சொல்லித் தருவது தானே படர்க்கைப் பேரன்பு?
இவற்றையெல்லாம் மனச்சுவரில் சொற்கல்வெட்டின் பொன்லிபிகளாகவே பதிந்து கொள்ளத் தோன்றுகிறதல்லவா..?
“ஆசிரியவாஞ்சை” என்றொரு பதம் உண்டு. தன்னலம் கருதாமல் தன்னைப் பற்றிக்கொள்பவர்களின் மீது வழிகாட்டி ஒருவருக்கு ஏற்படக் கூடிய பன்முக ஆதுரம் அது. அப்படியான பேரன்பு வெறும் பழக்கத்தினாலோ வழக்கத்தினாலோ ஏற்படுவதன்று. மாறாக அது ஒரு மனவார்ப்பு. பக்குவத்தினூடாகச் சென்றடைவதற்கான தூரம் மற்றும் செல்லத் துணை நிற்கிற ஒளி என்று கூட அதனை வகைமைப் படுத்தலாம். இந்த நூலைப் படித்து முடிக்கிற கணம் அப்படித் தான் உணர்ந்தேன். மனக்கலயம் நிரம்பித் ததும்பும் வண்ணம் ஆசிரிய வாஞ்சை இருந்தால் மட்டுமே ஒருவர்க்கு இப்படி ஒரு எழுத்தாக்கம் கைவரும்.
இறையன்பு அவர்கள் காணத் தருகிற சித்திரம் பெருஞ்செல்வசேகரத்தைச் சென்று சேர்வதற்கான வழித்தடத்தைப் பல கரங்களிடம் துண்டுதுண்டாக்கிப் பிரித்தளிக்கப் பட்ட வரைபடத்தின் பூர்த்தி கணத்துக்கு ஒப்பானது. இந்த நூலைப் படிக்கிறவனுக்குக் கிடைக்கிற தேர்ச்சியும் தெளிவும் மகாகனம் கொண்டவை. நூறு நூறு நூல்களைப் பிரித்துப் படித்துக் குறித்துக் கழித்துச் சாறு பிழிந்து சுவை கூட்டித் தன் அனுபவத்தை,உயரிய ஞானத்தைக் கலந்து நிறைத்த பிறகு உருவாகிற ஒற்றை மாமலர் . பெருமலைச் சிகரத்தில் மட்டுமே கிட்டுகிற உச்சித் தேன் என்பார்களல்லவா, அப்படியான உச்சித் தேன் வகையில் இந்த நூலொரு உச்சத் தேன்.
“பாராட்டுவது பன்னீர் தெளிப்பது போல இருக்க வேண்டும், பருவமழை போல இருக்கக் கூடாது” என்று முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் இந்த நூலில் சொல்லி இருப்பதை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்கிறேன். அதனால் தான் சிறு துளிப் பன்னீராய் இங்கே பகிர்ந்திருக்கிறேன். இன்னொரு உண்மையை இந்த இடத்தில் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டியிருக்கிறது. இந்த நூலினூடாக நான் பெற்றதும் கற்றதும் மிக மிக அதிகம் என்ற வகையில் பருவங்களை இணைத்துப் பொழிகிற சர்வகால மழையாகவே இந்த நூலைப் பெரிதாக இன்னுமின்னும் விரிவாகப் பாராட்டிடவேண்டும் என்றும் என் மனம் விரும்புகிறது. “என்ன பேசுவது எப்படிப் பேசுவது” என்கிற இந்த நூலுக்கு ஆயிரம்கோடி முழு நிலவுகளைக் காண்பதற்கான முகாந்திரம் மட்டுமல்ல முழுத் தகுதிகளும் இருக்கிறது என்பது கண்கூடு. பேச்செனும் பெருங்கலைக்கான களஞ்சியமாகவே இந்த நூல் காலங்களை ஆண்டு பெருவெற்றி அடைவதற்கு என் வாழ்த்துக்களைத் தெரியப்படுத்தி மகிழ்கிறேன்.
வாழ்தல் இனிது