தினமும் உன் நினைவு

தினமும் உன் நினைவு


 

இன்று உன் நினைவு தினம்
இந்த ஒரு வாக்கியத்துக்குள்ளேயே எத்தனை முரண்?
இன்று மட்டுமா உன் நினைவு?
உன் நினைவற்ற தினம் என்றேதும் உண்டா?
இன்றும் உன் நினைவு தினம் என்று எழுதலாமா
“””உன் நினைவு தினமும்””
நீ பாடாத சொற்கள் பாவம் செய்தவை
உன் நாவால் நீ வருடாத வார்த்தைகளுக்கு
நற்கதி இல்லை
நீ உச்சரித்த அத்தனை சொற்களும்
மழையில் நனைத்தெடுத்த புனிதங்கள்
உன் மனத்தால்
நீ வார்த்த பாடல்களெல்லாமும்
நிரந்தமாய் சஞ்சரிக்கும் சூர்யப்புரவிகள்
உனக்கேது எல்லை
உனக்கேது முற்றும்
உனக்கேது மரணம்
உனக்கேது முடிவு
உடல் பருத்த குழந்தை
ஒல்லியான மரத்தின் பின் நின்று கொண்டு
தன்னைக் கண்டுபிடிக்கச் சொல்கிற காட்சி ஒன்று
வந்து போகிறது மனத்திரைக்குள்
நீ காணாமற் போயிருப்பதும் அப்படித் தான்.
நீ இல்லாமற் போனதாக்ச் சொல்லப்பட்ட
இந்த ஒருவருடத்தின் எல்லாமுமாய் ஆனவன் நீ
நீ இல்லாமற் போனதாய்ச் சொல்லப்பட்ட
இந்த வருடத்தின் அத்தனை நாட்களிலும்
உன் பாடல்கள் ஒலிக்காத
ஒரு கணமுமில்லை தினமுமில்லை
பல்லக்காகவும் பரிவட்டமாகவும் மட்டுமல்ல
மருந்தாகவும் மந்திரமாவும்
முழங்கியதெதுவும் உன் பாடல் தான்.
வாதம் அறியாதவன் வழக்குரைக்க வக்கீல் தேடுவது போல்
காதலெனும் உணர்வை
உன்னைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டவர் பல கோடி
நெறி வழுவாத ஒரு நீதிமானைத் தேடி
நியாயம் செப்பச் சொல்லி ஓடி வருகிற பெருங்கூட்டம் போல்
வாழ்வின் உணர்வாட்டங்கள் பலவற்றை
உன்னை உணர்விக்க்ச் சொல்லி
உனை நாடி வந்தவர் பல கோடி
நீ அழுதாய் மொழிகள் மனம் குமுறின
நீ அழுதாய் மொழிகள் கண்கலங்கின
நீ அழுதாய் மொழியோரங்களில்
குருதித் துளிகள் எட்டிப்பார்த்தன.
நீ சிரித்தாய் சர்வ தேசங்களும்
சந்தோஷங்கள் கண்டன
நீ சிரித்தாய்
ஒரு குழந்தை முதன் முதலில் பேசின அத்தனை மயக்கங்களும்
மனத்துள் நேர்ந்தன
நீ சிரித்தாய் இனியில்லை என்றான பலவும்
‘ஏனில்லை’ என்று மறு நிர்மாணம் செய்து மலர்ந்தன
பாடல் என்ற ஒரு சொல் இருக்கிறதில்லையா
அது சகலமொழிகளிலும்
தன்னை இனி “பாலு” என்று அழைத்தால் போதும்
என்று சொல்லியிருக்கிறதாம்.
அப்படித் தானே பாலு
பாடல் என்றால் பாலு
பாலு உனக்குத் தெரியுமா
நீ ஒரே ஒருவன் இல்லை என்று
நீ பாடிய அத்தனை பாடல்களுக்குள்ளும்
உன்னொரு பிரதி உண்டு என்று
பாலு நீ மழையின் குரல்வடிவம்.
நீ சென்று சேர்ந்ததெல்லாம் வற்றாக் கலயங்கள்
உன் அபாரங்கள் அசாதாரணமானவை
நீ செய்து காட்டிய வித்தகங்கள்
வேறொருவர் கனாக்காண்பதற்கும் ஏலாதவை
நீ ஒரு நல்நடிகன்.
குரலின் முகத்தால் நடித்த ஒரேயொருவன்
எந்த மொழியில் பாடுகின்றாயோ அந்த மொழி
‘தன்னை உன் அன்னை’ என்று எண்ண வைப்பாய்.
மற்ற மொழிகளெல்லாமும்
நீ வந்து ‘பாடாயோ தன்னை’ என்று ஏங்க வைப்பாய்
உனக்குத் தெரியாது என்று நீ ஒரு மொழியைச் சொல்லிவிட்டால்
‘நானெங்கே செல்வேன்’ என்று அந்த மொழி சோர்ந்து நிற்கும்
நீ பாடல் பாடிய மொழிகளெல்லாமும்
கிரீடம் தரித்துச் சேர்ந்து நிற்கும்
நீ பாடலுக்கானவன்.
பாடல் உன் புரவி
நீ செய்து காட்டிய சித்தன்
உன் பாட்டுக்கள் மகத்துவம் யாத்தவை
மனம் நொந்த பலருக்கும் மருத்துவம் பார்த்தவை
பாலு
நீ மொழிகளின் பொஸசிவ்னெஸ்
சொற்களின் செல்லக்குழந்தை
எத்தனை கனவானோ நீ அத்தனை குணவான்
உன் மனவானை விட
நிச்சயம் விஸ்தாரத்தில்
குறைந்தது தான் நிஜவான்
காற்று உன்னிடம் எப்போது தோற்கும் தெரியுமா
அதனால் பல கோடி முகங்களை வருட முடியும்
ஆனாலும்
உன்னோடு சேர்கையில் மட்டும் தான்
அதனால் மனங்களை வருட முடியும்
நெருப்பு உன்னிடம் எப்போது மண்டியும் நீ அறிவாயா?
கோபத்தை
ரோஷத்தை
பிடிவாதத்தை
சவாலை
வாழ்வின் சூட்சுமத்தை
உறுதியை
உள்ளக்கிடக்கையை
விட்டுக் கொடுக்க முடியாத சத்தியத்தை
நீ பாடத் தொடங்கும் போது
நெருப்பு உன் வார்த்தைகளுக்கு நடுவே
தானும் வந்து நின்றுகொள்ளும்.
நிலம் எப்போது உன்னை நிகர் செய்தது என்று
நீ அறிவாயா பாலு?
தாய்மையை பொறுமையை பாசத்தை நட்பை நேசத்தை
இந்த உலகில் எஞ்சியிருக்கக் கூடிய
அத்தனை அத்தனை நன்மைகளையெல்லாமும்
நீ பாடிப் பார்த்த போழ்துகளில் தான்
நிலம் நிகரானதும்
.
பாலு நீ நீர்மம் தான்
இல்லையில்லை
பாலு நீர்மமும் நீயேதான் ஆகிறாய்
அண்ட சராசரத்தின் “காதல் குரல் ராஜன்” நீ ஒருவன் தானே பாலு
உன்னை விட்டால் காதலின் வழக்கு தோற்றல்லவா போகும்?
மனப்ரியத்தில் தொடங்கி
ஒருதலை ஏக்கத்தைத் தொடர்ந்து
காதலாதலைக் கைப்பற்றிக்
காதலின் ஆழத்தில் கசிந்துருகி
சேர்ந்து போவதின் சுவை சொல்லி
சோர்ந்து தனிப்பதன் ஊடாட்டங்களைப் பகிர்ந்து
வரப்போகிற உறவுக்காக
வாழ்வை இரண்டால் வகுத்து
விழிகளாக்கிக் கொண்டு காத்திருந்து
வராமற் போவதன்
வாதைகளின் பொருள்கூறிக்
கலைந்திருத்தலின் கடினம் செப்பிக்
கரைந்து போவதன் சகலவழிகளையும்
காட்டிக் கொடுத்தவன் நீ தானே பாலு..?
காதல் கானங்கள் வரவழைத்துத் தருகிற
கண் துளி நீரெல்லாம்
நீ செய்த தானங்களன்றி வேறேது
நீ பாடல்வேதம்,
பஞ்சபூதம்
பாடற்கலையின் நாற்புற எல்லைகளும்
நீயாலான உன்னாலானவை
நீ
கண்மூடிய அந்தக் கணமும்
ஒன்றே ஒன்று தான் நிச்சயம் தோன்றியிருக்கும் பாலு
அது என்ன தெரியுமா..?
உனக்காக
உன் மறைவுக்காக
அஞ்சலி செலுத்துவதற்காக
ஒரேயொரு நிமிடம்
இந்த உலகம்
மௌனம் அனுஷ்டிக்கும் போழ்தும் கூட
தூரத்திலெங்கோ
உன் பாடல் தான்
தன்னைச் சன்னமாய்
ஒலித்துக் கொண்டிருக்கும்
என்று.
போதுமானவன் பாலு
நீ
எப்போதும் வானவன்