தேன் மழைச்சாரல் 1

தேன் மழைச்சாரல் 1
சரஸமும் ஹாஸ்யமும்


ஐம்பதுகளின் இறுதி வரைக்கும் தமிழ்த் திரைப்பாடல் செல்திசை அறியாமல் செல்லும் படகைப் போலத் தான் இருந்தது. பாடலின் வடிவம் உள்ளடக்கம் விரிவடையும் தன்மை தொகையறா பல்லவி அனுபல்லவி சரணம் என எல்லாவற்றிலும் இசையின் ஆதிக்கமும் ஒரு தலைப்பட்சமான முன் முடிவுகளுக்கு அப்பாலான பாடலாக்கங்களும் நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தன. இவற்றை ஒரு அல்லது சில மனிதர்களின் ஓங்கிய கரம் விதித்தளித்த கட்டளையாக இருந்திடவில்லை. நாயக மையம் மற்றும் புகழ்மையம் ஆகியவற்றின் செல்வாக்குக் காலத்திற்கு முன்பு சினிமா மாபெரிய அச்சத்தோடும் வணிக ரீதியிலான தேவைகளை முன்னிறுத்திய ஒற்றைத் தன்மையோடும் இருந்ததாகவே கொள்ள முடிகிறது. முதலாளிகளின் விருப்பம் ஓங்கியிருந்த காலம் அது. பாடல் என்பதன் எழுத்துவடிவத்தைக் காட்டிலும் அதன் இசைவடிவமும் நில்லாமல் எல்லாரிடத்திலும் சென்று பிரபலமடைந்தாக வேண்டிய பொதுத் தேவையுடனும் மட்டுமே பாடல்கள் புனையப்பட்டன. இசைவடிவிலான பரீட்சார்த்தங்களுக்கும் புது முயல்வுகளுக்கும் எல்லாம் இடம் கிட்டிய அளவுக்கு எழுத்து மூலம் நிகழ்ந்த புனைவுக்கு இடமளிக்கப் படவில்லை.
Kaviyarasar Kannadasan said on the topic of maturity! || பக்குவம் என்ற  தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் சொன்னது!
மு
தன் முதலாகக் கண்ணதாசன் முதலாளியாகவும் பாடல் புனைகிறவராகவும் முன்னெழுந்து நிலைபெற்ற காலம் என்று சொல்லத் தக்க 50 களின் இறுதி 3 வருடங்கள் வரை பாடல்களின் யதார்த்தம் இவ்வகையிலாகத் தான் இருந்தது. அப்போதைய பாடல்கள் தெலுங்குக் கீர்த்தனைகளாகவும் அளவுகடந்த ஆங்கிலச் செறிவுடனும் இருப்பதை மக்கள் ரசனையாக நிறுத்திடுவதற்கான முயல்வுகள் காலமெல்லாம் நிகழ்ந்தவண்ணம் இருந்தாற் போலவே அக்காலப் பாடல்களை ஜரிகைச் சொற்கள் கொண்டு பூர்த்தி செய்துவிடுவதும் நிகழ்ந்தபடி இருந்தது. அளவுக்கதிகமான மணிப்பெருக்குச் சொற்களும் அர்த்தமற்ற பிறமொழிச் சொற்களின் கூட்டும் கொண்டவையாகப் பாட்டுக்கள் அதிகதிகம் புனையப்பட்டன. மக்களுக்கு பாடல் ஒரு ஒட்டாத அந்நியத் தன்மை மிகுந்த பண்டமாகவே தொடர்ந்து விளங்கிக் கொண்டிருந்தது எனவும் சொல்ல முடியும்.

 

 

Ghantasala : Playback Singer Wiki, Bio, Filmography, Ghantasala Movies List, Songs, Age, Videos
கண்டஸாலாவைத் தெலுங்கு தேசத்தின் ரசிகர்கள் இன்றளவும் வழிபடவே செய்வது நிசம். தன் குரலால் எல்லோரையும் கொள்ளையடித்தவர் கண்டஸாலா. இசையமைப்பாளராகவும் பாடற்கலைஞராகவும் ஒருங்கே வென்றவர். தமிழிலும் இவரது புகழ்க்கோடு பெரியது. மனோகரமான குரலால் இவர் பாடிய பல பாட்டுக்கள் காலம் கடந்து ஒளிர்கிற வைடூர்யங்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தைய்யடா தைய்யடா என்று பாடும் பாங்கே அழகு எனில் அன்பு சகோதரர்கள் படத்துக்காக இருவேறு மனவிரிதலாக துக்கமும் சந்தோஷமும் கொண்டு பாடிய முத்துக்கு முத்தாக இன்றும் ஜொலிக்கிறது தானே? கல்யாண சமையல் சாதம் என்று கண்டஸாலா குரலெடுத்துப் பாடியது மாயாபஜார் படத்தின் அலாதியான பேரின்பப் பாட்டல்லவா..? பாதாள பைரவிக்காக கண்டஸாலா பாடிய அமைதியில்லா என் மனமே பாட்டும் அற்புதம் தான் இல்லையா? தேவதாஸ் படத்தில் துணிந்த பின் மனமே உலகே மாயம் இரண்டும் எல்லா நாளும் பௌர்ணமியாக வானில் நிரந்தரிக்கிற பாடல் நிலவுகள் எனலாம் அல்லவா?

 

சங்கு சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா
சங்கு சுப்ரமணியம் என்ற பேரில் அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுப்ரமணியம் நூறு பாடல்களுக்குள் எழுதியிருக்கக் கூடும். பி.சுசீலா வின் அறிமுகப் பாடலை எழுதியவர் இவரே. வசனகர்த்தாவாகவும் விளங்கியவர் எம்.எஸ்.எஸ். இந்தப் பாடலை சுப்ரமணியம் எழுதினார். மேனாரிகம் என்ற பெயரில் தெலுங்கிலும் குடும்பம் என்று தமிழிலும் ஒருசேரத் தயாரிக்கப் பட்டது இந்தப் படம். இசையளித்தவர் பெண்டியாலா நாகேஸ்வரராவ். ஆந்திர இசைஞரான இவர் தமிழிலும் பெற்றதாய் அண்ணி திருட்டுராமன் மறுமலர்ச்சி வீட்டுக்கு வந்த வரலட்சுமி சௌபாக்யவதி கலைவாணன் நான் வளர்த்த தங்கை ஸ்ரீனிவாசகல்யாணம் கலைவாணன் பக்தசபரி பட்டி விக்ரமாதித்தன் தூய உள்ளம் மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல்வேறு இசைக்கருவிகளை இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றவரான ராவ் தனித்துவமான இசைவழங்கித் தெலுங்கு சினிமாவில் இன்றளவும் மறக்கமுடியாத புகழோடு விளங்குகிறார். தெலுங்கில் இடம்பெற்ற பாடலின் அதே அளவுகளுக்குள் தமிழ்ப் பாடலின் பிரதி அடங்குகிறாற் போல் எழுதப்பட்டது இந்தப் பாடலை கண்டஸாலா பி.லீலா இருவரும் சேர்ந்து பாடினர்.
பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
பொன் வண்டுகளே நீர்
(பார்த்தீரா)
ஓ…….பொன் வண்டுகளா….
மழையாலே நீ நனைந்தாயென
தலை மீதினில் துடைப்பது போல்
மடி மீதினில் எடுத்தே
என்னுள்ளம் கொள்ளை கொண்டார்
(பார்த்தீரா)
ஓ…….பொன் வண்டுகளா
கோவில்தனில் வந்தென் தன்
மடிமீதவள் தலை வைக்க
பூமணமதினாலே ஆசை பொங்கி நானும் இன்பமுற
தப்பியவள்தான் வந்து தப்பெனதே என்றாளே
(பார்த்தீரா)
ஓ…….பொன் வண்டுகளா
அந்தமிகும் சுந்தரி நீ அன்பாகவே வாழ்வோமினி
நீயே என் ராணி என ஆசை மொழி சொன்னாரே

பார்த்தீரா இவர் சரசம் கேட்டீரா இவள் ஹாஸ்யம்

 

“சரசம்-ஹாஸ்யம்” என்ற இரண்டு சொற்களுக்கு ஈடாகத் தமிழ்ச்சொற்களைக் கொடுத்திருந்தால் இன்னும் வேறொரு தளத்தில் நின்றொலித்திருக்கும் இப்பாடல் என்பதில் எள்ளுட்புற அளவும் ஐயமில்லை. இருந்தபோதிலும் அந்தக் காலத்தில் சினிமாப் பாடல்களுக்குத் தரப்பட்ட அழுத்தத்தை மனதிற்கொண்டு இவற்றை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா..?