பரிவாதினி இசைமலர் 1
மணியம் செல்வனின் அட்டைப்பட ஓவியம் வெற்றிகரமான ப்ராண்ட் லோகோ போல் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டு விடுகிறது. நேர்த்தியான பெரிய சைஸ் புத்தகம் பலரது பல நாள் உழைப்பும் கனவும் ஒன்றிணைகிற புள்ளியிலிருந்து தொடங்கிப் பெரியதொரு சாதனையாக சாத்தியமாகியுள்ளது. இசை விரும்பிகள் நிச்சயம் தவற விடக் கூடாத லாக்-புக் இந்தப் புத்தகம். எஸ். சிவக்குமார் ஆசிரியராக இருந்து தயாரித்திருக்கும் இந்தப் பரிவாதினி இசைமலர்-1 ஒரு அற்புதம்!
எடுத்த எடுப்பில் அங்கமாலி ஜோஸ் குறித்த லலிதாராமின் கட்டுரையை வாசித்து முடித்தேன். எழுத்தென்பது ஒருவகையான டைம் மெஷின் பிரவேசத்தை சாத்தியப்படுத்துகிற மந்திர வஸ்து என்பதை இந்தக் கட்டுரையும் மெய்ப்பிக்கிறது. இந்த நூலின் அனேக பக்கங்களில் அந்த மந்திர வாசனையை நம்மால் உணர முடியும் என்றே தோன்றுகிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கையை சாட்சியப்படுத்துகிற அதே வேளையில் அந்தச் சாட்சியத்தினூடாக வேறொரு காலத்தை அதன் கலாச்சார-பண்பாட்டு-வாழ்க்கைமுறை நம்பகங்களையும் தெளியச்செய்தபடி நிரவி நிறைவது தான் இப்படியான கட்டுரைகளின் அதிகபட்ச விளைதலாக இருக்க முடியும். அந்த வகையில் லலிதாராம் எழுதியுள்ள இந்தக் கட்டுரை அங்கமாலி ஜோஸ் எங்கிற அதிகம் அறியப்படாத மேதமை ஒருவரைப் பற்றிய சரியான வெளிச்ச வார்ப்பு என்றே கருதுகிறேன்.
ஒரு துளித் தேன் தான் நான் மேலே சொல்லியிருப்பது. பத்திரிக்கைகளின் தொடர் வாசகர்கள் வருடத்துக்கு ஒருமுறை தீபாவளி மலர் என்று வெளியாகிற பண்டத்தைத் தத்தம் மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டு வாழ்ந்த ஒரு பெருங்காலம் உண்டு. அடுத்த பண்டிகையின் போழ்து அடுத்ததாய் ஒரு மலர் வந்து கையடையும் வரைக்கும் முந்தைய மலரின் எல்லாத் துளிகளையும் மனதார உறிஞ்சி விடுகிற வாசக தாகம் மெச்சத் தக்கது.
இந்தப் பரிவாதினி இசைமலர் 1 அப்படி அடுத்ததாய் இன்னொரு மலர் வந்து சேர்கிற வரைக்கும் லயித்துக் கிடப்பதற்கான பெரியதோர் தேன் கிண்ணம் தான் என்பதில் எள் நுனியளவும் ஐயமில்லை. இதொரு பெரிய காரியம். இசை பற்றிய இப்படி ஒரு மகா மலரை சாத்தியப்படுத்திய அத்தனை உழைப்புக்கும் ஒரு பெருவணக்கத்தை உரித்தாக்குகிறேன்.
இதனை உருவாக்கிய அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள். உம்மை நீரே வெல்க என்று இன்னுமின்னும் தொடர்ந்து இசைமலர்களை மலர்விக்க அன்போடு வாழ்த்துகிறேன்.
வாழ்தல் இனிது.
பரிவாதினி இசை மலர் 1
தொடர்புக்கு 9980992830
parivadinimusic@gmail.com