பொம்மை மடி

     பொம்மை மடி

 


 

“எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும் இப்ப வளர்ச்சின்ற பேர்ல எல்லாமே ராட்சச வேகத்துல ஓடிட்டிருக்கம். இதெல்லாம் எங்கன போயி முடியுமோ?”

அங்கலாய்த்துக் கொண்டே டாக்ஸி வேகத்தைக் குறைத்தார்.  “வான் நதி” என்று ஆங்கிலத்தில் பெயரெழுதியிருந்த  அடுக்ககத்தின் இடப்புறச் சாலை வெளியிலேயே ஓரங்கட்டி நிறுத்தினார். தன் செல் பேசியை எடுத்து கம்பெனிக்கு பேசி “260 ரூபாய் சார்” என்றார்.

பணத்தை ‘கூகுள்பே’ செய்தான். அப்பார்ட்மென்ட் வாசலில் செக்யூரிட்டி தடுத்ததும் “சித்ரா சுப்பிரமணியன் ஜி 106” என்று சொல்ல இன்டர்காமில் பேசிவிட்டு

“நேரா போங்க 3வது பிளாக் கிரவுண்ட் ப்ளோர்” என்று அனுப்பி வைத்தான்.

டாக்ஸி டிரைவர் சொன்னது சரிதான். ரகுவுக்கு தான் நடந்து கொண்டிருப்பது எந்த ஊரில் என்று லேசாகக் குழப்பியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த இடத்தில் ஆரவாரம் மிகுந்து கேட்டது. பல வயதுகளில் பிள்ளைகள் ஓடி ஆடிக் கொண்டிருந்தனர். முதியவர்கள் நடை பழக மத்திய வயதுக்காரர்கள் இறகுப் பந்தாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள். ஏதோ ஒரு வீட்டில் இருந்து பாட்டு சத்தம் அதிர்ந்து கேட்டது.

” தேன்மொழி பூங்கொடி”

அடுத்த வரியில் அந்தச் செடி வாடிப் போகும் முன் பாட்டில் இருந்து விடுபட்டு ஜி 106 முன் நின்றான். காலிங் பெல்லை அடித்தான்

கதவை திறந்து “உள்ளே வாங்க” என சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் திரும்பி நடந்த அந்தப் பெண்மணிக்கு 65 வயது இருக்கலாம். வாழ்வின் ஏதோ ஒரு சாலையில் அது வரைக்குமான அயர்ச்சி ஒரு கயிற்றை போல் பின்னிப் பின்னி இழுக்க “விட்டேனா பார்” என்று எதிராடும் மன உறுதி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இன்னமும் நான் ஆட்டத்தில் தான் இருக்கிறேன் என்று எப்போதும்  அவனிடம் சொல்லிக் கொண்டே இருப்பார் அப்பா. ராணுவத்தில் பணிபுரிந்த மிடுக்கு அவருடைய அடையாளமாகவே மாறிற்று.

‘இந்த சித்ரா சுப்பிரமணியமும் தன் அப்பாவை போலவே மிடுக்கான நபராக தான் இருப்பார்’ என மனசுக்குள் எண்ணிக் கொண்டான் ரகு.

“உட்காருங்க இதோ வந்துடுறேன்” என்று அந்தப் பெரிய கூடத்தில் நடுநாயகமாக இருந்த சோபாவில் ஒன்றைக் காட்டி விட்டு சமையல் அறை நோக்கிச் சென்றார் சித்ரா. இந்தப் பெயரை எங்கெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்? ரகு தலைக்குள் ஞாபக ரயில்கள் விரைந்தன. மிகப் பொதுவான சரளமாகத் தென்படக்கூடிய பெயர். இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேன். அப்பாவின் பணி நிமித்தம் 8 ஊர்களில் பள்ளி கல்லூரி படிப்புகளைப் பயில வேண்டி வந்தது. அதன் அனுகூலங்கள் பல இருந்தாலும் ஒன்றிரண்டு தொல்லைகளும் உண்டு. எங்கே பார்த்திருக்கிறேன் யார் இந்த சித்ரா?

நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி, அந்த வீட்டில் சமையல் வேலை பார்ப்பவராக இருக்கக்கூடும், தாம்பாளம் போன்ற பெரிய ட்ரேயைக் கொண்டு வந்தாள்.

கண்ணாடி தம்ளர்களில் வெளிப்புறம் குளிரின் தூறலும் சாரலும் பனியாய்ப் பூத்தபடி குளிர்பானங்களை பவ்யத்தோடு அவன்முன் நீட்டினாள்.

“எடுத்துக்கங்க தம்பி” என்ற சித்ராவின் குரலில் எந்த உணர்ச்சியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நன்றி சொல்லியபடி  எடுத்துக்கொண்ட ரகு அந்த அறையைச் சுற்றிலும் பார்வையை சுழற்றினான். சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட அறை ஒரு ஓரத்தில் பெரிய புத்தக அலமாரி. ரகுவுக்கு அதனருகே சென்று என்னென்ன புத்தகங்கள் என்று பார்க்கவேண்டும் என்கிற ஆசை எழுந்தது. சின்ன வயதில் இருந்தே அவனுக்கு மிகவும் பிடித்தமான பண்டம் புத்தகம்தான்.

தனக்குள் சொல்லிக் கொண்டான் ரகு.”ஆவலை அடக்கிக்க நண்பா!! நீ வந்திருக்கது வேலை விஷயமா. பொய்யா நடிச்சிட்டுப் போயிட்டே இருக்கணும். எதாச்சும் கூடக் குறையப் பேசி சொதப்பிட்டா நிச்சயம் ஆர்டர் கெட்டுரும். அதவிட முக்கியம் தீப்திக்கு தந்திருக்கிற உத்தரவாதம்”  தீப்தி ‘ப்ளீஸ்பா எப்படியாவது எனக்காக ப்ளீஸ்பா’ என்று கெஞ்சிக் கெஞ்சி அனுப்பிவைத்தாள்.

விமானத்தில் பயணிக்கும் போது ‘இது என்ன பிரமாதம்’ என்று தான் வந்தான். என்னமோ இங்கே வந்த பிறகு சித்ரா சுப்ரமணியம் என்கிற அந்தப் பெண்மணியைப் பார்த்த மாத்திரத்தில் தன்னுடைய பலம் பாதியாகக் குறைந்தது போல் உள்ளே ஒரு பதற்றம். இந்த வாழ்க்கைதான் எத்தனை அபத்தமானது அந்நியர்களை எளிதில் வென்றுவிட முடியும் என நம்புகிற யாருக்கும்  பரிச்சயம் போல் தோற்றமளிக்கும் ஒருவரைப் பார்க்கும்போது உள்ளுக்குள் ஏன் குளிர்கிறது?

ரகு “உற்சாகமா இருடா நண்பா!!” என தனக்குள் சொல்லிக் கொண்டு போலியாக ஒரு சிரிப்பை அணிந்துகொண்டான். தன் பொய் எங்கேயாவது தன்னிலிருந்து வழிந்துவிடுமோ என்ற படபடப்பைக் கழுத்தை நெறித்துக் கொன்றான். இயல்பான குரலில் “விஸ்வநாதன் சார் என்னை அனுப்பினார்” என்று ஆரம்பித்ததுமே சித்ரா ” வடிவு..” என உள்ளே பார்த்துக் குரல் தந்தார் .  எட்டிப் பார்த்தவளிடம் “ட்ரெஸிங் டேபிள் மேல இருக்கிற  சிகப்பு ஃபைலை எடுத்துட்டு வா”என்றவர் ரகுவின் பக்கம் திரும்பி” என்கிட்டயும் பேசினார். அது எங்களுடைய பூர்வீக சொத்து நான் பிறந்த குடும்பத்திற்கும் எனக்கும் இடையில் இருக்கும் ஒரே ஒரு விஷயம் அது தான். அதையும் செட்டில் பண்ணிட்டா  ஒரு வகையில் நிம்மதி தான்” என்றவாறு பைலை திறந்து உள்ளே இருக்கும் நகல்களை எடுத்துப்பார்த்து அதிலிருந்து தேவையான காகிதங்களை தனியே எடுத்தார். சரிபார்த்தவாறே “இதெல்லாம் போதுமில்ல” என்று கேட்டார். ஒவ்வொன்றாகப் பார்த்தவன் இன்னும் தனக்கு கையொப்பம் தேவைப்படும் ஒரு நகலை சொல்ல “அதுல இல்லையா தம்பி” என இயல்பாக கேட்டுக்கொண்டே எடுத்துக் கொடுத்தார். ரகு தந்த விண்ணப்ப படிவத்தில் அவன் குறித்து தந்த இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டவர் “எல்லாம் சரியா இருக்கா பார்த்துக்கோங்க” என்றார்.

“அந்தக் கையெழுத்து இதை எங்கே பார்த்திருக்கிறேன்” கலைத்துப் போட்ட சீட்டுகள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெரிய ஆரம்பிக்க ஒரு ஜன்னல் திறந்து மொத்த வெளிச்சத்தையும் பூட்டிய அறைக்குள் கொட்டி வேறு ஒரு காட்சியை தொடங்கி வைத்தாற் போல் ஞாபகம் வந்துவிட்டது

தன்னையறியாமல் எழுந்து நின்ற ரகு, “மேடம் நான் உங்க ஸ்டூடண்ட். சிதம்பரம் மெமோரியல் கான்வென்டில் எனக்கு நீங்க ஐந்தாம் வகுப்பு டீச்சர்” என்றான். அவனது தற்போதைய முகத்துக்குள் சிறுவனின் தோற்றம் தென்படுகிறதா என்று தேடிக்கொண்டே தன்னை மீறி மிக லேசான பரவசத்தை காட்டிய சித்ரா “உட்காரு உட்காரு உன் பெயர் என்ன ரகுவா சொன்னே?” என்று கேட்டார். இது வேறு குரல் இதுவரைக்கும் இருந்த நிமித்தம் முழுவதுமாக தீர்ந்துபோன குரல். பெரும் புழுக்கத்தின் நடுவே எதிர்பாராத ஒரு காற்று ஏற்படுத்தித் தருகிற பரவசம் அந்த குரலில் தொனித்தது.

” ஆமாம். ரகுகுல வாசன்” தான் அவரிடம் படித்த வருடம் தன்னோடு படித்தவர்கள் அவருக்கும் தனக்குமான தனியான ஞாபகங்கள் என வரிசையாக சொல்லிக்கொண்டே போனான். எல்லாவற்றையும் விரிந்த கண்களும் அளவற்ற ஆனந்தமுமாக கேட்டுக் கொண்டிருந்தவர் செல்லமாக அவன் தலையை கலைத்து “உனக்கு எத்தனை குழந்தைகள்பா?” என்று கேட்டார்.

“ரெண்டு பசங்கம்மா” என்றவனிடம்

“மதுரை இப்போ எப்படி இருக்கு எவ்ளோ மாறினாலும் மாறாத ஊரு” என  சிரித்தார்.

ரகுவுக்கு லேசாய்க் குழப்பமாக இருந்தது. இந்தப் பரிச்சயம் நல்லதா கெட்டதா..? சீக்கிரம் இங்கே இருந்து கிளம்பி விட்டால் என்ன என்று தோன்றியது.

சமாளித்துக் கொண்டவனாய் ” நீங்க சொல்றது சரி தான். நிறைய மாற்றங்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மேக்கப் போட்டுக்குற ஒரு நடிகனை போலத்தான் நம்மூரு இருக்குது” என்று சிரித்தான்.

“அத்தனை மாற்றமும் தேவையா இருக்கு இல்ல” எனக்கேட்ட சித்ராவிடம் “ஆமாம்மா அது என்னவோ நிஜம்தான்” என்று ஒப்புக் கொடுத்தான்.

டீச்சர் அவனை உரிமையோடு ஒருமையில் அழைக்க அவனும் சிறு வயது போலவே அம்மா என்று அழைத்தான். சித்ராவுக்கு இரண்டும் பெண் குழந்தைகள் தான். தன்னிடம் படிக்கும் எல்லா குழந்தைகளையுமே தான் பெற்ற பிள்ளைகளாகவே நினைத்துக்கொள்வார். என்னவோ ரகுகுல வாசன் மீது கூடுதலாய் ஒரு பிரியம் அவருக்கு இருந்தது அவனும் அவரை அம்மா என்றுதான் அழைப்பான் வகுப்பில் முதலாவது மாணவன். அவனை எல்லோருக்கும் பிடிக்கும்

“நல்லா படிப்பியே நீ..?நீ மெடிக்கல் இன்ஜினியரிங் ஏதாவது படிச்சிருப்ப என நினைச்சேன். நீ எப்படி லாயர் கிட்ட அதுவும் குமாஸ்தா  வேலையா பார்க்குற?” என்று கேட்டார்.

Pin page

ரகுவின் உதடுகள் துடித்தன அவன் சுமந்து வந்த அத்தனை பொய்களையும் தூள் தூளாக உடைத்து எறியப் போதுமான கேள்வி உளி. எதுவுமே சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான் ரகு. பேசாமௌனம் பெருமொழிக்குச் சமம். சுவர்க்கடிகாரத்தின் கதவுகளைத் திறந்து  ஒரு கிளி வெளியே வந்து மூன்று முறை கூவி விட்டு மறுபடியும் கதவடைத்துக் கொண்டது.

என்னப்பா நான் எதுவும் கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுட்டனா?” பதறினார் டீச்சர். தாய்மையின் ஆதுரம் குரலில் வழிந்தது.

“அதெல்லாம் இல்லைம்மா. உங்ககிட்ட பொய் சொல்ல வராது எனக்கு. வரல. நான் இங்க வந்தது வேற காரணத்துக்காக”

என்று தலையைக் குனிந்து கொண்டான் ரகு

குழப்பமாக அதே நேரத்தில் முந்தைய கணத்தில் பொங்கிய உள்ளார்ந்த அன்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவராகத் தோன்றினார்.தன் முந்தைய குரலுக்கு திரும்ப முயற்சித்து
“அது என்ன வேற காரணம்?”  லேசாய்க் கடுகடுத்தார் சித்ரா.

” யாருக்குமே தனக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள்ல யாரொருத்தரையும் தேடிப் போய்ப் பார்க்கிறதைக் காட்டிலும் யதேச்சையாப் பார்க்கிறப்ப பெரிய சந்தோஷம். அதுவே எனக்கு சங்கடமாயிட்டுது. நான் ஒரு பொய்யை சுமந்திட்டு இங்க வந்தேன். யாரோ சித்ரான்னு ஒருத்தங்க அப்டின்றப்ப எனக்கது எளிதா இருந்திச்சி. அதுவே என் தமிழம்மான்னு வர்றப்ப பொய் சொல்ல முடியாதில்ல…? நான் உங்க லாயரோட குமாஸ்தா இல்லைங்க . நானொரு ஸ்தபதி. உங்க அண்ணன் மக தீப்திக்காகத் தான் இங்கே வந்தேன்” என்றான்.

இதைச் சொல்லும் போது ரகுவின் குரல் லேசாய் நடுங்கிற்று. ஆனாலும் பொய்யை உரித்துப் போட்ட அடுத்த கணம் மனமெல்லாம் வியாபிக்கிற மெய்மையின் நிம்மதி இருக்கிறதே அது பெரிய செல்வம். ஆசுவாசமாய் உணர்ந்தான் ரகு.

மேல சொல்லு என்றாற் போல் அமைதியாக அவனையே பார்த்த சித்ராவிடம் ” உங்க வக்கீல் விஸ்வநாதன் சார்பா சொத்து பிரிக்கிற ஸெட்டில்மண்ட் காகிதங்கள்ல கையெழுத்து வாங்குற சாக்கில உங்களை ஒருதடவை பார்த்திட்டுப் போறதுக்குத் தான் வந்தேன்” என்றான்.

எதுக்கு என்ற சித்ராவின் குரலில் இப்போது எந்தவொரு சினேகிதமும் இல்லை.

Surreal Sculptures of Translucent Glass and Clay Explore the Body's Transformative Processes — Colossal

ஜனார்த்தனன் என்ற பேரைச் சொன்ன மட்டில் அவனை வெளியே அனுப்பியிருப்பார். ரகுகுலவாசன் என்பவனை அப்படித் துரத்த முடியவில்லை. எதோவொன்று அவருக்குள் நெகிழ்ந்து குழைந்திருந்தது. ஏன் அப்படி செய்யவில்லை என்று தனக்குள் ஆழத்தில் வியந்துகொண்டார். ரகுவாகச் சொல்லாமல் அந்த உண்மை அவருக்குத் தெரிய வந்திருக்காது. அதை விட முக்கியம் வேறு ஏதோ ஒரு காலத்தில் இவன் குழந்தையாக இருக்கும்போது மழைபோல் இவன்மீது தன் மனம் ஆசீர்வாதங்களை கொட்டியிருக்கிறது.

“சொல்லித் தொலை உன் பொய்களுக்கு பின்னால் இருக்கும் அந்த காரணம் என்ன என்பதை சொல்லிவிட்டுக் கிளம்பு. இனியொரு தடவை அந்தப் பேரைச் சுமந்துகொண்டு இங்கே வராதே” என்று சொல்ல நினைத்ததை  மனத்தின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தார்.

” என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்றேன்மா. நான் ஒரு ஸ்தபதி. மூணாம் வருஷம் பொறியியல் படிப்பைப் பாதியிலே நிப்பாட்டிட்டு நாடோடியா திரியத் தொடங்கினேன். எனக்கு என்ன வேணும்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள  காலம் கரைஞ்சிட்டது.  வெவ்வேறு மாநிலம், சில வெளிநாடுகள், நகரம் கிராமம் ஏன் அடர்ந்த காட்டில கூட அலைஞ்சிருக்கேன். மலைப்பிரதேசங்கள் மழை குளிர் வெயில். எப்பவோ ஒருமுறை அபூர்வமா பூக்கிற பூ, எப்போதாவது ஒரே ஒருமுறை கேட்கக்கூடிய இசை, ஒரு துளி அமிர்தம். உயிரை குடித்து விடக்கூடிய நஞ்சு. கவிதை  பாடல் காதல் பயணம்னு கண்ணறியாத் தேடல் அந்த வாழ்க்கை. ஒரே ஒரு பையில என் மொத்த தேவைகளை அடக்கிட்டு போய்கிட்டே இருந்தேன் பதினாலு வருஷம் நானும் வனவாசம் இருந்தாற் போல் சுத்தி அலைஞ்ச பின்னாடி மனசு நிலைக்கு வந்தது.

மனம் ஒத்த  பெண்ணை கல்யாணம் செய்துகிட்டு நானும் எல்லோருக்குள்ளும் ஒருத்தனா மாறிக் கடந்த அஞ்சு வருஷமாதான் சராசரி மனுஷனா வாழ்ந்துட்டு இருக்கேன். இந்தியாவில் மூன்று இடங்களில் எங்களோட சிற்பக் கூடங்கள் இருக்கு நானும் என் நண்பன் அனில் பரமனூர்  கேரளத்தை சேர்ந்த ஓவியன் அவனும் சேர்ந்து மெழுகுச் சிலைகள் செய்கிறோம்.” என்று முடித்தவன் எதிரே இருந்த கண்ணாடிக் குவளையில் நிரம்பிய தண்ணீரை மிச்சமின்றிக் குடித்தான்.

“நான் கூட ஏதோ பேப்பரில் படிச்சிருக்கேன்” என்றவர் குரலில் இப்போது ஒரு புதிரின் விடை தெரிந்து கொள்கிற ஆர்வம் தெரிந்தது.

“உங்க அண்ணன் மேல உங்களுக்குக் கோபம். உங்க விருப்பத்துக்குக் காதல் திருமணம் செய்துகிட்ட உங்களையும் உங்க கணவரையும் அவர் அவமானப் படுத்திட்டார். அதுக்கப்புறம் பல வருடங்கள் கழிச்சி எத்தனையோ முறை உங்களை சந்திச்சி மன்னிப்புக் கேட்க அவர் முயற்சி செய்தும் நீங்க அதை ஒப்புக்கவே இல்லை. உடைஞ்ச கண்ணாடியை ஒட்ட வைக்கத் தேவையில்லைன்னு மறுத்திட்டீங்க. அவருக்கு நோய் முத்திப் போய் கடைசியா ஒருதடவை உங்களைப் பார்த்துடணும்கிறதைக் கண்ணுல தொக்கி நிக்கிற உயிர வெச்சிட்டு ஊசலாடிட்டிருக்கார். நீங்க அதுக்கும் மனம் இரங்கலை. அதுதான் சிங்கப்பூர்ல இருக்குற உங்கண்ணன் மக தீப்தி உங்களை மாதிரியே மெழுகு சிலை ஒண்ணை ரெடி பண்ணித் தரச்சொல்லிக் கேட்டாங்க. பொதுவா நாங்க உயிரோட இருக்கிறவங்க சிலையை செய்றப்ப அவங்க கிட்டே அனுமதி கேட்காம ஒப்புக்கிறதில்லை. உங்க கிட்டே அந்த சம்மதம் கிடைக்காதுன்னு தெரிஞ்சப்புறமும் நான் ஒத்துக்கிட்டேன். பாவம் அந்த தீப்தி. அதை விடப் பாவங்க உங்க அண்ணன். இங்க வந்து உங்களோட தோற்றத்தைக் கூடுதலா  அப்ஸர்வ் செய்துட்டு அந்தச் சிலையை பூர்த்தி செய்யறதா திட்டம். நானும் கையெழுத்து கேட்க வர்ற குமாஸ்தாவா நடிக்கத் தான் வந்தேன். வந்து பார்த்தா என்னோட டீச்சர்.”

“எவ்ளோ அன்பாயிருந்த  மனுஷி, நீங்க செதுக்கின எத்தனையோ சிற்பங்கள்ல ஒண்ணு தானே என் ஆரம்பம்..? இத்தனை கடுமை உங்ககிட்டே எங்கேருந்து வந்திச்சும்மா..? பொய் சொல்லிட்டு போயிருப்பேன். மனசு கேக்கலை. இப்பவும் தீப்தி கேட்டாப்ல உங்களோட சிலையை  செய்து தரத்தான் போறேன். எங்க அப்பா ஏமாற்றத்தோட சாகக் கூடாது. அதனால அவரை ஏமாற்றுவதைத் தவிர வேற வழியில்லைன்னு அந்தப் பொண்ணு கெஞ்சுறா. என்னால உங்க அண்ணன் முன்னாடி அச்சு அசலா உங்க சிலையைத் தத்ரூபமா அமரவைக்க முடியும். படுத்த படுக்கையா இருக்கிற அவரால நிச்சயமா அதை சிற்பம்னு கண்டுபிடிக்க முடியாது. ஆனா உங்க மனசு…அதை எந்த சிற்பியாலயும் வடிக்கவே முடியாதில்ல..? பொம்மை மடியில விழுந்து கதறும்போது விழுற கண்ணீர்த் துளிகள் உங்களுக்குச் சொந்தமானதில்லீங்களா…சிலை ரெடியாகுறதுக்கு ஒரு வாரம் ஆகும். நீங்க மனசு வச்சா நாளைக்குக் காலையில உங்கண்ணன் முன்னாடி நீங்களே போய் நிக்க முடியும். உங்க பிள்ளைகள்ல ஒருத்தனா இதைக் கேட்கிற உரிமை எனக்கு இருக்குன்னு நம்புறேன். தப்புன்னா என்னை மன்னிச்சிருங்க.”

எழுந்தவன் நெடுஞ்சாண்கிடையாக டீச்சரின் பாதங்களில் பணிந்து எழுந்தான்.

“வரேன்மா”. என்று அவள் பதிலுக்குக் காத்திராமல் கொண்டுவந்த ஃபைலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

“வடிவு. மதுரைக்குப் போவணும்.ரெடி பண்ணு” என்று சற்றே சப்தமாகச் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டான்.

படியில் இறங்கும் போது படர்க்கையில் “இன்றைக்கு நிச்சயம் மழை வரும் பாரேன்” என்று யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


{தமிழரசு இலக்கிய ஆண்டு மலர் 2024 }