யாக்கை 15
கடப்பாடு
எஸ்.ஐ பூரணச்சந்திரன் வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. ஸ்டேஷனுக்கு முன்னால் கூடி இருந்த பெரும்பாலானவர்கள் உள்ளே புல்லட் நுழையும் போது கலைந்து ஓரமாய்ப் போனார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் சைடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது பூர்ணச்சந்திரனின் நித்திய வழக்கம். அன்னியமும் வாஞ்சையும் ஒருங்கே பெருக்கெடுக்கும் சொல்ல முடியாத உணர்வுகள் தன் சொந்த முகத்தைப் பார்க்கையில் ஏற்படும்.
உள்ளே சென்று தன் நாற்காலியில் அமர்வதற்கு முன்பாக டேபிள் கண்ணாடிக்குக் கீழே வரிசையாக இருந்த சாமி படங்களைப் பார்த்து மானசீகமாக எதையோ முணுமுணுத்துக் கொண்ட பிறகே அமர்ந்தான்.
வயது இருபத்தியேழு. இரண்டு வருடங்களுக்கு முன்பாக டூட்டியில் ஜாயின் செய்தவன் இந்த ஸ்டேஷனுக்கு வந்து ஒன்றரை மாதம் தான் ஆகிறது. இன்றுவரை நல்ல பேரோடு ஓடிக் கொண்டிருக்கிறது வேலைவண்டி. இன்ஸ்பெக்டரும் இவனும் ஒரே ஜாதி என்பது யதேச்சையாக அமைந்தது. அதுவே பெரிய ஒற்றுமைக்கு வழிகோலியது. இவனைப் பார்க்கும் போதெல்லாம் ‘நம்ம பய’ என்ற வாஞ்சையே அவருக்குள் பொங்கும். அதனாலேயே ஸ்டேசனில் மற்ற யாரும் அவனிடம் பம்முவார்கள். இன்ஸ்பெக்டரிடம் எதையாவது சொல்ல வேண்டுமானால் கூட எஸ்.ஐ சார் வரட்டும் எனக் காத்திருப்பார்கள்.
ரமணியும் சித்ராவும் விறைப்புடன் அடித்த சல்யூட் களுக்கு வெறுமனே தலையை செய்துவிட்டு ” ஆள் அடையாளம் தெரிஞ்சுதா? குடும்பத்துக்குச் சொல்லியாச்சா?” என கேட்டான். சுந்தர்ராஜ் ஏட்டையா அதுவரை தான் சேகரித்த அத்தனை தகவல்களையும் சொல்லி முடிக்க ரைட்டர் கண்ணனை அழைத்து ” ஏட்டையா சொல்ற டீடைல் ஒன்னு விடாம எழுதிக்கோங்க.” என்றவாறே “இவங்க எதுக்கு நிக்கிறாங்க?” என்றான்.
பவுன்ராஜ் உள்ளே வரவில்லை. எதிர்ப்புறம் டீக்கடையில் மறைவாக அமர்ந்து கொண்டு குணாளன் ஏட்டையாவின் தலை எங்காவது தென்படுகிறதா எனப் பார்த்தபடி நாளிதழில் தலையைப் புதைத்துக் கொண்டான்.
முரளி,சாமி மற்றும் சின்னு மூவரையும் உள்ளே அழைத்த பூர்ணச்சந்திரன் “சொல்லுங்க என்ன விஷயம்?” என்றான்.
சின்னு எடுத்த எடுப்பிலேயே “சமயராஜ் எனக்குப் பங்காளி முறை” என்றான். இதைக் கேட்டதுமே முகம் மலர்ந்த பூர்ணச்சந்திரன் “அப்டின்னா நமக்கு நீங்க மாமன் மச்சான் முறைங்க. இப்ப சமயராஜ் கலைமான்புரத்துல எல்.அண்ட் ஓ பாக்குறாப்டி. போன மாசம் கூட விசேஷத்துல பார்த்தம்” என்றவன் “கோட்டை வீடுன்னு சொல்வாங்களே…”என இழுத்தான். முரளி உடனே “இவரு தாங்க கோட்டைவீட்டு சின்ன தியாகராஜன்” என்றான்.சின்னுவுக்கு வானில் மிதப்பது போல இருந்தது. சின்னுவை அமரச்சொன்ன எச்.ஐ உட்புறம் திரும்பி “ரமணி டீ சொல்லு” என்றான்.
“ செத்தவன் எனக்கு ரொம்ப சினேகிதம். அவனுக்குன்னு ஆரும் இல்லை. அவன் மச்சினண்ட்ட தகவல் சொன்னா வேண்டா வெறுப்பா கேட்டுக்கிட்டு நீங்களே தூக்கி விட்டுறுங்க. எங்க சைட்லேருந்து யாரும் வர்றாப்ல இல்லைன்னுட்டான். செலவுக்கு வேணா காசு தரேன்னு சொன்னான். எனக்கு கெட்ட கடுப்பாயிடுச்சி…உனக்கு வேணும்னா நாங்காசு தர்றேண்டா…உன் சொந்த மச்சினன், தங்கச்சி புருசன் சாமியாய்ட்டான். உன் கண்ணை கண்டிப்பா குத்துவான்டான்னு திட்டிட்டு வச்சேன்.வேற என்னத்தை பண்றது…? பொணத்தை எடுத்துப் போயி வீட்டு வாசல்ல இறக்கி வைச்சிட்டு வரவா முடியும்..?” என்று அவன் சொல்லச்சொல்ல கேட்டுக் கொண்டிருந்து விட்டு “அட நீங்க என்ன மாமா இதைப் போயி பெரிய விசயமா கலங்கிட்டிருக்கீங்க..?” யாரும் க்ளெயிம் பண்ணலைன்னாக் கூட கார்பரேசனே ஆள் போட்டுருக்கு. அடக்கம் பண்ணிருவாங்க..உங்களுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க” என்றான்.
அவன் விளிப்பின் உறவை ஆமோதிக்கும் வண்ணம் தானும் தொடர்ந்தான் சின்னு. “ இல்ல மாப்ள…கூடவே இருந்த சினேகிதன். அப்டி விட்டுட்டு போக மனசு வர்லை. நாங்களே என்ன செய்யணுமோ செய்துறலாம்னு பாக்குறேன்” என்றவன் “என்னடா முரளி…சரிதானே?” என்றான். எப்போதடா வீட்டுக்குப் போவோம் என்று ஒற்றைத் தலைவலியோடு அவஸ்தையில் இருந்த முரளி அப்போதைக்கு அதை மறுக்க முடியாமல் தலையை ஆட்டினான்.
ஸ்டேஷனுக்குள் அப்போது தான் நுழைந்த குணாளன் ஏட்டய்யாவை அழைத்த பூர்ணச்சந்திரன் “ ஏட்டய்யா…இவர் எங்க மாமா. கூடவே இருந்து விஷயம் முடிஞ்சப்புறம் நீங்க வந்தாப் போதும். சரிங்களா..? இன்ஸ்பெக்டர் கிட்ட நாம்பேசிக்கிறேன்” செருமிக் கொண்டு “நீங்க போங்க மாமா. எல்லாம் ஏட்டய்யா பாத்து செய்வாப்ல” என்றவன் “இன்ஸ்பெக்டர் யாருங்கிறீங்க..? முத்துநாச்சிபுரத்துல மணிமாறன்னு ரைஸ் மில்காரர் சொல்வாங்கள்ல..? அவரோட மூத்த மருமகன். நமக்கு ரொம்பச் சொந்தம்தான்” என்று தணிப்பான குரலில் கிசுகிசுத்தான். “சரி மாப்ளே நா கெளம்புறேன் “என எழுந்து கொண்ட சின்னுவிடம் “ எல்லாத்தையும் முடிச்சிட்டு ஃப்ரீயா வாங்க மாமா சந்திக்கலாம்.” என்று வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டே உள்ளே சென்றான்.
____________________
“மூணு மணியாச்சும் ஆய்டும்” என்றார் குணாளன்.
தன்னை அழைத்து இவர்களோடு அனுப்பும் போது அவருக்கு எரிச்சலாக இருந்தது. ‘யார்றா இந்த எஸ்.ஐ நம்மை அனாதைப் பிண மேட்டரைப் பார்க்க அனுப்புறான்’ என்று கனன்றது. ஆனாலும் அதிகாரியை எதிர்க்க முடியாமல் மழுங்கடிக்கும் புன் சிரிப்புடன் ஸ்டேஷனுக்கு வெளியே வந்த பிறகு தான் சின்னு முரளி தவிர பவுன்ராஜூம் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தது. “ஹப்பாடா..பவுன் ராஜ் இருக்கிறான். காசு நிச்சயமாய்த் தேறும்.” சும்மா எஸ்.ஐ சொந்தக்காரன் என்று ஒரு முழு நாளை வீணடித்து விட்டு வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்புவதை நினைக்கும் போதே கசந்தது. ‘பவுனு’ என்று அன்பொழுக வரவேற்றவர் “வாங்க முதல்ல டீ சாப்டலாம். அப்பறம் கெளம்பலாம்”. என்றார்.
முரளி நிஜமாகவே ஆடிப் போயிருந்தான். பத்து நாட்களுக்கு முன்புதான் இதே எஸ்.ஐ பூர்ணச்சந்திரன் முரளி கடைக்கு நேர் எதிரே குடித்து விட்டு சிலம்பிக் கொண்டிருந்த பாக்கியத்தையும் மனோகரனையும் சுளுக்கெடுத்ததைக் கண்ணால் பார்த்திருந்தான். இத்தனைக்கும் பாக்கியத்தின் அண்ணன் கட்சிப் பொறுப்பில் இருக்கிறவர். மனோகரன் ரேஷன் கடை சிப்பந்தி. அப்படியானவர்களைத் துரத்தித் துரத்தி அடித்து வண்டியில் ஏற்றியவன் முன் சின்னு குடித்து விட்டு நிற்கிறானே என ஆரம்பத்தில் பயந்தவன் முரளி தான். இவன் எதாச்சும் எடக்கா பேசினா இந்த எஸ்.ஐ கை நீட்டிருவானே என்பதே அந்த பயம். சின்னுவோடு இன்று தனக்கும் அறை விழப் போகிறது என உள்ளே நடுக்கம் கொண்டிருந்தவனுக்கு நடந்த சம்பவம் நேர் மாறாக இருக்கவே வியப்பு தாளவில்லை. என்ன இருந்தாலும் பரம்பரைப் பெருமை இன்னமும் பாக்கி இருக்கத் தான் செய்யுது என நினைத்தான். அதை வாயார சொல்லவே செய்தான். “சின்னு எஸ்.ஐ ரொம்ப நல்ல மாதிரியாத் தெரியுறாப்ல” என்றான்.
“அட நீங்க வேற எனக்குத் தெரிய ஸ்டேஷனுக்குள்ள குடிச்சிட்டு வந்தா யாரா இருந்தாலும் வெளிய வெரட்டிருவாப்லங்க. சரித்திரத்திலேயே முதல் தடவையா சின்னு ஸாரைத் தான் உட்காரச் சொல்றதை நான் பார்த்தேன்” என்று குணாளன் தன் பங்குக்கு ஏற்றிச் சொன்னார். அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இவனை அரட்டினால் காரியமாகாது. அதிகாரிகளுக்குச் சொந்தக்காரன். அன்பாய்க் குழைந்தால் நாலுக்குப் பத்தாக ரூபாயை அள்ளி எறியாமற் போய்விடவா போகிறான்..?
சின்னுவுக்கு கௌரவமும் போதையும் ஏறுக்கு மாறான விகிதத்தில் மண்டைக்குள் ஏறிக் கலங்கடிக்கத் தொடங்கின. “ஏய் பவுனு….எந்தக் குறையும் இல்லாம நம்ம நண்பனை வழியனுப்பி வைப்போம்யா” என்றவன் தானே கையெழுத்து போட்டு பிரேதத்தை வாங்கினான். கருப்பு நிற வண்டி கடைசி யாத்திரையை முன்மொழிந்தபடி நகர்ந்தது. பின்னாலேயே சாமி ஆட்டோவும் சென்றது. குணாளன் ஏட்டய்யா “அப்ப நா கெளம்புறேன் தம்பி” என்றார் முரளியிடம். சின்னு முன்னால் வந்து பவ்யமாக பாதி சல்யூட் ஒன்றை அடிப்பது போல் பாவித்தவர் “அப்ப நா கெளம்புறேன் முதலாளி. ஐயா கேட்டா நான் எல்லாம் நல்லபடியா முடிச்சி தந்ததா ஒரு வார்த்தை சொல்லிருங்க. எதுவா இருந்தாலும் கூப்டுங்க. காத்திட்டிருக்கிறேன்” என்றார்.
“சரிங்கண்ணே” என்று அனுப்பிய சின்னு அவர் சர் சரென நகரவே பவுன் ராஜிடம் கத்தையாய் ரூபாய் தாட்களை எடுத்து நீட்டி “ அவர்ட்ட குட்றா” என்றான். வண்டியில் இருந்து குதித்து இறங்கியவன் அவரை இன்னமும் போகவிட்டு பின்னாலே போனான். வழியிலேயே தன் கையில் இருக்கும் நோட்டுக்களில் இரண்டை தன் சட்டைக்குள் ஒதுக்கிவிட்டு மீதத்தை ஒரே சுற்றாக்கி “ஏட்டய்யா” என்று விளித்து “அண்ணன் தரச்சொன்னாரு” என்றான் சப்தமாக “அட என்ன பவுனு எதும் வேணாம்” என்றவாறே அதை வாங்கிக் கொண்டு இன்னும் பெரிய வணக்கத்தை வைத்தவாறே நகர்ந்து போனார் குணாளன் ஏட்டய்யா.
முந்தின நாள் தான் தோட்டத்திலிருந்து வெண்டிக்கா விற்ற காசைக் கொண்டு வந்து உழவடை பார்க்கும் செந்திலும் சரோஜாவும் தந்து போயிருந்தார்கள். அண்டர்வேர் பாக்கெட் நிறையப் பணம் இருந்தது. அதில் பாதிக்கு மேல் அன்றைய தினம் செலவாகப் போவதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. குழாயில் நீர் கொட்டும் வரை உல்லாசம். தண்ணீர் வரத்து நின்று போனால் தானே வறட்சி..? அதெல்லாம் இப்போதைக்கு நிற்காது. இன்றைக்கு நிச்சயமாக நிற்காது. அப்புறம் என்ன..?
முரளி வழியிலேயே ஆரம்பித்தான்.
“யோவ் சின்னு யாருய்யா கொள்ளி வக்கிறது?” என்றான். இதை யோசிக்கவே இல்லையே என்று நினைத்த சின்னு “ஏன்யா நா சரக்கடிச்சிருக்கேன்.குத்தமாய்டும்.நீ வைக்க மாட்டியா?” என்று அவனிடமே திருப்ப ” இல்லய்யா ஒரு வேண்டுதல் இருக்குதுய்யா என் ஒய்ஃப் ஒரு வாரம் விடாம பொன்னுடையார் கோயில்ல வெளக்கேத்திட்டு வருதுய்யா. இன்னம் நாலு வாரம் பாக்கி இருக்குது. என்னால முடியாதுய்யா ஸாரி” என்றான்.
“என் நண்பன் எழுமலை இல்லாமப் போயிட்டானேய்யா…நா சொன்னதும் எதா இருந்தாலும் செய்வான்யா..”என்று நிசமாகவே வருந்தினான் சின்னு. அதெப்படி எழுமலை இருந்தால் இந்தக் கேள்வியே வராதே என்று யாரும் அவனிடம் கேட்கவில்லை. கேட்க முடியாது.
பவுன்ராஜ் சின்னுவிடம் “ நா செய்றேன்யா” என்றான்.
“தேங்க்ஸ் பவுனு” என்றவன் எல்லாம் முடிந்து சாமி ஆட்டோவிலேயே வீட்டுக்குத் திரும்பினான். இறங்கும் போது “எலே முரளி…சிமெண்ட் கடை வாசல்ல வண்டி நிக்குது. அதை எடுத்தாந்து என் வீட்டுல வைடா” என்றவன் பவுன்ராஜிடம் கத்தையாய் ரூபாய்த் தாட்களை நீட்டி “இந்தா பவுனு. நீ செய்த உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்டா” என்றான்.
எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்ட பவுன்ராஜிடம் “ டே பவுனு…எழுமலை இனிமே வரமாட்டாண்டா…நீயும் வராமக் கிறாம இருந்திராதடா…அப்பப்ப வந்து எட்டிப்பார்றா….விட்றாதடா…”என்று தழுதழுத்தபடியே தன் வீட்டுக்குள் நுழைந்து கதவை உட்புறம் பூட்டிக் கொண்டான்.
திரும்பிச் செல்லும் வழியில் பவுன்ராஜூம் முரளியும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. முரளி தன் கடைக்கு முன்பாக இறங்கியதும் சாமி ஆட்டோவைத் திருப்பினார். பவுன்ராஜ் சாமியிடம் “கடைத்தெருவுக்குப் போவணும்னே” என்றான். வழியில் சிந்தாமணி யாருடனோ நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பவுன்ராஜ் “இவனை எங்கயோ பார்த்திருக்கிறனே..” என்று யோசித்தான். எதுவும் புலப்படவில்லை. பேசிக்கொண்டே சிந்தாமணி செல்வாவின் தோளைச் செல்லமாகத் தட்டிச் சிரிக்க செல்வா தங்களைக் கடந்து செல்லும் ஆட்டோவில் அமர்ந்திருப்பது பவுன்ராஜ் என்பதை நன்றாகக் கவனித்தான். அதே நேரம் பவுன்ராஜ் இந்தக் காட்சிக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்கிறாற் போல் எதிர்ப்புறம் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
சாமியின் ஆட்டோவில் தலைக்கு மேலே எதிர்ப்புறம் பெரிய எழுத்துக்களில் சிவப்பு நிறத்தில் “செயலே தெய்வம்” என்று எழுதியிருந்தது.
(வளரும்)