யாக்கை 17

யாக்கை 17

நிழல்மழை


 

ஊரிலிருந்து   வெங்கடேசன் நேராக ஸ்டேஷனுக்கு தான் வந்தான். இங்கன எதும் பேச வேணாம் என்பது போல் கண்ணைக் காட்டிய சுந்தர்ராஜ் ஏட்டையா அவனை அழைத்துக்கொண்டு சிக்கந்தர் பாய் டீக்கடைக்கு வந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உழவர் சந்தைக்கு வழக்கத்தை விட அதிகமான வண்டிகளின் வரத்து இருக்கும். தெரு முனையில் அபிராமி ஹோட்டல் முகப்பில் உள்ளேயும் வெளியேயும் வாசல் வைத்த தேநீரகத்தில் காபி டீ சாப்பிட்ட பிறகே பெரும்பாலான வண்டிகள் சந்தைக்குள் புகுவது வழக்கம். எப்போதாவது தான் அபிராமி ஹோட்டல் லீவு விடுவார்கள். அந்த மாதிரி நேரத்தில் அநேக வியாபாரிகள் ஸ்டேஷனுக்கு சற்று தள்ளினாற் போல் வண்டியை நிறுத்திவிட்டு சிக்கந்தர் கடைக்கு வந்து விடுவார்கள்.

வியாபாரம் களை கட்டும் நாட்களில் சிக்கந்தர் பாய் முகத்தில் கூடுதல் உற்சாகம் நடனமாடும். டேப்பில் ஆராதனா,பாபி,யாதோன்-கி-பாராஹ்த்,ஏக் துஜே கேலியே போன்ற இந்திப் படங்களின் பாடல்களை மிதமான சப்தத்தில் ஒலிக்க விடுவார். அந்த நேரம் அனேகமாகத் தன்னிடம் முன்வைக்கப் படும் எல்லாவற்றையும் மறுக்காமல் நிறைவேற்றி விடவே முனைவார். முதலாளி நல்ல மூட்ல இருக்காரு என்று சிப்பந்திகள் பேசிக் கொள்வார்கள்.

கடைக்குள் தென்பட்ட  கூட்டத்தை பார்த்த சுந்தர்ராஜ் ஏட்டையா கல்லாவில் படு குசியாக இருந்த சிக்கந்தர் பாயை பார்த்து ” அபிராமி காரன் இன்னைக்கு லீவோ” என்று கேட்டார். தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்ட பாய் “அப்படித்தான் நினைக்கேன்” லேசா சிரித்துவிட்டு “நீங்க இப்படி பின்னாடி வாங்க” என்றார். கடைக்கு உள்ளே நிற்க கூட இடமில்லாமல் கூட்டம் அம்மும். பொழுதுகளில்  கல்லாவுக்கு பின்பக்கம் ஒரு ஸ்பெஷல் ரூமை வேண்டியவர்களுக்கு மட்டும் திறந்து விடுவார் பாய். “கச்சேரிக்காரர்களை நிற்க வைத்து விட்டோம் என்று நாளையும் பின்னே வேற ஏதாவது விஷயத்துல கோபத்தை காட்டிட்டா?” சிக்கந்தர் தெளிவானவர்.

ஒரு ஓரத்தில் இருந்த வாஷ்பேஷனில் தண்ணீரை திறந்து விட்டு முகத்தில் அடித்து அடித்து கழுவிக் கொண்டே இருந்தான் வெங்கடேசன். வேறு யாராவது அப்படி செய்தால் சிக்கந்தர் பாய் கடித்து க் குதறி இருப்பார். வந்தவன் சுந்தர்ராஜ் ஏட்டையாவுடன் வந்திருக்கிறான். அவனை ஏசவா முடியும்? ஒரு வழியாக முகக் குளியலை முடித்து விட்டு காலர் பக்கத்தில் இருந்து நீண்ட கர்ச்சீஃபை  உருவி எடுத்தவன் அதைக் கொண்டு முகம் கழுத்து என ஒரு வழியாக துடைத்து முடித்தான்.

சிறு வயதிலிருந்தே ஏமாறுவதையும் ஏமாற்றுவதையும் ஒரே போல் எண்ணி வெறுத்துக் கொண்டு வருவதாக பொருமினான் வெங்கடேசன். தான் ஊரில் இல்லாத சமயம் வண்டியை தூக்கி விட்டதற்காக கதிர் வகையறாவை ஒரு பாட்டம் திட்டி முடித்தான். முத்தரசு என்பவன் தன்னை ஏமாற்றி விட்டது அவனால் தாங்கவே முடியவில்லை. முத்தரசுவை அடிக்கிற அடியில் வண்டியை தூக்கிய கதிருக்கு அல்லையைப் பிடிக்க வேண்டும் என்று கத்தினான். எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் ” சிக்கந்தர் பாய் ஆளுக்கு ரெண்டு வடை டீ” என்று கட்டளைத் தொனியில் சொல்லிவிட்டு மறுபடியும் வெங்கடேசன் பக்கம் திரும்பினார்.

மனைவியின் தாய்மாமன் தன்னைப் பற்றி கம்மியாக நினைத்து விடப் போகிறார் என்றுதான் ஆரம்பத்தில் கத்திக் கொண்டிருந்தான் வெங்கடேசன். கொஞ்ச நேரத்தில் சுருதி இறங்கியவனாக “இல்லை அண்ணாச்சி நாம பத்து பேருக்கு பஞ்சாயத்து பண்ணிருக்கோம். சின்ன சின்ன பசங்கள விட்டு வீட்டு வாசலில் இருக்கும் வண்டி தூக்கிட்டா அது அசிங்கம் இல்லையா? அந்த முத்தரசு கிடைக்கட்டும்” பல்லை நறநறத்தான்.” அட விடுங்க தம்பி, நம்ம கோவத்தை நம்ம எல்லார்கிட்டயும் காமிக்க கூடாது. எங்க எப்போ யாருகிட்ட எப்படி காமிக்கணுமோ அப்படி காமிக்கணும். கையில கல் எடுக்கிறது முக்கியம் இல்ல. கை சேதப்படாம கல்ல வீசணும். அதுதான் வித்தை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! என்றவர் கொண்டு வந்து தரப்பட்ட சூடான உளுந்த வடைகளை மேஜை மேலிருந்த அன்றைய நாளிதழை ஒரு ஓரத்தில் கிழித்து அதை வைத்து சுருட்டி அமுக்கினார் ” இப்படி செஞ்சா எண்ணைய எடுத்திடலாம். அதான் டெக்னிக்” என்று ஏதோ பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை எடுத்துரைக்கும் ஆசிரியரைப் போல் மகிழ்ந்து கொண்டார்.

தன்னுடைய காதலியை தனியே சந்திப்பதற்காக உன் வீட்டை பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன் என்று முகத்துக்கு நேராக வெங்கடேசனிடம் செல்வா சொல்லும் போது உடனே மறுத்து இருக்க முடியும். செல்வா வெங்கடேசனுக்கு கூடுதலாய் ஒரு நிழல் மாதிரி. இருவரும் எப்போது சினேகிதம் ஆனார்கள் என்பதே நினைவில் இல்லை. பத்துப் பன்னிரெண்டு வயதிலிருந்து இருவருக்கும் இடையில் பிசகே இல்லாத பந்தம். எத்தனை இடைவெளிக்கு அப்பால் சந்தித்தாலும் மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து பேசிக் கொள்ளும் பழக்கம். உன் நண்பனின் பெயரைச் சொல் என்றால் செல்வா என்று தான் சொல்லுவான் வெங்கடேசன். 19 வயதில் ஜெயில் வாசம் பார்த்துவிட்டு திரும்பிய பிறகு செல்வத்தின் சொந்த பந்தங்களே அவனிடம் சற்று விலக்கம் காட்டத்தான் செய்தார்கள். அவனுடைய அம்மாவே செயற்கையான புன்னகையும் வேண்டா வெறுப்பை மறைத்துக் கொண்டு காட்டிய போலி ஆதரவும் அவனுக்கு தெரியாமல் இல்லை. இரண்டாக கிழிந்து போயிருந்த வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தையும் வெங்கடேசன் காட்டவே இல்லை. ஊருக்கு போய்விட்டு திரும்புகிறவனை விசாரிக்கிற அதே பதத்தில் “எப்படா வந்த?” என்று மட்டும் கேட்டான். அதுவும் ஒரு அனுபவம் தானே. அதையும் பாத்துட்டே… அதனால என்ன என்று எளிதாக கடந்து போய்விட்டான். முதலில் இவன் நடிக்கிறானோ என்று சந்தேகப்பட்ட செல்வாவுக்கு அப்படி இல்லை என்று தெரிந்த பிறகு வெங்கடேசன் மீது அன்பு கூடிப்போனது. வைத்தி ஒரு விதமான பயந்தோளி. “என்னை ஒன்னும் செய்துற மாட்டேல்ல” என்று முகத்துக்கு நேராக கேட்ட அப்பாவி. ஒரு விதத்தில் இரண்டு பேருமே மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளாமல் நேராக பேசுகிறவர்கள் இப்படி அமைவது நிச்சயமாக அதிர்ஷ்டம் தான். சிந்தாமணியும் அப்படிப்பட்டவள் என்பதுதான் ரசம்.

வெங்கடேசன் மனதில்  ஒரே ஒரு சந்தேகம் தான் .

வண்டி தூக்க வந்தவர்கள் எதார்த்தமாக அந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்களா? செல்வா அங்கே வந்து போவது தெரிந்து அங்கே வந்தார்களா?. மிக முக்கியமாக சுந்தர்ராஜூக்கோ அவர் மூலமாகத் தன் மனைவிக்கோ செல்வா தன் வீட்டைப் புழங்கிய விஷயம் தெரிந்திருக்குமா இல்லையா என்பது தான் குழப்பம். அதை நேரடியாகக் கேட்கவும் முடியாமல் கடக்கவும் இயலாமல் தவ்விக் கொண்டிருக்கிறான். எல்லாம் மனசு படுத்துகிற பாடு.

எல்லாவற்றிலும் எப்போதும் இரண்டு புறங்களை மத்தியிலிருந்து பார்த்து பழகி விட்டால் எதன் மீதும் ஆத்திரம் வராது. சுந்தர்ராஜ் போலீஸ் வேலையில் சேர்ந்தது 14 வருடங்களுக்கு முன்பு. ஆரம்பத்தில் அவரும் வேகமாக தான் இருந்தார். காலம் அவருடைய கூர்மை அத்தனையும் மழுங்கடித்து விட்டது. முன்னொரு காலத்தில் கூர்மையோடு இருந்தது அவருக்கு லேசாய்க் கூட ஞாபகம் இல்லை. ‘ஏன் துடிக்கிற? பேசாம இரு. எதா இருந்தாலும் பாத்துக்கலாம்’ என்பதை ஒரு தாரக மந்திரம் போலவே சொல்லிப் பழகி இருந்தார். யார் ஒருவருக்கும் நினைத்தாற் போலவே எல்லாமே நடந்து விடாது. கடவுளே விதியோ புறத்தில் இருந்து ஏதோ ஒன்று இயக்குகிறது. அது என்ன என்பதை புரிந்து கொள்வதை விட, அதோடு மல்லுக் கட்டுவதை விட, கைகூப்பி தொழுதுவிட்டு அமைதி அடைவது சௌக்கியம்.

சுந்தர்ராஜ் ஒரே ஸ்டேஷனில் 10 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவரே போகிறேன் என்றாலும் அந்த ஸ்டேஷன் அவரை விடாது. மனிதர்களோடு நிற்பதை விட தூணோடு தூணாக மாறுவது ஒருவகையில் ஸ்திரம் கூட்டித் தருகிறது. அவரை யாராலும் அசைக்க முடியாது என்று கூட சொல்லத் தேவையில்லை அவரை யாருமே அசைக்கும் முற்படுவதே இல்லை.” சுந்தர் ராஜா? ரொம்ப நல்ல மாதிரி பல விதத்தில் உபகாரம்” என்கிற வார்த்தைகளை மாற்றலாகி போகும் அதிகாரி புதிதாக வருபவரிடம் தன்மையாக சொல்லி போவார்கள். அந்த சொற்கள் தான் மெய்யாகவே அவருடைய சம்பாத்தியம்.

லட்சத்தீவுகளுக்கு டூர் போன இடத்தில் அவருடைய மைத்துனன் சாமிதுரையை அலை  இழுத்துப் போய்விட்டது. எச்சரிக்கைகளை மதிக்காமல் சாகசம் செய்ய பார்த்தவனை விதி அணைத்துக் கொண்டது. மூன்று தினங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கிளம்பி போனவரால் சடங்கு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு ஒரு வழியாக வேலைக்கு திரும்ப 15 நாட்கள் ஆகின. இன்னொருவராக இருந்தால் மேலதிகாரியை போய் பார் என்று அனுப்பி இருப்பார்கள் அல்லது விடுமுறை முடிந்து வந்ததும் ஒட்டுமொத்த ஸ்டேஷனே மூஞ்சியை திருப்பிக் கொண்டு கடுகடுக்கும். சுந்தர்ராஜுக்கு அத்தனை பேரும் ஆறுதலாய் நின்றார்கள் ” ஏட்டையா அடுத்த வாரம் வந்தா போதும். எதுனா அவசரம்னா சொல்லிவிடுகிறேன். நீங்க கிளம்புங்க” என்று அனுப்பினார் இன்ஸ்பெக்டர். மைத்துனன் பாதி வழியில் இறங்கிக் கொண்டதை தாங்க முடிந்த அவரால் அலுவல் ரீதியான இந்த அரிதினும் அரிய அன்பு மூச்சு முட்டியது. இன்ஸ்பெக்டரின் கைகளைப் பிடித்துக் கொண்டு முட்டி முட்டி அழுதது அப்போதுதான்.

அதன் பின் போலீஸ் வேலை அவருக்கு ஒரு அடிமைப் பழக்கம் போலானது. அவர் ஒரு போலீஸ். அவருடைய ஜாதி மதம் இனம் மொழி ரத்த வகை உள்பட எதைக் கேட்டாலும் போலீஸ் என்று சொன்னால் தான் திருத்தி கரம். இந்த உலகத்தை போலீஸ் மற்றும் போலீஸ் அல்லாத இரண்டு உலகங்களாக பார்ப்பது சுந்தர்ராஜனின் வழக்கம்.

வாசலில் இருந்து பார்த்தால் இந்த உள்ளறை தெரியாது. உள்ளே அமர்ந்து கொண்டிருந்த சுந்தர்ராஜ் ஹோட்டல் நுழைவாயிலில் தென்பட்ட வைத்தி மற்றும் செல்வாவின் முகங்களை பார்த்ததும் மலர்ச்சியாகி ” தம்பி உங்க சிநேகிதக்காரங்க வந்துட்டாங்க” என்றதும் உள்ளே நுழைந்தவர்களை பார்த்து தன் கொதிநிலை மறந்து குளிர்ந்தான் வெங்கடேசன்.

செல்வாவும் வெங்கடேசனும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் புகழ்த்தி பேசி சிரித்து சீண்டி விளையாடியது அனைத்தையும் வைத்தியம் சுந்தர்ராஜூம் மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.” இந்த உலகத்தில் சில விஷயங்களை மட்டும் விலை கொடுத்தாலும் வாங்க முடியாதுப்பா” என்றார் சுந்தர். ” அண்ணே 100 கோடி ரூபா வேணுமா அல்லது செல்வா வேணுமா ன்னு கேட்டா, எனக்கு என் செல்வா போதும்ன்னு சொல்லுவேன். ஏன் தெரியுமா காசு எந்த வழியில் வேண்டுமானாலும் கிடைக்கும். இப்படி ஒருத்தன் கிடைக்க மாட்டான்”. லேசாக கண் கலங்கினான் வெங்கடேசன்.”

ஒரு நொடி இறுக்கத்துக்குப் பிறகு மீண்டும் இயல்பான வெங்கடேசனிடம் ” விசாரிச்சேன் நண்பா. அந்த முத்தரசன் பல்லடத்தில் ஒரு ஹோட்டல்ல வேலை பாத்துட்டு இருக்கான் போல. அந்த ஓட்டல் நம்பர் வாங்கி இருக்கேன். ஆனா பேசல. ஏதாவது பேசப் போக, அவன் அலர்ட் ஆகி அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டானா, மறுபடியும் அலையனும்” என்றான் செல்வா. ” அதான் கரெக்ட்டு. ஒரு வண்டிய பிடிக்கிறோம். நேரா கிளம்பி ஸ்பாட்டுக்கு போறோம், ஆள தூக்கிட்டோம்னா நேரா இங்க கொண்டாந்துரலாம். அடிக்கிற அடியில காசு பணம் எல்லாத்தையும் கக்கிர மாட்டான்?” என்றார் சுந்தர்ராஜ்.

ஏவ் ஏவ் என ஓங்கரித்த வெங்கடேசன் திடீரென்று எழுந்து ஓட்டலுக்கு வெளியே இருந்த பாத்ரூமை விசாரித்துக் கொண்டு சென்றான். கிடைத்த இடைவெளியை சட்டென்று பயன்படுத்திக் கொண்டவராக ” ஏன்பா செல்வா, வண்டி புக்கு கதிர்ப்பய  தந்துட்டான். ஏற்கனவே டெலிவரி செலான்ல முத்தரசி கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கான். இப்ப அதை வச்சு அழகா வண்டிய தன் பெயருக்கு மாத்திக்கலாம். இப்ப போய் வேல மெனக்கெட்டு அவன தூக்கிட்டு வந்து அடிச்சி மல்லுக்கட்டினாலும் என்ன பிரயோசனம்..? அவன் மேல ஃப்ராடு கேஸ் குடுத்து உள்ள தள்ளலாம். அதுனாலயாவது எதும் பலன் இருக்குதா..? வேணா ஒண்ணு பண்ணலாம். அவனைப் பார்த்த இடத்துல நாலு அறை அறைஞ்சி திருப்திப் பட்டுக்கலாம். நீங்க சொன்னாத் தான் தம்பி கேப்பாப்ல..வெங்கடேசன் ஒய்ஃபுக்கு இந்தாள் இந்தச் சின்ன விசயத்துக்கு இம்புட்டுத் தவ்வுறதுல கொஞ்சம் கூட் இஷ்டமே இல்லை.கொஞ்சம் பேசுங்க” என முடிக்கவும் மறுபடியும் அதே இருக்கையில் வந்து ஹப்பாடா என்ற பெருமூச்சுடன் வெங்கடேசன் உட்காரவும் சரியாக இருந்தது.

ஏன் நண்பா…அந்த முத்தரசு விசயத்தை நாமளே டீல் பண்ணிக்கலாம். கம்ப்ளைண்டு குடுத்து போலீஸ் ஆக்சன் எடுத்து ஒரு பிரயோசனமும் இருக்காப்ல தெரியலை என்ற செல்வாவின் முகத்தையே எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த  வெங்கடேசன் “ சரி நண்பா..அவனை விட்றலாமா..?” என்று சன்னமாகக் கேட்டான்.

“அட யாரு விடச்சொன்னது. போலீஸ் வேணாம். நாம கெளம்பிப் போவலாம். சிக்குற இடத்துல அவனை தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சிட்டு வந்துட்டே இருப்பம். என்ன..?”

“இல்ல வெளியூர்ல போயி எதுனா செய்றப்ப சிக்கலாய்ட்டா?” என்ற வெங்கடேசன் தனது தாடியைச் சொறிந்தான். “ அட நமக்கெல்லாம் எதுய்யா உள்ளூரு வெளியூருன்னு… வா பார்த்துக்கலாம் என்று புன்னகைத்தான் செல்வா. வெங்கடேசன் பார்க்காத சந்தர்ப்பத்தில் சுந்தர்ராஜ் “ரொம்ப நன்றிப்பா” என்றாற் போல அபிநயிக்க பதிலுக்கு “நா பார்த்துக்கிறேன்” என்று இவனும் கண்ணாலேயே கதை சொன்னான். எல்லாவற்றையும் பார்த்தும் பாராதவனைப் போல இருந்தான் வைத்தி.

சிந்தாமணி தனக்காக வளையல் கடை பஸ்ஸ்டாப்பில் காத்திருப்பாள் என்று விஷயம் ஞாபகம் வந்ததும் மின்னல் தொட்டாற் போல் சட்டென எழுந்தான். “வாடா வைத்தி கெளம்பலாம் என்றவனிடம் சரி சனிக்கிழமை  காலங்காத்தால கெளம்புறோம். சரியா நண்பா..?” என்று வழியனுப்பி வைத்தான் வெங்கடேசன். அவன் தலையைக் கலைத்தபடியே “சரி நண்பா “என்று வாசலைத் தாண்டப் போனவனிடம் “செல்வா” என அழைத்தபடியே தானும் வாசலுக்கு வந்து அவன் சட்டைப் பாக்கெட்டில் தன் கையில் சுருட்டி வைத்திருந்த பணத்தைச் செருகியவன் “ காசு கேட்ட..மறந்திட்டு போற” என்றபடியே “இப்ப கெளம்பு” என மீண்டும் உள்ளெ சென்றான்.

(வளரும்)