யாக்கை 18

யாக்கை 18

ஓங்கிய வாள்நுனி


சிந்தாமணி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு செல்வாவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இடம் பொருள் ஏவல் எல்லாம் மறக்கடிக்கும் பார்வை. இவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள்? எத்தனையோ தழுவிய பின்னர் எத்தனையோ முத்திட்ட பின்னர் எவ்வளவோ கூடிக் களைந்த பிற்பாடும் எப்படி என்னை இன்னமும் சுண்டி இழுக்க முடிகிறது இவளால்..? “நாம பார்க்காத பொம்பளையா?” என்கிற கித்தாய்ப்புத் தான் செல்வாவை எப்போதுமே உந்தி வந்திருக்கிறது. முதன் முதலாகப் பதினேழு வயதில் தொடங்கிய உடல் விளையாட்டு. ஒவ்வொரு ஊராய் ஒவ்வொரு பெண்ணாய் வரிசையாய் ஞாபகம் செய்து கொண்டே வருவான் . ஒவ்வொரு பெயராய் அவன் தாண்டிச் செல்லுகையில் வைத்தி முகமெல்லாம் விரிந்து பார்த்து வியப்பான். “எலே சினேகிதா என்னடா நூத்துக் கணக்கில சொல்லிட்டே போறே?” என்பான்.

அவனைப் பொருத்த மட்டில் பெஞ்சாதியைத் தாண்டினால் பாவம். ஊர்க் கடைசியில் வைத்தியின் உறவினர் ஒருவர் சின்னமுத்து எனப் பெயர் எல்லோரும் பயப்படும் வண்ணம் பெரிய மீசை வைத்திருப்பார். அவரைப் பார்த்தாலே வைத்திக்கு மூத்திரம் முட்டிக் கொண்டு வரும். ஒரே ஓட்டமாகப் பறந்து சென்று விடுவான். அப்படிப் பட்ட சின்னமுத்து மாமாவின் அந்திமக் காலம் கொடூரமாக இருந்தது. சொல்ல முடியாத பெரிய வியாதி எதனாலோ தாக்குண்டு உடம்பெல்லாம் பாதியிலும் பாதியாக இளைத்துப் போனார். சாகும் தருவாயில் அவரைப் பார்த்துத் தைரியம் சொல்லி வருவதற்காக வைத்தியின் அம்மா அங்கம்மை உள்ளிட்ட பெண்கள் ஆறேழு பேரும் ஆண்கள் பத்துப் பேருமாய்க் கிளம்பிச் சென்ற போது வழியில் பள்ளிக் கூடம் விட்டு வந்துகொண்டிருந்த வைத்தியையும் கைப்பற்றி அழைத்துப் போனாள் அங்கம்மை.

முதலில் வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியவன் ” சரி போய் தான் பார்ப்போமே” என முடிவெடுத்ததற்கு அத்தனை பெரிய கூட்டமும் ஒரு காரணமாக இருந்தது. அடிக்கடி தன்னை அச்சுறுத்திய சின்ன முத்து மாமாவா அது? என்று ஐயமாக இருந்தது வைத்திக்கு. ஊரே கிளம்பி போனாலும் வாயை பொத்திக்கொண்டு சற்று தள்ளினார் போல் நின்றபடியே பேசிவிட்டு கிளம்பி வந்து விட்டார்கள். அப்போது பெரிதாக புரியவில்லை வைத்திக்கு. தைரியம் சொல்லும் சாக்கில் அது ஒரு வழியனுப்பு வைபவம் தான் என்பது பின்னர் புரிந்தது. அடுத்த மாதம் சின்ன முத்து மாமா இறந்து போனார்.” பல பொம்பளைங்க கிட்ட புழங்குனதனாலதான் சின்ன முத்துக்கு இந்த கதி” என்று அப்பா சொல்லிக் கொண்டே இருந்தார். அவன் மனத்தில் ஆழமாக பதிந்தது அந்த ஒரு வாக்கியம். வைத்தி குடிப்பான். தரையில் விழுந்து புரளுவான். மற்றபடி பொம்பளை ஷோக்கு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது அவனுக்கு. உயிருக்கு உயிரான செல்வம் எப்படி சமாளிக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. சின்ன முத்து மாமாவின் கதையை பற்றி ஒரு நாள் செல்வத்திடம் சொன்ன வைத்தி ” “பார்த்து நண்பா, உனக்கு எதுனா அதே மாதிரி வந்திர போது” என நிசமாகவே கவலைப்பட்டான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நண்பா” என்று சிரித்தபடி கடந்து விட்டான் செல்வா. இந்த சிந்தாமணி என்பவளை மட்டும் எந்த கணக்கிலும் சேர்க்க முடியவில்லை. அவளைத் தாண்டி வேறு யாரையும் சிந்திக்க மறுக்கிறது மனசு. தான் அப்படி இருப்பதில் ஒரு விதமாக நிம்மதியையும் இகழ்ச்சியையும் சேர்த்தே உணர்ந்தான் செல்வா.

” எங்க பவுன்ராஸ் மாமா அன்னைக்கு நம்மை பார்த்துச்சி போல. எங்க அக்கா கிட்ட போய் என்ன சொல்லுச்சுன்னு தெரியல. நாலஞ்சு தடவை எங்க அக்கா ஜாடையா கேள்வியா கேக்குது. பொச பொசன்னு வந்துச்சு. பேசாம சொல்லிடலாமா அப்படின்னு தொண்டைக்குழி வரைக்கும் தொக்கிட்டு நிக்கிற வார்த்தையை கஷ்டப்பட்டு அடக்கிக்கிறேன் தெரியுமா?. நீ மட்டும் உம்னு ஒரு வார்த்தை சொல்லு. இப்பவே போய் சொல்லிடுறேன். நாமளும் இங்கேயும் அங்கேயும் கஷ்டப்பட்டு பாத்துக்க தேவையில்லை.” என்று அதுவரையிலான மெல்லிய தொனியில் இருந்து மாறி உற்சாகமானாள் சிந்து.

கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளை சின்னதாக தொட்டுக் கொண்டே “ம் ம் ” என கேட்டு வந்த செல்வா ” இன்னும் மூணு வாரம் பொறுக்க மாட்டியா? அடுத்த வாய்தால ஆர்டர் கிடைச்சிரும்னு நம்பிக்கை சொல்லி இருக்காப்ல வக்கீல். இவ்வளவு பொறுத்தாச்சு இன்னும் மூணே வாரம்” என்றவன் சட்டென்று அவளை மடியில் சாய்த்து குனிந்து முத்தமிடத் தொடங்கினான். அவனாக விலகும் வரை அந்த முத்தத்துக்குள்ளேயே தானும் இருந்து கொண்டிருந்தாள் சிந்தாமணி.
“இருட்டிட்டு வர்றாப்புல இருக்கு. நான் கிளம்புறேன். மழை வந்துருச்சுன்னா அப்புறம் சிரமம்” என்று எழுந்து கொண்டாள் சிந்தாமணி. அவ்வளவு பரபரப்பான மத்திய பேருந்து நிலையத்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அதன் பக்கவாட்டில் இருந்த மாடிப்படி அடுத்த மாடிகளுக்கு செல்வதற்கானது. முதல் மாடி முழுவதும் நாலைந்து அலுவலகங்கள் இயங்கின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த தளத்தில் ஆள் நடமாட்டம் முற்றிலுமாக இல்லாமல் இருந்தது.

என்னை எவன் என்ன செய்ய முடியும் என்கிற அலட்சியம் உடம்பெல்லாம் ஊறிக் கிடந்ததால் எங்க பார்க்கலாம் என கேட்ட சிந்தாமணியிடம் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டுக்கு வா என்று அழைத்திருந்தார் செல்வா. 20 படிகளில் இறங்கியதும் ஊர் மொத்தத்துக்கும் செல்லக்கூடிய பேருந்துகள் அணிவகுக்கிற இடம் என்பதால் சட்டு என்று கிளம்பி வீட்டுக்கு செல்ல முடியும் என்பது ஒரு வசதி. சிந்தாமணி கிளம்பி போன பிற்பாடு ஒரு பத்து நிமிடத்திற்கு அங்கேயே அப்படியே அமர்ந்திருந்தான் செல்வா.

திடீரென்று அவனுக்குள் வெலவெலவென்று ஏதோ உலர்ந்தாற் போல் தோன்றியது. அடுத்த தேவை ஒரு குவளை தேநீர் மற்றும் ஒரு சிகரெட் மனசு தன் விருப்பத்தை கட்டளை ஆக்கி கிளம்பு கிளம்பு என படுத்தியது. நாலு நாலு படிகளாக இறங்கி சாலைக்கு வந்ததும் இடது பக்கம் செந்தில் காபி பார் என்று இருக்கவே கல்லாவில் காசு கொடுத்து டோக்கன் வாங்கினான். தரப்பட்ட சூட்டோடு டீயை முழுவதுமாக குடித்து முடித்துவிட்டு கிளாஸ் அதற்காக குறித்த இடத்தில் வைத்தவன் பேண்ட் பாக்கெட்டில் சிகரெட் இருக்கிறதா என பார்த்தான் காலி பெட்டி தான் இருந்தது அதை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் கல்லா பக்கம் திரும்பி ” ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டர், ஒரு தீப்பெட்டி” என வாங்கிக் கொண்டு மிச்ச சில்லறையை பின்பாக்கெட்டில் சொருகி விட்டு பஸ் ஸ்டாண்ட் காம்ப்ளக்ஸ் பக்கவாட்டில் புது கட்டிட விஸ்தீரனப் பணிகள் நடைபெறுகிற இடத்தை நோக்கி நடந்தான். கடைசி இழுப்பு வரை முடித்துவிட்டு சிகரட்டை ஏதோ ஒரு திசையில் எறிந்தவன் தன் வண்டி நிறுத்தி இருக்கும் இடத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு கிளம்ப எத்தனித்தான்.

மழை லேசாக தூறல் தொடங்கியது. சட்டு சட்டு என்று ஜனங்கள் கிடைத்த இடங்களில் எல்லாம் ஒதுங்க தொடங்க, முன்பிருந்த இடம் தன் ஒப்பனையை முழுவதுமாக மாற்றிக் கொண்டாற் போல் தோன்றியது. கிளம்பலாம் என்கிற யோசனையை கொஞ்சம் பொறுத்து போனால் என்ன என்று மாற்றி அமைத்துக் கொண்ட செல்வா புது கட்டிட வாசலில் ஓரிடத்தில் ஒண்டிக்கொண்டான்.

சாலையில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. நல்ல போதையில் லேசாக பின்னும் நடையோடு வேஷ்டி நுனியைக் கையில் பற்றி இறுக்கியபடி நடந்து இவன் நிற்பதை கவனிக்காமல் கடந்து போகிற மனிதனை பார்த்ததும் செல்வாவுக்கு அடையாளம் தெரிந்து விட்டது. சேவற் கொடியோன் ஆட்டோ கன்சல்டன்சி அதிபர் கதிர். மெல்ல கடந்து போனவன் இன்னும் உள்பக்கம் போய் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு மூத்திரம் அடிக்கத் தொடங்கினான். கேலியாய்ச் சிரித்தவாறே தன்னிடம் பேசிய கதிரின் முகம் நினைவிலாட ஆத்திரம் தலைக்கேறிய செல்வா சட்டென பேன்ட் பின்பக்கத்தில் இருந்து தன் கட்சிப்பை எடுத்து முகத்தில் கட்டிக் கொண்டு வேகமான நடைகளால் அவனை சமீபித்து முதுகை சேர்த்து எத்தினான்.

சற்றும் எதிர்பாராத அந்த நிகழ்வின் வஞ்சகம் உரைப்பதற்குள் பாதி செத்திருந்தான் கதிர். தொண்டையில் இருந்து வார்த்தைகள் வரவே இல்லை. வியாதி முற்றி போய் கழுத்து அறுபடுகிற அடிமாட்டை போல் ஒரு விதமான கேவலைத்தான் எழுப்பினான். அடுத்தடுத்து முகத்தில் நெஞ்சில் வயிற்றில் என மாறி மாறி மிதிகள் விழுந்தன. தன்னை யாரோ கொலை செய்கிறார்கள் என்று தான் பயந்தான். சிறிது நேரம் கண்கள் பார்வைத் திறன் இன்றி அரை மயக்கத்தில் அந்த இடத்திலேயே கிடந்தான்.

தன்னை மிதித்தவன் அதோடு போய்விட்டான் என்பதை உணர்ந்து கொள்வதற்கே ஏழெட்டு நிமிடங்கள் பிடித்தது கதிருக்கு. நாக்கை நனைத்துக்கொண்டு மூர்த்தி மூர்த்தி என்று மிகச் சன்னமான குரலில் தான் கத்த முடிந்தது. பல நாட்கள் மனிதர்களும் மிருகங்களும் மல ஜலம் கழிப்பதற்காக மட்டுமே ஒதுங்கித் திரும்பிய இடத்தில் தான் விழுந்து கிடக்கிறோம் என்பது முழுவதுமாக அவனுக்கு உறைக்கும் போது வாந்தி வருவது போல் ஓங்கரித்தான். நாலைந்து பாட்டில் பீர்களை உள்ளே தள்ளும்போது, இந்த தினம் இப்படி முடிய போகிறது என்பது கொஞ்சம் கூட அவனுக்கு தெரியாது. தன் இரண்டு கைகளையும் ஊன்றி கொண்டு மெல்ல மெல்ல எழுந்து கொண்டான்.

“கதிரே கதிரே” என்று அவனைத் தேடிக் கொண்டு வேறு பக்கத்தில் குரல் தந்து கொண்டிருந்த மூர்த்தி இவன் வந்து நின்ற கோலத்தைப் பார்த்ததும் ” “ஏய் என்னய்யா என்னாச்சுய்யா? விழுந்துட்டியா? குறைச்சி குடின்னா கேக்குறியா?” என்றவனை எரிப்பது போல் பார்த்துவிட்டு ” ஒதுங்கின இடத்தில நாய் இருந்துருக்குய்யா…வள்ளுன்னு மூஞ்சிக்கு நேரா எழும்பி வர்றப்ப சமாளிக்க முடியுமா..? கீழ விழுந்திட்டன்யா…” என்றான் சமாளிக்கிற தொனியில். மூர்த்திக்கு அவன் சொல்வதை அப்படியே நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. இருந்தாலும் முகம் உள்பட உடல் முழுவதும் சேறும் சகதியுமாக கதிரை பார்க்கும்போது அவனுக்கே பாவமாக இருந்தது.

யாரிடம் பரிதாபத்தை மறைமுகமாக கூட காட்டக் கூடாது என்பது தேர்ந்த ஞானிகளுக்கு மட்டுமே புரிபடக்கூடிய விஷயம். மூர்த்தி ஞானி அல்ல. ஆனாலும் வாழ்க்கை அவனை கதிர் என்கிற ஒருவனோடு வருடக்கணக்கில் புழங்கி எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதில் தேர்ந்த வல்லுனனாக மாற்றி இருக்கிறது. இந்த சமயத்தில் மௌனமாக இருப்பது மட்டுமே உசிதம் என்று அவனுக்கு தோன்றியது. அதை செயல்படுத்தினான்

“வின்செண்ட் டாக்டரோட ஆஸ்பத்திரிக்கு போவோமாயா? என்று கேட்ட மூர்த்தியிடம் ” முதல்ல ஆர்.பி.எஸ் லாட்ஜுக்குப் போலாம். ஒரு குளியல் போட்டுட்டு  டிரஸ் எல்லாம் மாத்திட்டு தான் டாக்டர்கிட்ட போகணும் ” என்றவன் சாலையை வெறித்தான். ஓங்கிய வாள் நுனிபோல் எங்கிருந்தோ ஊடுருவிய வெளிச்ச கீற்றில் பார்க்க முடிந்த மட்டும்  கர்ச்சீஃப் அணிந்த  முகத்தில் தனக்குத் தெரிந்த அந்தக் கண்களை எங்கே எப்போது சந்தித்திருக்கிறோம் என்பது தெரியவில்லை.

ஒன்றா இரண்டா..? ஆயிரம் ஆயிரம் விரோதிகள். யார் ஓங்கிய கால்கள் அவை..? யாருடைய கண்கள் அவை? கதிருக்கு ஒன்று மட்டும் உரத்துச் சொல்ல தோன்றியது

” தாயோளி… சேர்த்த சொத்த அழிச்சாவது உன்னையக் கண்டம் துண்டமா வெட்டிக் கூறு போடல… என் பேரு செங்கதிர்ச் செல்வன் இல்லடா”

ஆட்டோ ஆர்பிஎஸ் லாட்ஜ் இருக்கும் ஐங்கடல் தெருவுக்குள் நுழைந்தது. கண்களில் கண்ணீர் முட்டியது.கதிர் கண்களை மூடிக்கொண்டான்

 

{வளரும்}