19 தனியளின் சம்பாஷணை

சமீபத்துப் ப்ரியக்காரி

19 தனியளின் சம்பாஷணை


  • 1
    “இன்றைக்கும் நிலவு வரும்”
    என்கிற எண்ணத்தில் தொடங்குகிறது
    உறங்காமையின் இதிகாசம்.
  • 2
    நிலா பார்த்தல் என்பது
    அடிமையைப் பழக்குவதற்கான
    உத்தம உபாயங்களிலொன்று.
  • 3
    எப்படி உறங்குவது என
    ஒரு கண் வெடிக்கையில்
    ஏன் உறங்க வேண்டும் என்று
    மற்றது கெக்கலிக்கிறது.
  • 4
    இதொரு பழக்கம்.
    பிரித்தாளும் சூட்சுமம்.
    கண்களை விடவும்
    பிரிவினைவாதம்
    இன்னொன்று இல்லை
  • 5
    நிலவின் இன்மையைப் பரிதியென்பது அறிவீனம்.
    முழுமையின்மையின் மிகப்பெரியது பரிதி.
    அதனாலென்ன?
    இரவில் அதற்குச் சிறிதும் இடமில்லை.
    இல்லாமற் போவதன் மாபெரிய உதாரணம் பகல்.
  • 6
    இரவென்பது
    கோடிச் சூரியன்களின் குழாம்.
  • 7
    நிலவுதிரும் தொட்டி இந்த மாடி.
    நீர்மம் மெல்ல நிரம்புகிற கலயமும் அஃதே.
    இரவின் முழுமையில் சாலையெல்லாம் வழிந்தோடுகிறது வெண் குருதி.
    காதலும் காமமும் உன்மத்தமும் இன்னபிறவெல்லாமும் பிறைகள்.
    ஒவ்வொரு பிறைக்கு உட்புறமும் ஆயிரம் வரலாறு.
  • 8
    உறக்கமின்றித் தவிக்கிறேன்.
    இன்றைக்கும்
    சுயவணங்கித்
    தன்போற்றித்
    தான் போற்றிப் பாடுகின்றாய்
    என் உறக்கத்துக்கு ஒருவழி சொல்லிவிட்டுப் போ!
  • 9
    வழியாவது…
    இருப்பது ஒரு பதில்.
    “உறங்குவதற்கு ஒரு நாள் போதும்”
    எந்த நாள்?
    நிலவு வராத ஒற்றை ஒரு நிசி
    அன்றைய உறக்கம் ஆயிரம் பூர்ணிமை
  • சாலச்சுகம்.