யாக்கை 14
மந்தாரம்
மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது. சின்னு என்கிற சின்ன தியாகராஜன் இப்போது வந்து சேர்ந்திருக்கும் உடலும் மனமும் கலந்த சித்திரம் அவனுக்கு அன்னியம் குன்றாமல் இருப்பதற்கொரு காரணம் உண்டு. இன்னும் மனதாரத் தன்னை ஒரு எட்டு வயதுச் சிறுவனாகவே நினைத்துக் கொண்டிருப்பது தான் அது. சின்னுவுக்குத் தான் இப்படி யாருமற்ற ஒருவனாகத் தனிப்பதைக் குறித்து அவ்வப்போது துக்கம் தொண்டையைக் கவ்வும். தாய் தன்னை ஏமாற்றி விட்டாள், தந்தை தன்னைப் பாராமுகம் செய்தார் என்றெல்லாம் தொகுத்துக் கொள்வான். கூடச் சேர்ந்து குடிப்பதற்கு யாராவது வந்து சேரும் வரை தான் எல்லாத் துயரமும்.
தனிமை என்பது பேய்களுக்கு மத்தியில் ஒருவன் மாட்டிக் கொள்வதைப் போல கண்ணுக்குத் தெரியாமல் கழுத்தைப் பிடித்து நெரிப்பது. சின்னுவுக்கு தனிமை என்பது ஒரு இரண்டுங்கெட்டான். சில சமயங்களில் அடிமையைப் போல் கை, கால் பிடித்து விடும். வேறு சந்தர்ப்பங்களிலோ உயிரைக் குடிப்பதற்காக அவனை துரத்தி அடிக்கும்.
குடி பங்காளிகள் ஒவ்வொருவராக வந்து சேரச்சேர சின்னுவின் மனம் சமநிலைக்கு வந்து அமைதியாகும். ‘என்ன இப்போது பாழை போகிறது? பெண்கள் தான் விளக்கேற்ற வேண்டுமா என்ன? அன்பு நண்பர்கள், அவனை எப்போதும் எதிர்நோக்கி காத்திருக்கும் தொண்டர்கள் சுவிட்ச் போட்டால் விளக்கு எரிந்து விட்டு போகிறது. நான் ஒரு அரசன். சாதாரண ஜனங்களைப் போல் என்னால் ஒருபோதும் இருக்க முடியாது’.
“இதுவே நிதானம் இதுவே ஞானம் இப்படியே இரு சின்ன தியாகராஜன். வாழ்க்கை இந்த குவளையில் ததும்பும் மதுவைப் போலவே எப்போதும் கொண்டாட்டமாகவே இருக்கட்டும்”. அவனை உறங்க வைத்துவிட்டு எல்லோரும் கிளம்பிச் சென்ற பிறகு அவனுடையவை பெரும்பாலும் கனவற்ற இரவுகள் தான். எப்போதாவது கனவு வந்தாலும் கூட எழுந்த பிறகு குழப்பமாய் தான் மிஞ்சுமே ஒழிய நினைவில் ஆடாது.
தந்தையின் மரணத்தை ஒரு விதமாக செரிமானம் செய்து கொள்ள முடிந்த சின்னுவுக்கு, ஏழுமலையின் மரணத்தை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. குடிக்கிற குடிக்கு நிச்சயமா சீக்கிரமே செத்துருவான் என்று ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சொல்லிக் கொண்டே இருந்தான் முரளி. அவன் குடிக்க மாட்டான் அப்படியே குடித்தாலும் சில மடக்குகள் தான். போதை என்பதை தனது வளர்ப்பு நாயைப் போலவே கட்டுப்படுத்தி வைத்தவன் முரளி. பவுன்ராஜூம் அப்படிப்பட்டவன் தான். குடிப்பதோடு அந்த தினம் முடிவடைகிறது என்பது அவனுடைய கொள்கை. எந்த வேலை பாக்கி இருந்தாலும் திரவத்தை தொடவே மாட்டான். அநேகமாக அவன் குடிப்பது இரவு வீட்டுக்குச் சென்ற பிறகு மட்டும்தான். பெரும்பாலானவர்களுக்கு அவன் குடிப்பான் என்பதே தெரியாது. வடிவு அவனை அந்த விஷயத்தில் எதுவுமே சொல்ல மாட்டாள். என் புருஷன் காரியக்காரன். தன்னுடைய குறைகளை வென்றவன். ஒருபோதும் வறண்டு போகாத பணக் கிணறு அவனுடையது. தெருவில் குடித்துவிட்டு விழுந்து கிடந்து வீடு வரத் தெரியாமல் அலைபவர்களை விட எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்து என் கண் முன்னால் கொஞ்சம் குடிக்கிறான். போகட்டும் அதனால் என்ன? வடிவு அவனுக்கு இரண்டு ஃபுல் பாயில்கள், கொஞ்சம் வறுத்த கடலை, மதியம் வைத்த குழம்பிலிருந்து எடுத்த சுண்டல், ஒரு விழுது ஊறுகாய் அல்லது கருவாட்டுத் துண்டம் என பார்த்து பார்த்து சைட் டிஷ் களை தருவாள். அதனாலேயே வேறு எங்கும் குடிக்கப் பிரியப்பட மாட்டான் பவுன்ராஜ்.
சின்னுவோடு எப்போதும் குடிப்பது எழுமலையாகத்தான் இருக்கும். இரண்டு தனி மரங்கள் தோப்பாகவில்லை எனினும் ஒன்றுக்கொன்று உரசி கொண்டே நின்றன. அடித்த பெருங்காற்று ஒரு மரத்தை மட்டும் சாய்த்து விட்டு போயிருக்கிறது. சின்னுவுக்கு தலை பிளக்கிறாற் போல் இருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக குடிக்க பிரியம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்தான் சின்னு. அந்த நாளை எப்படிக் கொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. முரளியும் பவுன்ராஜும் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிடவே முதல்முறையாக நெடு நாட்களுக்குப் பிறகு தனியே ஒரு டம்ளரை ஏந்தியிருப்பதை நம்ப மாட்டாமல் உறைந்து போய் இருந்தான்.
என்ன இன்னிக்கு சின்னு தன் கடையைத் தேடி வந்திருக்கிறான் என்று நவாஸ் கனிக்கு ஆச்சரியம். “என்னய்யா நீ மட்டும் குடிக்கிற..? எழுமலை வரல?” என்று கேட்டவனை உசு உசு என்று பவுனும் முரளியும் அடக்குவதற்குள் ஓவென்று பெரும் சப்தத்துடன் அழத் தொடங்கினான் சின்னு. அழுகை என்பது எல்லோருக்குமானது. சிலர் மட்டும் தான் அழுது விடக்கூடாது என்கிற வைராக்கியத்தோடு எப்போதும் இருந்து விடுகிறார்கள். மனுஷ மனசு காற்று நிரம்பிய பலூனை ஊசியைக் கொண்டு குத்துவது போல் ஏதாவது ஒரு புள்ளியில் பட்டென்று வெடித்து விடுகிறது. சின்னு அழட்டும் என்று பவுன்ராஜூம் முரளியும் பார்த்துக் கொண்டே நின்றார்கள். நவாஸ் கனி பதறிப் போய்விட்டான் “ஏய் என்ன ஆச்சு? ஏன்யா” என்று குழறினான்.
எழுமலை இறந்து விட்டான் என்பதைச் சொன்னதும் அவனது முகம் பல்வேறு உணர்வுகளை பிரதிபலித்தது.” சரி சீக்கிரமா அடிச்சு முடி. பால் பூத்து கிருஷ்ணனை பார்த்துட்டு மார்ச்சுவரி பக்கம் போலாம்”. சின்னுவின் தோளைப் பிடித்து கட்டளை இடுவது போல் அழுத்தினான் பவுன்.
எதுவும் பேசாமல் தன் தொண்டை வரை சரித்துக் கொண்டவன்.” கனி,இன்னொரு ரவுண்டு ஊத்து” என்றான். பற்ற வைத்த சிகரட்டை பாதியில் தூக்கி எறிந்தான். பிளாஸ்டிக் தட்டின் மேல் நியூஸ் பேப்பர் கிழிசல் முழுவதும் எண்ணெயாகி இருக்க அதிலிருந்து மொத்தம் மிச்சரையும் கையால் அள்ளிப் பாதியை தரையில் சிந்திய படியே அவசரமாக தன் வாயில் திணித்துக் கொண்ட சின்னு ” சரி வரேன்யா” என்று முரளியின் கையைப் பிடித்து இழுத்து சாமி ஆட்டோவில் முதலில் அவனை ஏறச் செய்தான். நடுவில் சின்னு அமர்ந்து கொள்ள மூன்றாவதாக பவுன்ராஜ் ஏறினான்.
இடம் சொல்லியதும் குனிந்து லீவரை இழுத்த சாமியிடம்
” சாமி இன்னிக்கு பூராம் எங்க கூட தான் உனக்கு டியூட்டி. சொல்லச் சொல்ல ஓட்டிட்டே இரு” என்று கண்களை மூடிக்கொண்டான் சின்னு.
” முதலாளி சொன்னா சரி” என்று ஒரே சீராக ஆட்டோவை செலுத்தினார் சாமி.
ஆட்டோவிலேயே சின்னு அமர்ந்திருக்க முரளியின் பவுனும் ஆளுக்கு ஒரு பக்கம் இறங்கினார்கள். பால்கார கிருஷ்ணனின் வீடு என்று கேட்டதுமே சற்று தொலைவில் இருக்கும் சரிவை காட்டி ‘அதோ அந்த ஒத்த வீடு’ என்று வழி சொல்லி இருந்தார்கள். ஒரு மாதிரி ஏறி இறங்கி வீட்டின் முன்புறம் எது என்பதை புரிந்து கொண்டு “அண்ணே கிருஷ்ணண்னே” என்று விளித்த முரளிக்கு “யாருப்பா அது” என பூட்டிய கதவிற்கு பின்னால் இருந்தே பதில் மட்டும் வந்தது.
“வெளியில வாங்கண்ணே ஒரு விஷயம் பேசணும்” .
வேஷ்டியை இறுக்கிக் கொண்டே வெளியே இறங்கி வந்த கிருஷ்ணனுக்கு வயது 50 க்கு மேல் இருக்கும். ‘இந்தா’ என உள்ளே இருந்து வந்த குரலுக்கு திரும்பி பார்த்தார். வீட்டுக்குள்ளே இருந்து தன் மீது எறியப்பட்ட பூத்துவாலையை தன் கழுத்தில் மாலை போல் தொங்கவிட்டுக்கொண்டார்.” கேசட் கடை முரளியா? என்னப்பா இந்தப்பக்கம்?” என்றவர் வீட்டின் உள்பக்கம் திரும்பி “பொன்னி குடிக்க கொஞ்சம் மோர் எடுத்தா” என்றார்.
” அதெல்லாம் வேணாம் அண்ணே” அவசர அவசரமாக மறுத்த முரளி எழுமலையின் முடிந்த கதையை விலாவாரியாக சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவர் ” எனக்கு ஏழுமலையோட அண்ணன் சபாபதி தான் பழக்கம். நாங்க ரெண்டு பேரும் எம் எஸ் மில்லுல 20 வருஷமா ஒன்னா வேலை பார்த்தோம். சபாபதி உடம்பு சரியில்லாமல் இருந்து இறந்துட்டார்.மில்லு வேற அடச்சிட்டாங்க. அவர் இறந்த அப்புறம் அவங்களுக்கும் எனக்கும் எந்த நேர் தொடர்பும் இல்லை. ராக்கம்மா தன் அண்ணன் வீட்டோட போயிட்டு தான் கேள்வி. அவங்க ஊர் கோயில்ல வச்சி ரெண்டு தரப்பாரும் பேசி முடிச்சி தீர்த்து விட்டாங்க.அது நடந்தே ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சு”. என்றார்.
கையில் மோர்ச் செம்பும் தம்ளர்களுமாக வெளியே வந்த பொன்னியின் முகத்தில் முந்தைய உறக்கத்தின் மிச்சச் சடவு தெரிந்தது. “ஏங்க ராக்கம்மா மறு கலியாணம் செய்துட்டு வட நாட்டுல எங்கயோ இருக்குறதா சொன்னாகளே” என்றவள் நீட்டிய தம்ளரை வாங்கி சம்பிரதாயமாகக் குடித்தார்கள்.
பவுன்ராஜ் வந்ததை அவர்கள் இருவருமே விரும்பவில்லை என்பது முகத்தில் தெரிந்தது. ரெம்ப நேரம் இங்கனயே நின்டுக்கிட்டிருந்தா நம்ம மரியாதையும் குறைஞ்சிடும் என முரளி நினைத்தான்.
“அண்ணே என்ன இருந்தாலும் தகவலை சொல்லிரணும். எழுமலையோட மச்சினன் தொடர்பு நம்பர் எதுனா இருந்தா தாங்க.மனசு கேட்கலை” என்றான். வேண்டாத விருப்பமாக பொன்னியிடம் எதையோ கிசுகிசுத்தார் கிருஷ்ணன். அவள் உள்ளே சென்று எடுத்து வந்த தன் சந்தனக் கலர் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சின்னஞ்சிறிய ஃபோன் டைரியை எடுத்தவர் எழுதிக்கங்க என்றார். அவர் சொல்லச்சொல்ல சின்ன காகிதத்தில் எச்.டிடி கோட் நம்பருடன் எழுதிக் கொண்டு ரொம்ப நன்றிண்ணே என்று கிளம்பினான் முரளி.
பின்னாலேயே நடந்து சென்று இறங்கிய வழியிலேயே மீண்டும் ஆட்டோவுக்குள் புகுந்து கொண்டான் பவுன்ராஜ். பின்பக்கம் சாய்ந்து அரைபோதையில் உறக்கவிழிப்புடன் கலைந்து கிடந்த சின்னு ” எழுமலை…ஒரு சிகரட்டைப் பத்த வச்சிக் குடுறா” என்றான். இப்போது பவுனுக்கு லேசாய்க் கண்கள் கலங்கின.
ஆட்டோ பவளத் திட்டு நோக்கிச் சென்றது.
(வளரும்)