இரண்டு மைதிலிகள்

இரண்டு மைதிலிகள்


என் பேர் மைதிலி.மிசஸ் மைதிலி சிவபாதம்.என்னைப் பெண் பார்க்க வந்த அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலத்தை இன்னமும் என்னால் மறக்க முடியலை.மொத்த வாழ்க்கைல ஒரே ஒரு தினம் மாத்திரம் செஃபியா கலர்ல மாறிட்டுது.எவ்ளோ முயற்சி பண்ணாலும் அதைப் பத்தின ஞாபகம் அழியவே இல்லை.மீசை இல்லாம கூட்டுப்புழுக்கள் படத்துல வர்ற ரகுவரன் மாதிரி நெடு நெடுன்னு கண்ல அதே மாதிரி கண்ணாடியோட யார் எது கேட்டாலும் அமைதியான குரல்ல சிரிச்சி பேசிட்டு இருந்தவரை தூரத்துல இருந்தே ரசிச்சிட்டு நிக்கிறேன்.அடிக்குரல்ல அம்மா திட்டினா.அடியே இவளே…அப்பா காஃபி கொண்டு வரச்சொல்லி ரெண்டு நிமிஷமாச்சு.ஏன் இப்பிடி நிக்கறே..?நீ தான் பொண்ணுன்னு உனக்கே மறந்துடுச்சா..? வேக நடையில் சமையல் ரூமுக்குப் போய் நீள அகலமான ப்ளாஸ்டிக் ட்ரே நிறைய காப்பி தம்ளரை எடுத்துட்டு நேரா முதல்ல அவர் முன்னாடி குனிஞ்சு எடுத்துக்குங்க என்றேன். என்னது என்றார்.அப்படி கேட்பார்னு நான் எதிர்பார்க்கலை.ஏனோ நிசம்மா எனக்கே தெரியாம வெட்கம் வந்தது. காஃபி என்று சொல்லி விட்டு அப்பாக்கு பக்கத்துல இருந்த டீபாய் மேல ட்ரேயை வெச்சிட்டு ஒரே ஓட்டமா உள்ரூமுக்கு ஓடிட்டேன். கொஞ்ச நேரம் அந்த வீட்டோட ஹால் உள்பட ஒட்டு மொத்த ப்ரபஞ்சத்துக்கும் எனக்கும் எந்த கனெக்சனும் இல்லை.காதெலாம் ஒருமாதிரி சூடாகி ஜன்னல் வழியே தெரிஞ்ச எதிர்வீதியை முறைச்சிப் பார்த்துட்டு நின்னேன்.பத்து நிமிஷம் கழிச்சு வள்ளியம்மை அத்தை சிரிச்சிட்டே உள்ள வந்து என் தோளைத் தடவி என்னைக் கட்டிக்கிட்டாங்க.அத்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”உனக்கு பையனைப் பிடிச்சிருக்கா..?”ந்னாங்க. நான் தரையைப் பார்த்துகிட்டே ரொம்ப உயரமான்னேன்.அப்டில்லாம் இல்ல.சரியான ஜோடிதான் அப்டின்ன அத்தை பிடிக்கலைனு போயி சொல்லிடவா..?என்றாள் பட்டென்று யார் சொன்னா..பிடிச்சிருக்கு ரொம்ப என்றேன்.மறுபடி தலை தரையை நோக்கிடுச்சி. வெக்கத்தைப் பாரு என்றவள்… இந்தா தங்கம்…இப்ப மாப்பிள்ளை உன் கூட ஏதோ தனியா பேசணுமாம்.வருவாப்ல..கோணிக் கோணி நிக்காம சரியாப் பேசு என்றாள்.நான் ம் என்றதைக் கூடக் காதில் வாங்காமல் வெளியேறினாள்.என் மணாளர் என்னருகே வந்து நின்ற அந்த நொடி உடம்பெல்லாம் ஒரு லட்சம் மின்மினிகள் புகுந்து வெளியேறினா மாதிரி உருவி விட்டாப்ல ஒரு மாதிரி காய்ச்சலுக்கு அருகாமையை உணர்றேன்.அவர் என்னவோ கேட்குறார். உன்னை எல்லாரும் எபிடி கூப்டுவாங்க..?
அம்மா மைலின்னு கூப்டுவா.அப்பா மைலாம்பார்.இல்ல மைதிலின்னு சொல்வார்.அல்மோஸ்ட் எல்லாருமே மைதிலின்னு தான் கூப்டுவாங்க என்றேன்.
அவர் சிரிப்போடு கேட்டுக் கொண்டே மைதிலி மைதிலி மைதிலி மைதிலி மைதிலி மைதிலி என்று ராகமாக டி.ராஜேந்தர் பாட்டின் ஸ்ருதியில் பாடினார்.
கேலி செய்யாதீங்க என்றேன்.சேச்சே…என்ன ஒரு அற்புதமான பேர் மைதிலிங்குறது என்றார்.நான் அவரோட கண்களையே உத்துப் பார்த்தேன்.
மைதிலி மைதிலின்னு அவரோட உதடுகள் முணுமுணுத்துகிட்டே இருந்தது.ஜபம் பண்றா மாதிரி அவர் என் பேரை திரும்பத் திரும்ப அதோட அன்னியம் விலகாத பிரமிப்போட சொல்லிக்கிட்டு இருந்தார். அவர் எங்கிட்டே தன்னைப் பிடிச்சிருக்கா அப்டின்னு கேட்கவும் இல்லை.அவருக்கு என்னைப் பிடிச்சதாகவும் சொல்லலை.வெளியில போய் உட்கார்ந்தவர் என் அப்பா கிட்டே “ஸார்…எனக்குன்னு பெரிய உறவுக்கூட்டம் எதும் கிடையாது.எல்லாமே எனக்கு என் சித்தப்பா தான்.. உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செய்து வச்சா…உங்களை விட பொறுப்பா பார்த்துப்பேன் என்றார்.அடுத்த பதினெட்டாவது நாள்
எங்க கல்யாணம் நடந்தது. இருங்க அடுப்பில குக்கர் விஸில் பண்றது.கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.

சிவபாதம்
மைதிலியை நான் முதல் முதல்ல பார்த்தப்போ எனக்கு அல்மோஸ்ட் பத்தொன்பது வயசு இருக்கும்.அஜ்மா காலேஜ்ல சிவபாதம்னா அலறும்.பிரபுதேவா டேன்ஸையே கொஞ்சம் நக்கல் பண்ணி காலேஜ் கல்சுரல்ஸ்ல நான் ஆடினப்புறம் இருபாலர் மத்தியிலும் நல்ல பிரபலமானேன்.என் காலேஜ்ல அப்பிடி ஒருத்தி படிக்கிறான்னு எனக்குத் தெரியாமலே ரொம்ப நாள் இருந்திட்டேன்.அஃப்கோர்ஸ்…இப்படி
ஒருத்தி இந்த உலகத்ல பொறந்திருக்கான்னு கூட அதுவரைக்கும் எனக்குத் தெரியாது.அவ தான் மைதிலி.இருங்க இருங்க…உள்ளே
என் மனைவி அடுப்பில குக்கர் விஸிலைத் துரத்திட்டு ஓடினாளே..அந்த மைதிலி இல்லை.இவ என்னோட காதல் மைதிலி.எனக்குக்
கிடைக்காமற் போன என் பாதகி மைதிலி.
மைதிலி தான் என் காலேஜ் ப்யூட்டி.யாருக்கும் மடங்காத சண்டிக்குதிரை.என்னவோ அவளைப் பார்த்த முதல் கணமே…
சரி வேணாம் நீங்க பாவம்.எல்லாரும் சொல்றது தான்.என்னை அவளுக்குத் தந்தாகணும்னு எனக்குள்ளே ஒரு வெறி.அவ கிடைக்கிறதுக்காகவாவது அல்லது கிடைக்கலைன்னாலாவது உயிரை இழந்தாக் கூட பரவாயில்லைன்னு உள்ளே ஒரு ஆன்மீக உத்தரவு மாதிரி கெடச்சிதுன்னு வைங்களேன்.
அடுத்து வந்த ஒண்ணே முக்கால் வர்ஷம் அவ பின்னாடி நாயா திரிஞ்ச நாப்பது பேர்ல நான் இல்லை.இதயம் படத்து முரளியே ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சிருந்தா அது தான் நான்.அவளை எவ்…..ளோ காதலிச்சேன்னு அவளுக்கில்ல…யாருக்குமே தெரியாம எனக்குள்ளயே பொத்தி பொத்தி வெச்சிட்டிருந்தேன்.ஐம்பது அறுபது நோட்டு நிறையக் கவிதை.
இரு மைவிழி ஒரு மைதிலின்னு ஆரம்பிச்சி எக்கச்சக்க காய்ச்சல் கவிதைகள்ல சில காகிதங்கள் கருகி எரிஞ்சுது.என் கூடவே நண்பன் சார்லி சொல்றா சொல்றான்னு அடிக்கடி என்னை புஷ் பண்ணிட்டே இருப்பான்.கடைசி வரைக்கும் சொல்லலை.சொல்ல தைரியம் இல்லைன்னு இல்லை.எதோ ஒண்ணு தடுத்துச்சி.அவளைக் காதலிக்கிறது என்னோட தனிப்பட்ட உரிமையா நினைச்ச அதே எனக்கு என்னோட காதலை
அவ கிட்டே சொல்லணும்னு அழுத்தமாத் தோணலை.அவ சிரிச்சிட்டு போயிடுவாளோன்னு கொஞ்சம் பயந்தேன் போல…
ஒரு நல்ல வேலையை அமைச்சிகிட்டு எப்படி யார் மூலமாவது அணுகலாம்னு மைதிலியோட வேர் அபவ்ட்ஸைத் தேடினேன்.கிட்டத் தட்ட மூணு வருஷம் என்னோட வேலை.நல்ல சம்பளம், இத்யாதிகள் எல்லாம் சேர்ந்து எப்படியும் மைதிலியை அடைஞ்சுடலாம்னு நம்பினேன்.
தேடி அலைஞ்சதோட உச்சத்துல இனி அவளைத் தேடி புண்ணியமில்லைன்னு ஒரு நாள் தெரிஞ்சுது.
அதாவது என் க்ளாஸ்மேட் சந்தானகோபாலனை ரொம்ப நாள் கழிச்சி பார்த்தப்போது பல விஷ்யங்களுக்கு நடுவாந்திரமா அவன் சொன்னான்..
உனக்கு தெரியாதா சிவா….மைதிலி சுச்சர்லாந்துல செட்டிலாயிட்டாளே…கல்யாணமாகி ஒரு கொழந்த இருக்குப்பா…என்றான்.சத்தியமாக எனக்குள் அழுகையும் புன்னகையும் கலந்துகட்டியான ஒரு உணர்வு தாங்க வந்திச்சி.சத்தியமா நான் அவளை வெறுக்கலை.அவ என்ன தப்பு பண்ணா..?அஃப்கோர்ஸ் அவளுக்கு நான் அப்டின்ற ஒருத்தனையே தெரியாது.என் கதைல நானே இல்லை.அவளை எப்படி தண்டிக்க முடியும்…?
அதான் அவளை வெறுக்காம மறக்காம ஒருத்தியை செலக்ட் பண்ணேன்.மைதிலி…இந்த மைதிலி என் மனைவி.;;;இதோ வர்றா பாருங்க…சமையல் ரூம்லேருந்து…
சரி…அப்புறம் வறேன்..ஆஃபீஸ்லேருந்து பாஸ் கூப்டுறார்…பை ஃபார் நவ்.

மைதிலி

இப்பிடித் தாங்க…அத்தனை ரிலாக்ஸா ஈஸி சேர்ல உக்காந்து இருப்பார்.திடீர்னு ஃபோன் வந்தா ஏதோ வெடிக்கப் போற பாமை செயலிழக்க
ஓடுற ஹீறோ மாதிரி வேகவேகமா ஓடுவார்.இவரோட வினோதங்கள் ஒண்ணா ரெண்டா…ஹூம்…
சரி…எங்க விட்டேன்..?
ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டியா நீங்கன்னு பல தடவை கேட்ருக்கேன்.சிரிச்சிட்டே அசடுன்னு உள்ளே எழுந்து போயிடுவார்.மைதிலி மைதிலின்னு ஒரு நாளைக்கு பத்தாயிரம் தடவை கூப்டுவார்.விஷயமே இருக்காது.கூப்டுகிட்டே இருப்பார்.வீட்ல இருக்கும் போது எத்தனை முறை கூப்டாலும் ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் மைதிலி மைதிலின்னு உயிரை வாங்குவார்.
சட்டையை போட்டுகிட்டு கெளம்பி தெரு தாண்டுறதுக்குள்ளே ஃபோன் செய்வார்
இல்லடீ மைதிலி..சும்மா வாக்கிங்க் வந்தேன் மைதிலி….அப்ப எதுத்தாப்ல சின்னச்சாமி வந்தான் மைதிலி.அவங்கிட்டே எதும் குடுத்து விடணுமா மைதிலி..?பிஸ்கட் கேட்டியே மைதிலி..வேற எதுனா வாங்கணுமா மைதிலி..?சொல்லுடா மைதிலி…ஏண்டா மைதிலி எதுமே பேச மாட்றே..?”
ஆரம்பத்தில் எனக்கு எந்த வித்யாசமும் இல்லை.என்னை விட என் பெயரைத் தான் அவருக்கு ரொம்பப் பிடிக்கிறது என்பதை மெல்ல மெல்லத் தெரிந்துகொண்ட பிற்பாடு பலவிதமான உணர்ச்சிகளால் உந்தப்பட்டேன்.இது தப்பா..?சரியா..?இதை எப்படி குறை சொல்வது..?உண்மையிலேயே
என்னை விட அவருக்கு என் பெயரை பிடிப்பதை நானெப்படி குத்தம் சொல்ல முடியும்..?
சின்னதான கீறல் வரும் வரைக்கும் எந்த உறவுக்குள்ளேயும் பிரச்சினையில்லை.முதல் கீறல் தான் விஷயமே..அது வரைக்கும் இல்லாத சந்தேக பூதமெல்லாம் அப்பறம் கெளம்பும்.எல்லாத்தையும் ஆராயும் எது கிடைச்சாலும் துள்ளும்.இது எனக்கும் பொருந்திச்சி.
கட்டில்ல அணைச்சிக்கிறப்ப மூடின கண்ணைத் திறக்காம மைதிலி மைதிலின்னு முனகிட்டே இருப்பார்.கபடி விளையாடும் போது மூச்சை அடக்கி கபடி கபடின்னு பாடுவாங்கள்ல..?அந்த மாதிரி மைதிலி மைதிலின்னு புலம்பித் தவிப்பார்.எனக்கு ஆத்திரமா வரும்.அது என் பேர் தான்.
ஆனா அது உண்மையிலேயே எனக்காக உச்சரிக்கப்பட்டா தானே எனக்கு சந்தோஷம்..?எவளையோ நினைச்சிட்டு என்னை அணைச்சிக்கிறது நரகம் இல்லீங்களா..?
அவர் ஆபீஸ் டூர் போனப்போ என் சித்தப்பா பய்யன் ரகுவை வரச்சொல்லி சேந்திலேருந்து சிலபல பெட்டிகளை இறக்கி அதுல எதாவது இவரோட பழைய டைரி எதும் அகப்படுமான்னு தேடினேன்.எதும் சிக்கலை.ஆத்திரமும் அழுகையுமா இருந்த என்னைப் பார்த்து
பரிதாபப் பட்ட ரகு நா வேணா அத்தான் கிட்டே கேட்கவாக்கான்னு கேட்டான்.வெடிச்சி அழுது வேணாம்டா ரகு அப்பறம் இப்ப ஒட்டிட்டிருக்கிற நூலாம்படையும் அறுந்துடும்னு அனுப்பிச்சேன்.
எனக்கு ரைட்ஸ் இருக்குன்னு தானே சொல்ல வர்றீங்க…அதான்…எனக்கும் அதான் தோணிச்சி…இருங்க குழந்தை ஷிரீஷ் தூக்கத்துல முனகறான்..போயி கொஞ்ச நேரம் தூளியாட்டிட்டு மறுபடி வர்றேன்.

சிவபாதம்

என் மனைவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அவளோட பேர் மைதிலின்றது பார்த்துப் பார்த்து நானே செலக்ட் பண்ணினது.யெஸ்…அந்தப் பேருக்காகத் தான் அவளைத் தேர்ந்தெடுத்தேன்.பட் அதுலயும் ஒரு உப தேர்வு இருக்கிதில்ல..?மைதிலின்ற பேர் உள்ள பல பேர்லேருந்து தானே இவளைத் தேர்ந்தெடுத்தேன்.நான் என்ன சொல்ல வர்றேன்னா…எனக்குத் தேவை ஏதோ ஒரு மனைவி.அது இவளாயிருந்தா.இவளோட பேர் மைதிலியாயிருக்கணும்னு விரும்பினேன்.இருக்கு.இதுல எந்த க்ரைமும் இல்லை.என்னை நானே அட்வொகேட் பண்றேன்னு சொல்லாதீங்க…நான் எந்தத் தப்பும் பண்ணலை.ஒரு இந்திய அப்பர் மிடில் க்ளாஸ் கணவனா என் கடமைகள் அனைத்தையும் என் மனைவிக்கும் எங்களோட இரண்டு குழந்தைகளுக்கும் நிறைவேத்தி இருக்கேன்.இன்னமும் நிறைவேத்த இருக்கேன்.என் மனைவி என்ன கேட்டாலும் உடனே செய்றேன்.இது என் பர்ஸனல்.எனக்கு குடி புகை எந்தப் பழக்கமும் இல்லை.எனக்குப் பிரியமான ஒரு பேரை தனியா கொஞ்சம் ஒர்ஷிப் பண்றேன்.இது தப்பா..?
ஊர்ல இல்லாதப்போ பரண்ல நோண்டறது…என் க்ளாஸ்மேட் வரதராஜன் கிட்டே இவருக்கு ஏற்கனவே மைதிலின்னு யாரையும் தெரியுமான்னு கேட்கறதுன்னு கொஞ்சம் ஷெர்லக் ஹோம்வொர்க் பண்ண ஆரம்பிச்சா என் மனைவி.நான் கண்டுக்கலை.மடியில இருக்கிறது கனமா இருந்தா தானே எனக்கு பயம்..அதிலயும் நான் மந்திரவாதி மாதிரி.எப்பவும் போல இருந்தேன்.
எங்கயிருந்தோ என் காலேஜ் டேய்ஸ் டைரிகள்ல ஒண்ணே ஒண்ணு இவ கையில சிக்கிடுச்சி போல…அழுகை ரௌத்ரம் ஆவேசம் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா எல்லாம் கலந்து பயங்கரமா கேள்வி கேட்டா..ஏன் என்னை கல்யாணம் செஞ்சீங்க…என் பேருக்காகத் தான் என்னை செலக்ட் செஞ்சிருக்கீங்க..உங்க வாழ்க்கையோட முதல் மைதிலி நான் இல்லைல்ல..?உங்க மனசுல இருக்குற ஒரே மைதிலி நான் இல்லைல்ல..?ஏன் என்னை ஏமாத்துனீங்க..?ஏன் என் வாழ்க்கையை பாழ் பண்ணீங்க…ந்னு…நான் ஒண்ணுமே பேசலை.ரெண்டு நாள் அப்டியே விட்டுட்டேன்.அவ எரிச்சல் தாங்காம கெளம்பி மாமியார் வீட்டுக்குப் போயிட்டா..அவளா வரட்டும்னு நான் விட்டுட்டேன்.
எதையும் மறுக்க தோணலை எனக்கு.பட் எதையும் ஆமோதிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை.மேலும் அழுத்தம் தேவையில்லாத வாக்கியங்களை அழுத்தி அழுத்திக் கேள்வியாக்கறதை நான் வெறுத்தேன்.
ஸார்…என்னை பொறுத்தவரைக்கும் நான் செய்யுறது சரி தப்புன்ற வரையறைக்குள்ளயே வராததா கூட இருக்கட்டுமே..எனக்காக நான் எது செஞ்சாலும் அது எனக்கு சரி தானே..?திட்டம் போட்டு அழிச்சாத் தான் தப்பு.கூடவே தான் இருக்கேன்.என் ஆத்ம திருப்திக்கு சில ஏற்பாடுகள் இருக்கக் கூடாதா..?பிடிச்ச பாட்டு பிடிச்ச இடம் பிடிச்ச உணவுன்றாப்ல இது எனக்குப் பிடிச்ச உணர்வு.இதை ஏன் ஏன்னு கேள்வியாக் கேட்டா எங்கிட்ட பதில் இல்லை.இருந்தாலும் சொல்றதுக்கில்ல.என்ன சொல்றீங்க..?

மைதிலி
எனக்கு ஸ்கூல் லைஃப்லேருந்து ஒரே ஒரு தோழி தான்.வளவளன்னு பத்து பேர் கூடப் பழகுறது எனக்குப் பிடிக்காது.ரேவதின்னு பேரு.இப்ப ஜபல்பூர்ல இருக்கா.என்னோட சகலமும் அவளுக்குத் தெரிஞ்சுதான்.அவ கிட்டே பொங்கிப் பொங்கி அழுதேன்.முதல்ல அவ எல்லாரையும் மாதிரி எனக்கு தான் அட்வைஸ் பண்ணினா.இதுல என்ன தப்புன்னு கேட்டா…அழுதேன்.என்ன ரேவதி இப்பிடி சொல்றே..?ஒவ்வொரு தடவையும் அந்தப் பேரால நான் அழைக்கப்பட்டாலும் கூட அது எனக்கான விளித்தலா இல்லைங்குறது புரியலையா..?பிறந்ததுலேருந்து என் கூடவே பயணமாகிற என் பேருக்கும் எனக்கும் இடையில நல்ல பாம்பு மாதிரி நுழைஞ்சி இன்னொருத்தி வெறும் தகவலா இறந்த காலத்து இச்சையா நிறைவேறாத தாகமா ஒவ்வொரு முறை என்னை கூப்பிடும் போதும் அவளும் எரிஞ்சி அணைஞ்சுகிட்டே இருக்கா.இந்த மாதிரி ஒரு விஷயம் எனக்குத் தெரியாமலே இருந்திருந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.இப்ப சர்வ நிச்சயமா தெரிஞ்சுடிச்சி.இதை எப்பிடி ஈசியா எடுத்துக்குறதுன்னு கேட்டேன்.ரேவதி முதல்ல பதில் சொல்லலை.அம்மா வீட்ல நான் கோவிச்சிட்டு இருந்த ஒன்றரை மாசமும் ரேவதி கூட அடிக்கடி பேசுவேன்.நியாயமா ஒரு பேரை மறக்க முயற்சி செய்றதுக்கு உண்டான எல்லா நியாயங்களும் உள்ள மனுஷன் அதுக்கு எதிர்த்திசையில இவ்ளோ தூரம் போவானா..?என் புருஷன் ஒரு பொண்ணு மீதான தன் காதலை அழகா அவ பேர் மீதானதா மாத்திக்கிட்டதை என்னால பொறுத்துக்கவே முடியலை.
ஒரு நாள் ஆத்திரம் தாங்காம என் புருஷனுக்கு ஃபோன் செஞ்சேன்.எடுக்கும் போதே சொல்லு மைதிலி.நல்லாருக்கியா மைதிலின்னாரு…எனக்கு பத்திக்கிட்டு வந்துது.வரும்ல..?ஒரு விஷயம் கேக்கணும்.ஒரே ஒரு விஷயம் தான்.கேக்கலாமான்னேன்.
கேளு அப்டின்னார் முறைப்பா..நல்லவேளை இந்த வார்த்தையோட மைதிலியை சேர்க்கலை.
உங்க வாழ்க்கையில நான் வர்றதுக்கு முன்னாடி ஒருத்திய காதலிச்சிருக்கீங்க..அதென்ன கர்மமோ அது உங்க பாஸ்ட்.அண்ட் பெர்ஸனல்.ஊர்ல அவனவன் ஒன் சைடா லவ்வுல தோத்தா பிறக்குற கொழந்தைக்குத் தான் அந்தக் காதலி நினைவா அவ பேரை வெப்பான்.அதை தன் மனைவிகிட்டேயும் மறைப்பான்..நீங்க மாத்திரம் ஏன் வித்யாசமா இன்னொரு மைதிலியா என்னைத் தேடுனீங்கன்னு கேட்டேன்.நான் இப்பிடிக் கேட்பேன்னு அவர் எதிர்பார்க்கவே இல்லை.
ஒரு நிமிஷத்துல பாதி யோசிச்சவர்..எல்லாரும் முட்டாத் தனம் பண்ணா நானும் பண்ணனுமா..?என் ப்ரியமான பேர் என் பிரியமான ஒருத்திகிட்டே தானே இருக்கணும்.அப்டி தானே இருக்கு இன்னமும்..?கொழந்தைக்கு எப்பிடி காதலுக்குரிய பேரை வெக்கிறது..?ஐம் நாட் மேட்னு இத பத்தி எல்லாம் இனிமே பேசவே விரும்பலை நான்.என் லைஃப்ல லைவா இருக்கிற ஒரே ஒரு மைதிலி நீ தான்.நம்பிக்கை இருந்தா வா.வாழலாம்.இல்லைன்னா உன் விருப்பம் தேவையில்லாம என்னை குற்றம் சாட்டாத அப்டின்னு ஃபோனை கோபமா வெச்சிட்டார்.
ரேவதி கிட்டே சொன்னதுக்கு ஒவ்வொருத்தர் வாழ்க்கைல ஒவ்வொரு சிக்கல்.உன் புருஷன் டீடோட்லர்.சொக்கத் தங்கம்னு உன் வீட்டாரே அவருக்கு சப்போர்ட் பண்றாங்க.இதுல உன் ரெண்டு குழந்தைகளோட நல்வாழ்க்கையை மனசுல வெச்சாவது நீ அவரோட சேர்ந்து பயணம் பண்றது தான் உசிதம்னு தோணுது.பார்த்து செய்யி.ரொம்ப அலட்டிக்காத…மைதிலி அப்டின்னா.
அதுக்கப்பறம் வழக்கமான தமிழ் மிடில் கிளாஸ் மங்கையர்களில் ஒருத்தியா என் புருஷன் வீட்டுக்கு நான் திரும்பி வந்தேன்.ஆச்சு ஐஞ்சு மாசம்.ஆனா….சைலண்டா ஒரு விஷயம் பண்ணேன்.அஃப்கோர்ஸ் யானையை எறும்பு கடிக்கிறாப்ல அது கொழந்தைத் தனமா கூட இருக்கலாம்.என் கூடவே எப்பவும் இன்னொரு மைதிலி அரூபமா இருந்திட்டு இருக்கிறதை என்னால சகிச்சுக்க முடியலை.பட் எனக்கும் என் சுயத்துக்கு சொல்லிக்கிறதுக்கு ஒரு பதில் வேணும்ல..?நானும் ஒரு ஜென்மம் தானே..?இல்லியா..?

சிவபாதம்
அவ்ளோ தான் ஸார்…லைஃப்ல சின்னதும் பெருசுமா எதாச்சும் பிரச்சினை வரத்தான் செய்யும்.இதுக்கெல்லாம் துவண்டுர்றதா..?என் மனைவிக்கும் எனக்குமான பிரச்சினை புரிதல் சார்ந்தது.இப்ப அவ புரிஞ்சுகிட்டா.என்னைப் படுத்துறதில்லை.நானும் அவளும் எதுவுமே நடக்காத மாதிரி கடந்த அஞ்சு மாசமா லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்.எங்கும் மைதிலி எதிலும் மைதிலி எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி இந்தப் பாட்டத் தான் இப்ப என் காலர் ட்யூனாவும் டயலர் ட்யூனாவும் வெச்சிருக்கேன்.அவ ஒண்ணுமே சொல்றதில்லைனா பாருங்களேன்.

மைதிலி
என் குழந்தை மூத்தவ ஜானு வர்ற நேரம் ஆச்சு.ஸ்கூல்லேருந்து வந்ததும் ஆசையா என் கழுத்தை கட்டிக்கும். சின்னவன் ஸ்ரீஷ் எந்த
விவரமும் தெரியாத பாலகன்.இப்பல்லாம் ஜானு தான் எனக்கு ஆறுதல்.ஒன்பது வயசுக்கு அது என்னென்னால் பேசுது..?செமை புத்திசாலி.ஹூம்..குழந்தைகளுக்காகத் தானே வாழ்றோம்..?
எனக்கு மாத்திரம் சொல்லிக்கிறதுக்கு ஒரு பதில் தேவையா இருந்தது.ஒரு சட்டையை உதர்றாப்ல என் பேரை உதறிட்டு போயிடணும்னு தோணிச்சி.என் புருஷனோட வினோதத்தை என்னால கொண்டாடவும் முடியலை.தண்டிக்கவும் முடியலை.பட் நான் செய்ய ஏதாவது வேணும்.இதோ வர்றா என் பொண்ணு ஜானு.இதே போல ஐஞ்சு மாசத்துக்கு மின்னாடி ஒரு நாள் அவ வர்ற நேரம் தனியா அழுதுகிட்டு இருந்தேன்.
ஏன்மா அழுறேன்னு கேட்டா.இல்லடா உனக்கு புரியாதுன்னு சொன்னேன்.சொல்லேன் புரியுதான்னு பாக்குறேன்னா பெரிய மனுஷி.
என் பேரை எனக்குப் பிடிக்கலை கண்ணம்மா.ஐ வாஸ் சீட்டட் பேட்லி பை யுவர் டாடி.அப்டின்னு ஓங்கி அழுதேன்.
இவ்ளோ தானே..?அப்டின்னா
என்னது இவ்ளோ தானா..?அவளை நிமிர்ந்து பார்த்தேன்.
இந்த பார்மா…அப்பா உன்னை டார்ச்சர் பண்றதுக்கு யூஸ் ஆகுற உன் பேரை இன்னியோட நீ தூர எறி.உனக்கு புதுசா ஒரு பேர் வெக்கிறோம் நாம.அதை டாடி கிட்டே சொல்லவே கூடாது.என்னிக்குத் தெரியுதோ தெரிஞ்சுக்கட்டும்.அப்டின்னா..என் மகளை தூக்கி கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சினேன்.
நெறய நேம்ஸை ஆராஞ்சு ஒதுக்கிட்டு கடைசியா அவளுக்கும் எனக்கும் பிடிச்ச ஒரு பேரை எனக்குன்னு வெச்சிக்கிட்டேன்.ஸாரி..அந்தப் பேரை கேட்காதீங்க..எப்டியாவது என் புருஷனுக்கு தெரிஞ்சுடும்.பட் அது தெரியுறதை எவ்ளோ தூரம் ஒத்திப் போடுறேனோ ஐ ஃபீல் குட்.
அவருக்கு தெரியப்போற என் புதுப் பெயரை விட…அது தெரியுற வரைக்கும் எத்தினி காலம் நானும் என் பொண்ணுமா அதை மறைச்சி வெச்சிருந்தம்குறது தான் அவருக்கான பெரிய தண்டனைன்னு நான் நினைக்கிறேன்.என் பொண்ணு கூப்டுறா…போய்ட்டு வரேன்…என்னது…?யெஸ்…என்னோட புதுப்பேரை சொல்லித் தான்.பை.


{உயிர்மை}