Skip to content
தானாய்ச் சுழலும் இசைத்தட்டு
அர்ஜித் சிங்

பாட்டென்பது பைத்தியத்தின் கையெழுத்து. சிந்தியுங்கள். யாரென்றே தெரியாத ஒரு முகத்தை உள்ளுறையும் ஒரு மனதை அவரது குரலை மாத்திரம் அறிந்துகொள்வதன் மூலமாகத் தன் மனசு மொத்தத்தையும் எழுதித் தருவதற்குச் சம்மதிக்கிற பித்து தானே இசை மீதான ரசனை..? உலக அளவில் மற்ற திறமைகளை எல்லாம் விடவும் எளிதில் மனக்கொள்ளை சாத்தியப்படுவது இசையாலணையும் செயல்களால் தான். இன்று நேற்றல்ல. நீ வாசி. நான் தூங்குறேன் என்று ராஜாக்களே அயர்ந்து ராஜ்ஜியங்களை இழந்து திரிந்ததெல்லாம் பழங்கதை. இசை ஸ்வாமி இசை.

இனி சினிமாவில் பாடமாட்டேன்.. அர்ஜித் சிங் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி -  I will no longer sing in movies... Fans are shocked by Arijit Singh's  announcement.

மெல்ல மெல்லத் தன் பழைய தனி முகங்களை இழந்து ஒவ்வொரு தொழிலாய் உலகின் ஒருமித்த முகத்திற்கு மாறினபடி இருக்கிறது. சென்ற நூற்றாண்டின் சலூன்கள் வழக்கொழிந்தன. என் நினைவுக்குத் தெரிந்த வரையில் ரிக்சா சீட் போன்ற சலூன் ஸீட்டின் மீது உயரத்திற்காக மரப் பலகை வைத்து அதன் மீது இருத்தி வைக்கப்பட்டு அந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஒரே கட்டிங் முறைமையான க்ரூ கட் எனப்படுகிற செடியை ஒட்ட வெட்டி விடுகிற தோட்டக்கார மனோபாவத்துடனான முடி ஸ்டைலில் வெட்டி விட்டு நான் இரண்டு கண்களால் முழிப்பது எனக்கே தெரியும் அளவுக்கு முழித்துக் கொண்டு வீடு திரும்பி இனி ரெண்டு மாசத்துக்குக் கவலையில்லை என்றபடியே பாட்டி தயாராய் போட்டு வைத்திருக்கும் சுடுதண்ணீரில் குளித்து விட்டுத் தலை துவட்டி சாம்பிராணியெல்லாம் காண்பித்து வெல்… சென்ற நூற்றாண்டின் தவப்புதல்வர்களில் ஒருவனாய் வளர்ந்தவன் நான்.

சலூன்கள் ஸ்பாக்களாகி விட்டன. சர்வதேச ப்ராண்டிங்குகளும் தேர்ந்த பயிற்சி பெற்ற கலைஞர்களும் முன் கூட்டியே அபாயின்மெண்ட் பெற்ற பிற்பாடே தலையில் கரமாட முடியும். இதில் ஸ்பா என்பது தலைமுடி திருத்துகிற இடம் மாத்திரம் அல்ல. அது வேறொரு உலகம். ரெஜூவனேடிங் என்ற தத்துவம் ஸ்பாக்களை பணம் கொழிக்கும் தொழிலாக்கி இருக்கிறது. மனசை நீவி சுளுக்கெடுத்து மனிதனின் சகல அழுத்த முடிச்சுக்களையும் நிரடி அவிழ்த்து உடம்பையும் மனசையும் ஒருங்கே புத்தம்புதியதாக்கித் தருகிற உடல்போற்றி நிலையத்தின் பெயர் தான் ஸ்பா என்பது.

சென்னைக்கு செல்லும் போதெல்லாம் அங்கே ஒரு ப்ராண்ட் ஸ்பாவுக்கு செல்வேன். அங்கே எனக்கு ஜெய் என்றொரு தோழன் இருக்கிறான். அவனது ஊர் டெல்லி. தலை நகரத்தைச் சேர்ந்த ஜெய் தமிழகத்துக்கு வந்தது 2011இல்.வந்த ஒரே மாதத்தில் ஊர் பிடிக்கவில்லை என்று மறுபடி டெல்லிக்கே ஓடிவிட்டான். எங்கே சென்றாலும் கையில் கத்திரி வாழ்க்கையை நகர்த்தித் தருமல்லவா..? கிடைத்த சம்பளம் போதும் என்று இருந்தவனுக்கு அடுத்த மாதமே மறுபடி சென்னை வரும் படி ஆக்கிற்று வாழ்க்கை.

அவன் சிறுவயதிலிருந்து காதலிக்கிற அவனது உறவுக்காரி பத்மா இனி சென்னை தான்! ஸாரி எங்க ஃபேமிலியே ஷிஃப்ட் ஆகுது என்று கிளம்ப பின்னாலேயே அய்யாவும் வந்து சேர்ந்தாயிற்று. இதெல்லாம்2011இல்.
நான் அவனை முதல் தடவை சந்தித்த போது 2012 என நினைக்கிறேன். என்னை வரவேற்ற ரிசப்ஷனிஸ்ட் எனக்கு ஜெய்யை அறிமுகம் செய்து வைத்தார். எனக்கும் அவனுக்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை. அவன் மிகவும் ஒல்லியானவன். பழுப்புக் கண்களில் அத்தனை ஸ்னேகம் இருக்காது. இந்தியைத் தாண்டி ஒரு வார்த்தை கூடத் தமிழில் தெரியாது. நானோ ஏக் துஜே கேலியே கமல் மாதிரி எத்தனை நேரம் தான் படங்களின் பெயர்கள் பாடல்கள் என்றெல்லாம் பேசி நகர்த்துவது. ஒரு கட்டத்தில் வெறுப்பாகி மௌனமாகவே பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.
Arijit Singh- Best Playback Singer Male 2019 Nominee | Filmfare Awards
அடுத்தடுத்த விஸிட்களின் போது நான் எதிர்பார்த்ததை விட வேகமாகவே அவனுக்குள் தமிழ் பெருக்கெடுத்து ஓடியதை கண்ணுற்றேன்.மச்சான் என்று சொல்லத் தெரியாதவன் உடன் வேலைபார்க்கிற எல்லாரையும் ஹாய் மச்சா என்பான். அது குழந்தைப்பிறழ்ச்சியோடு அத்தனை அழகாக இருக்கும். நான் கஸ்டமர் என்றாலும் நானும் அவனும் ஒருவரை ஒருவர் மச்சா என்றே அழைத்துக் கொண்டோம்.

இடையே எங்கே சென்றான் எனத் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை சென்னையின் இன்னொரு ஸ்பாவுக்கு யதேச்சையாக சென்றேன். அங்கே ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் ஆக ஸ்டைலாக இருந்தவன் ஜெய். என்னைப் பார்த்ததும் ஹாய் மச்சா என்றான். அதே ஸ்பாவில் பெண்கள் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்மாவை அழைத்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். சைகையாலேயே கல்யாணம் எப்போ எனக் கேட்டேன். அவள் ஹிந்தியில் வெட்கப்பட்டாள். இவன் சீக்றமே… உனுக்கு சொல்லாம்யா மச்சா என்றான். ஆறு மாதங்களுக்கு முன்னால் சென்னை விஜயத்தின் போதும் அவனை சந்திக்காமல் இருந்ததில்லை. ஹெட் மஸாஜ் செய்வதில் மச்சா ஒரு சிற்பி. தலை சிறந்த தலைக் கலைஞன்.

மச்சா ஒரு அர்ஜீத் சிங்கின் ரசிகன். அவ்வப்போது வாட்ஸ் அப்பில் எனக்கு அர்ஜித் சிங்கின் சூப்பர் ஹிட்களை அனுப்பி வைப்பான். அவ்வப்போது பேசும்போது இந்தப் பாட்டுக்கெல்லாம் என்ன மச்சா அர்த்தம் என்றால் அவனுக்கு வசப்பட்ட தமிஹிழிந்தியில் எனக்கு அர்த்தம் கற்பிப்பான். அதற்குப் பின்னால் அந்தப் பாடலைக் கேட்பது அத்தனை ரசமாக இருக்கும்.

அர்ஜித் சிங் இந்திய இசைக்குக் கிடைத்த வைரம். ஏற்கனவே 25ஆவது அத்தியாயத்தில் இதே ஸ்பா விசிட் பற்றியும் அர்ஜித் பற்றியும் லேசாக ஒரு விள்ளலும் ஒரே ஒரு பாடலும் பார்த்திருக்கிறோம். போதாது. இது அர்ஜித்துக்கு மட்டுமேயான அத்தியாயம்.மச்சா எனக்கு அடுத்தடுத்து மூன்று அர்ஜித் பாடல்களை அனுப்பினான். அன்றைய தினமெலாம் மயங்கிக் கிறங்கினேன் என்று சொல்லவும் வேண்டுமா.?

தமிழில் இன்னமும் பரீட்சித்துப் பார்க்கப்படாத சிங்கில்ஸ் இப்போது வடக்கே பிரசித்தம். படங்களைப் போலவே பாடல்கள் மாத்திரம் படமாக்கப் படுகின்றன. பெரும் பொருட்செலவில் சீரிய பாடல் வரிகளும் புகழ்வாய்ந்த நடிகர்களும் நடித்து வெறும் பாடல் மாத்திரம் படமாக்கப் படுகின்றன. யூ ட்யூபில் வெளியாகி இத்தகைய சிங்கில்ஸ்கள் கோடிப் பார்வைகளைத் தாண்டி வெற்றி நடை போடுகின்றன. எதிர்காலத்தில் சினிமா பல சின்னஞ்சிறிய கதையாடல்களின் துண்டு துணுக்குகளாக உடையும் என்கிற சென்ற நூற்றாண்டின் சித்தர் ஒருவரின் வாக்குக்கேற்ப சின்னஞ்சிறிய இசை அற்புதமே சிங்கில்.

அப்படியான இந்த சிங்கிலை அர்ஜீத் சிங் தன் ஆன்மாவிலிருந்து பாடி இருப்பதைப் பாருங்கள். இந்த நூற்றாண்டிம் மகத்தான குரல் நம் மனசின் தரையை மெல்ல ஆக்கிரமித்துத் தன் நிறத்தை படர்த்தி சகலமும் தானாகி நிறைவதைப் பாருங்கள். ஒரு மனிதனால் சாத்தியமாகாத அற்புதமான ஆற்றுப்படுத்துதல் இந்தக் குரல். இயல்பான அதே நேரத்தில் இமைக்கவியலாத அபூர்வம் இந்தப் பாடல். ஜாக்கி ஷ்ராஃபின் மகன் டைகர் ஷ்ராஃப் மற்றும் க்ருதி சனான் ஆகியோரது நடிப்பும் ராஷ்மி விராகின் கவித்துவ வரிகளும் அமால் மாலிக்கின் புத்தம் புதிய இசையும் இந்தப் பாடலை தனிக்கச் செய்கின்றன. அதிலும் அர்ஜித் சிங்கின் ஜலதோஷத்துக்கு முந்தைய குரலும் மழைக்குப் பிந்தைய மனவோட்டத்தைப் பிரதிபலிக்கின்ற இந்தப் பாடலின் தொனியும் பிரவாகமாய்ப் பெருக்கெடுக்கும் பின்னணி இசையும் கேட்பவர் மனதில் அழுத்தந்திருத்தமாய்த் தன் தடத்தைப் பதியனிட்டுச் செல்கின்றது.

வானத்துக்குக் கீழே ஒரே உலகமென்பது உள்ளது. பொய்களுக்கும் உண்மைக்கும் எந்த சட்டமுமில்லை. வித்யாசமான வெளிச்சம் தெய்வீக ஒளியாகின்றது. உடல் அடைவதற்கு முன்பாக நிழல் அடைகிற இடம் ஒன்றுண்டானால் வா நாம் அங்கே செல்லலாம்.

அங்கே சென்று அன்பைப் பேணலாம். நாமிருவருமே அங்கு செல்லலாம். வா என்னை அணைத்துக் கொள். ஏன் பயப்படுகிறாய் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வா. என் இதயத் துடிப்பின் இசையைக் கவனி. அதிகாலை என்பது எப்போதும் இரவை சந்திப்பதில்லை அங்கே. நாமிருவரும் ஒன்றாகப் பறந்து அங்கே செல்லலாம் வா. நான் சிறகுகளைக் கொணர்ந்தேன் வா பறக்கலாம். அங்கே செல்லலாம். அங்கே செல்லலாம். நம்மிருவருடைய உலகங்கள் வெவ்வேறானவை. நான் இன்னுமோர் உலகம் இருப்பதையே விரும்புகிறேன். அதையே நானுனக்குக் கூறுகிறேன். நாமங்கு போகலாம் வா.

Jhooth sach ka wahan qayeda hi nahin
Roshni mein wahan ki alag noor hai
Saaye jismon se aage jahaan jaate hain
Chal wahan jaate hain
Chal wahan jaate hain
ஃபக்லி படத்தின் துவான் துவான் பாடல் அர்ஜித் சிங்கின் இன்னுமோர் அற்புதம். உண்மையில் ஆண்மையின் கம்பீரமும் தாய்மையின் குழைதலும் ஒருங்கே இணைந்து ஒலிக்கிற அபூர்வம் அர்ஜித்தின் இந்தப் பாடலின் ஆன்மாவாகிறது. ஒரு பாடலின் நிமித்தம் என்ன..? ஒரு பாடலின் வருகை அதன் திரைப்படுத்துதலை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு சின்னஞ்சிறிய ரகசியத்தை கேட்பவர் மனதுகளில் நேர்த்த முடிவது தான் அதன் மாயம். அர்ஷியா நாஹித் எழுதிய பாடலுக்கு இசை அமைத்திருப்பது ப்ரஷாந்த் வாத்யர். பானி பாண்டேயுடன் இணைந்து இந்தப் படலைத் தன் பொன்வைரக் குரலால் அலங்கரித்திருப்பார் அர்ஜித் சிங்.

என் வாழ்க்கை ஒரு புகையைப் போல இருக்கிறது தற்போது. என் கனவுகள் மங்கிவிட்டன. யாருக்குத் தெரியும் என் சந்தோஷங்கள் எங்கு தொலைந்தன என்று. எனக்கு எந்த இடமுமே தெரியவில்லை. அந்த தினங்களும் அவற்றின் இரவுகளும் எத்தனை அற்புதமாக இருந்தன.. நான் என் கனவுகளோடு உரையாடிய மகிழ்வின் புன்னகை தொலைந்து விட்டதே.. கரையேற வழியில்லை. துணையுமில்லை. எங்கே நான் சேர்வேன் தெரியவில்லை. ஒரு சாலையில் நடமாடுகையில் ஏன் என் வாழ்வு திடீரென்று நிறுத்தப்பட்டதென்று தெரியவில்லை. ஒரு அழுத்தமான சினேகத்தினால் அழுவதற்கோ பயப்படுவதற்கோ ஏதுமில்லை. வாழ்வின் கடைசித் துளி வரை வாழ்வதற்கே விரும்புகிறேன். ஆனால் காலம் பொருந்தாமல் போயிற்று. இப்போது வாழ்வதற்கான காரணம் ஏதுமில்லை. என்ன மாதிரியான புயல் என் வாழ்க்கையில் வீசிற்று என்று ரகசியமாகக் கண்ணீர் சிந்துகின்றேன் இப்போது.

அரிஜித் சிங்குடன் Q+A | ஆத்மார்த்தமான பாடகர் - இந்தியா டுடே

இந்த பாடலைக் கேளுங்கள். நிந்தியா யே லேகி துஜே தாம் ரே என்று தொடங்கக் கூடிய சர்ப்ஜித் படத்தின் பாடல். இந்தப் பாடலை ஒரு புதிய மதத்தின் முதல் பிரார்த்தனையைப் போல ஒரு புதிய நிறுவனத்தின் முதல் கீதத்தைப் போல ஒரு புதிய காதலின் முதல் முத்தத்தைப் போல ஒரு புதிய தொடக்கத்தின் முதல் கனவைப் போல இன்னும் சொல்லில்வராத புத்தம் புதிய உணர்வுகளை எல்லாமும் யாராலும் முடியாத தன் குரல் அகழ்வுகளின் மூலம் இந்திய மெல்லிசையின் புதிய சூர்யனாக அர்ஜித் சிங்கின் விஸ்வரூபத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தப் பாடல் ஒரு துளித் தேன். அர்ஜித் சிங் இதுவரை நிகழாத குரல்ராஜா காலங்களைக் கடந்து நிரந்தரிப்பதற்கான பாடல்களை அதிகதிகம் தந்தவண்ணம் தன் குரலை முன்வைத்தபடி கேட்பவர் மனங்களை எழுதிக் கேட்கும் மாயவசீகரன் அர்ஜித் சிங்.
அர்ஜித் சிங்கின் நல்லிசையைப் போற்றுவோம். இன்னும் பல நூறு பாடல்களை பாடி நம்மையெல்லாம் இதே போல் அல்லது இன்னும் அதிகதிகமாகப் பீடித்திருக்கக் கடவதாக அவரது குரல்.


மீள் பதிவு