தேன் மழைச்சாரல் 6

      தேன் மழைச்சாரல் 6
காணக் கிடைக்காத தங்கம்


 

புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்ற பேருக்குச் சொந்தக்காரரான பி.யு.சின்னப்பா தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் இணையில் ஒருவர். எம்கே.தியாகராஜ பாகவதரின் சமகால சகா. எம்ஜி.ஆரை விட 6 மாதங்கள் மட்டுமே மூத்தவரான சின்னப்பா மண்ணில் வாழ்ந்த வருடங்கள் வெறும் 36 மட்டுமே. பாடி நடிக்கும் முதல் தலைமுறை நடிகர்களில் இனிய குரலும் சங்கீத ஞானமும் நன்கு கைவரப் பெற்றவர். இவரது மகன் ராஜபகதூர் எண்பதுகளின் தொடக்கத்தில் கோயில்புறா உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தார்.

மதியின் திரை நட்சத்திரங்கள்: நடிகர் பி. யு. சின்னப்பா P. U. Chinnappa ,பிறந்த தினம் மே 5 , 1916 .

பி.யு.சின்னப்பாவின் குரல்வளம் அலாதியானது. அவரது தந்தை ஒரு மேடைக்கலைஞர்.சின்னப்பாவின் ஆரம்பகாலம் வறுமை நிறைந்தது. மதுரை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞராக விளங்கிய சின்னப்பா தனது 20 ஆவது வயதில் நாயகனாக நடிக்கத் தொடங்கி பதினைந்து வருடங்களில் 25 படங்கள் நடித்தவர். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய சின்னப்பா பாடிய பல பாடல்கள் அழியாப் புகழோடு ஒலிப்பவை. இளம் வயதில் திடீர் மரணத்தினால் தன் லட்சக்கணக்கான ரசிகர்களை துயரவியப்பில் ஆழ்த்திச் சென்ற சின்னப்பா, நடித்த படங்களுக்காகவும் பாடிய கானங்களுக்காகவும் என்றென்றும் நினைவிலிருப்பவர். அனாயாசமான முகபாவங்களுக்கு உரிய சின்னப்பாவின் வசன உச்சரிப்பு அவருடைய பெரிய பலம். சட்டுச் சட்டென்று குணவுருவை மாற்றிக் கொள்கிற முகவெட்டும் அரிய குழைதலும் கலைதலும் கொண்ட அவரது குரல்வளமும் அவரது செல்வந்தங்கள். வாழ்ந்த காலத்தில் குன்றாவைரமெனப் பரிபூர்ண நடிகராக சின்னப்பா திகழ்ந்தார். அவருடைய நடிப்பில் உருவான ரத்னகுமார்.  கிருஷ்ணன் பஞ்சு இரட்டை இயக்குனர்கள் இணைந்தியக்கி 1949 டிசம்பர் 15 ஆம் தேதி வெளியான படம். இன்றளவும் காண்கையில் சுவை குன்றாத காவியத் தன்மையோடு விளங்குகிற திரைப்படம் இது.

 

மிக எளிய கதை கொண்ட இதில் சின்னப்பா பானுமதி மாலதி எம்ஜி.ஆர் எனப் பலரும் நடித்திருந்தனர். ஏழையானாலும் எளிய வாழ்வை தன் மனைவி மாலதியோடு வாழ்பவன் ரத்ன குமார். காதலித்துக் கடிமணம் புரிந்தவன். மாலதியே தன் உலகம் என்றிருக்கையில் அவன் பாடுகிற கானம் சின்னஞ்சிறியது. ஆனாலும் உயிரிலிருந்து ஒலிப்பது அது.
காதல் கனிரசமே
கற்கண்டே கனிரசமே
கனக வலி சுடரே
சுந்தர ஜோதிட வனிதாமணியே
எனதாசை
காதல் கனிரசமே
கற்கண்டே கனிரசமே
ஒன்றுமே இல்லாமற் போனாலும் ஒரே ஒரு ஒன்றாக எஞ்சக் கூடிய காதலைத் தன் மனமகழ்ந்து மலராக்கிப் படர்த்திக் காட்டுகிற காதல் பேரன்பைக் குரல் வழி நிகழ்த்தினார் சின்னப்பா.இந்தப் பாடலை அடிப்படையாகக் கொண்டு தான் ஆண்பாவம் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்துப் பாடிய காதல் கசக்குதய்யா பாடலின் பல்லவியின் துவக்கச் செல்திசை அமைந்திருக்கும்.
ரத்னகுமார் யதேச்சையாகத் தனக்கு முன் தோன்றிய கெட்ட பூதத்தின் சகவாசத்தால் கிடைத்த செல்வந்தத்தைக் கொண்டு அரசகுடும்பத்து பெண் ஒருவளைக் காதலிக்கிறான். மனைவி மாலதியைத் துச்சமென்று உதறுகிறான். அவனது குற்றங்கள் கண்டறியப்பட்டு அவன் மரண தண்டனை விதிக்கப் பட்டு சிறை செல்கிறான். தனக்கு வாழக் கிடைத்த நல்பெருவாழ்வை வீணாக்கி விட்டதை எண்ணிச் சிறையில் கலங்கிப் பாடுகிறான். அந்தப் பாடல் அத்தனை அரிதானது. அபூர்வமானது. வேறெங்கேயும் காணக் கிடைக்காதது. தமிழ்ப் பா சரிதத்தில் இசை பாடல்வரி பாடிய குரல் என எல்லாவற்றுக்காகவும் என்றென்றும் மெச்சத் தக்க நற்கானம் இது. பாபநாசம் சிவன் எழுதிய வரிகள் இந்தப் படமெங்கும் அலங்கரித்தன. இசையளித்த இருவர் ஜி.ராமநாதனும் சி.ஆர்.சுப்பராமனும் ஆவர். இதனைப் பாடியவர் ஈடிணையற்ற பியு.சின்னப்பா. குரலும் தமிழுமாய்ப் பெருகுவதைப் பாருங்கள்

 

கேலி மிகச் செய்வாள் கேட்டதெல்லாந்தான் தருவாள்

வேலைகளைச் செய்து கொண்டே
வேடிக்கை காட்டிடுவாள்
ஏனடி நீ நேற்றிரவு ஏன் கோபம் கொண்டாயென்றால்
ஏரியிலே மீன் பிடித்தேன் பல் நோவு வந்ததென்பாள்
வீட்டிலே என்றைக்கும் ஓயாமல் உழைத்திடுவாள்
பாட்டிலே உள்ளமெல்லாம் பறிக்கொடுத்தேன் பாருமென்பாள்
கிட்டத்தில் வந்து நின்று ஒட்டி ஒட்டிப் பேசிடுவாள்
கிட்டி அணைந்திடிலோ எட்டி நின்று பேசுமென்பாள்
மாதவளால் கண்ட சுகம் மிக உண்டு கண்டீர்
மாதர்களில்லாமலிந்த மானிலத்தில் வாழ்வுமில்லை
முன் வினையால் நானும் மனமுடைந்து வாடுகையில்
மாதவளைக் கண்டேன் மாலதி நான் என்றாள்
கட்டழகு உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
காணக் கண் கூசும் கருங்குழலாள்
ஒப்புயர்வற்ற ஒய்யார நடையுடனே
எனைக் கண்டு காரணமுங் கேட்டுஊரும் பேரும் ஒளியாமல் கூறுமென்றாள்
பசியாறச் சோறில்லை படுத்துறங்க வீடில்லை…
நசித்திடிந்த சத்திரத்தில் நான் போய் படுத்திருந்தேன்
நடு நிசியில் பேய்க் கூட்டம் வரக்கண்டு பயந்து ஓடினேன் ஓடி ஒளிந்தேன்
அம்மம்மா உனை நான் கண்டேன் தாலி கட்டும் பெண்டாட்டி தங்கு தடை ஏதுமில்லை
நானோர் அனாதை நாதி ஏதுமில்லாதவன்ஆன துயருக்கழவில்லை
ஆதரித்தால் போதுமென்றேன்
அன்று முதல் நாங்கள் அன்பாலிணைந்து விட்டோம்
நகரத்து வீதிகளில் ககனத்துக் கன்னிகை போல்
அவள் ஆடுவாள்
நான் பாடுவேன் அம்பிகை முன் நான் பல
ஆணைகள் இட்ட பின்னர்
நம்பிக்கை கொண்டாள் அந்த நாயகியை
நான் மணந்தேன்
அவள் காணக் கிடைக்காத தங்கம்
மாதவளை நான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
காணக் கிடைக்காத தங்கம்
இன்பமுடன் வாழ்க்கையிலே இளவரசி தனைக் கண்டு என் மனம் பறிக்கொடுத்தேன்
இன்னல்கள் பல நேருமென்று இயம்பினாள்
நீதி பல சொன்னாள் நியாயம் கேட்டாள்
அழுதாள் புலம்பினாள்
அடித்துத் துரத்திவிட்டேன்
என்னிரு கண்ணின் மணியாய் உதித்த மாமணியே
மணியே என் அன்பே அமுதே
என் ஆசைப் பொக்கிஷமே
பண்பே பாரினில் பத்தினி ரத்தினமே
இன்றுனைப் பிரிந்தேன்
இன்றுனைப் பிரிந்தேன்
இன்றுனைப் பிரிந்தேன்

என்று புலம்பி உருகிக் கலைந்து நசிகிறான் ரத்னகுமார். இந்தப் பாடல் முடியும் போது எத்தனை பெரிய கல்மனதையும் அயர்த்தி விடுகிறது. காதலின் சாட்சியவாதம் இது. முழு மனத் திறப்பு அல்லவா இந்தப் பாட்டின் சாரம்..? மனம் திரும்புதலின் ராஜகானம் இது. ஒப்புக் கொடுத்தலின் உச்சபட்ச இயரத்திலிருந்து தன்னையே மெழுகாய்த் திரியாய் ஒளியாய் மாற்றிய இதயத்தின் கேவல் இது. இத்தனை அழகாக இதனைத் திரைப்பாடலில் கொண்டு வந்து மிளிர முடியும் என்பது சாகசம். பி.யு. சின்னப்பாவின் உயரிய குரல் மேதமைக்கொரு சான்றாவணம்.காதலின் கேவலை நசிவை கலக்கத்தை இழப்பின் பெருவாதையை இதை விடத் துல்லியமாக வெளிப்படுத்தி விட முடியாது என்றாற் போல் பாடினார் சின்னப்பா.

ராஜதண்டனை வழங்கப்பட்ட ரத்னகுமார் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். மன்னரை சந்தித்து கெஞ்சுகிறாள் ரத்னகுமாரின் மனைவி மாலதி

மகாராஜா தாங்கள் பிரஜைகளுக்குப் பிதா ஆண்டவனின் பிரதிநிதி குடிகளுக்குக் கண்கண்ட தெய்வம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்ற வேண்டியது தங்கள் கடமையல்லவா..?
மாங்கல்யபிச்சை தாருங்கள் எனக் கெஞ்சுகிறாள்
முடியவே முடியாது என்று மறுத்து விடுகிறார் மன்னர். அவரிடம் அப்படியானால் என் கணவனிடம் இந்த மாங்கல்யத்தை ஒப்படைத்துவிடுங்கள் என்று தன் நெஞ்சில் தவழும் பதக்கத்தைக் கழற்றித் தருகிறாள். அதைக் கண்டதும் மன்னருக்கு அதிர்ச்சி. ரத்னகுமார் தான் 2 வயதில் தொலைந்து போன அவருடைய மகன். ரத்தினபுரியின் இளவரசன். மன்னரே தூக்குமேடை நோக்கி ஓடிச் சென்று தண்டனையை ரத்து செய்து ரத்தினகுமாரை கட்டி அணைத்துக் கொள்கிறார். அதுவரை ரத்னகுமாரை பலவிதங்களில் தொல்லை தந்ததற்கு மன்னிப்புக் கோருகிறார் தளபதி அலையஸ் எம்ஜி.ஆர். ரத்தினகுமார் வாழ்க மகாராஜா வாழ்க என்று எல்லோரும் கோஷமிடுகிறார்கள். சுபம் என்று நிறைகிறது படம்.
கானமுள்ள வரை பி.யு.சின்னப்பாவின் கானமுது ஒலித்திருக்கும் என்பது நிஜம் தானே?
வாழ்க இசை